Wednesday, October 3, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 1)



  திருமாலின் திவ்ய தேசங்கள் 108-ல் பூலோக வைகுண்டமாகிய 'திருவரங்கம்' தலையாயது.
சோழநாட்டுத் திருப்பதிகளுள் முதன்மையானது. 'கோயில், திருமலை,
பெருமாள் கோயில்' என்று பிரதானமாகச் சொல்லப்பட்ட மூன்றினுள்
முதன்மையானது. (அதாவது 'கோயில்' என்றால் ஸ்ரீரங்கம். 'திருமலை' என்றால்
திருப்பதி. 'பெருமாள் கோயில்' என்றால் காஞ்சி வரதராஜப் பெருமாள்
சன்னதி ஆகும்.)
 'பெரிய கோயில்' என்றும், 'பூலோக வைகுண்டம்' என்றும் 'போக
மண்டபம்' என்றும் 'ஸ்ரீரங்க க்ஷேத்திரம்' என்றும் 'ஸ்ரீவைஷ்ணவ ராஜதானி' என்றும் போற்றப்படுகிறது. இத்தலம் பஞ்ச ரங்க ஸ்தலத்தில் ஒன்றாகும்.

சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ் பெற்றது. 2000 ஆண்டுகளாக திருவரங்கத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது. சங்கம் மறுவிய காலத்தில், மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார்களும் (கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரை) திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன.
திருவரங்கம் கோவிலைப் பாதுகாத்து, திருப்பணிகள் புரிய 1966இல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) இக்கோயிலுக்குத் தொழிநுட்ப உதவி அளிக்க முடிவு செய்தது. இந்த நிறுவனம் பாட்ரிக் பால்க்னர், ஜார்ஜ்ரைட், ஜுனைன் அபோயர் ஆகிய நிபுணர்களின் சேவையை அளித்தது. இவர்களுள் ஜுனைன் அபோயர் என்ற பெண்மணி இக்கோயிலின் வரலாற்றையும், அமைப்பையும் நன்கு ஆராய்ந்து பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
ஆசிய பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளிலிள் உள்ள கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனெஸ்கோ அமைப்பு, திருவரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு கலாச்சார பாரம்பரியம் போன்றவற்றை பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை 2017ஆம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது. தமிழகத்திலேயே முதல் முறையாக இக்கோயிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








திருவரங்கத்தில் எல்லாமே பெரியவைகள்.
 நமக்குப் பெருமாள் ஆகிய ஸ்ரீஇராமபிரானாலேயே தொழப்பட்ட இந்த
ஸ்ரீரங்கநாதன் 'பெரிய பெருமாள்' ஆனார். கோவிலும் பெரிது. அதனால் 'பெரிய கோவில்' ஆயிற்று. ஏழு மதில்களும்,
எண்ணற்ற மண்டபங்களும் பெரிது. இதற்குச் சிகரம் வைத்தாற்போல்
இத்தலத்தின் கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கு எழுந்தருளியுள்ள
கருடன் மிகப்பெரியவர். இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர் உரையாசிரியர்,
ஆச்சான்பிள்ளையோ பெரியவாச்சான் பிள்ளை. திருமதில்கள் பெரிது.
இங்கிருந்த ஆச்சார்யார் நம்பிகளின் திருநாமமோ பெரிய நம்பி. தாயாருக்கு
'பெரிய பிராட்டி' என்பது பெயர் இங்கு செய்யப்படும் தளிகைக்கு 'பெரிய
அவசரம்' என்று பெயர். இங்குள்ள வாத்யத்திற்கு 'பெரிய மேளம்' என்று
பெயர். இங்கு தயாரிக்கப்படும் பட்சணங்கட்குப் 'பெரிய திருப்பணியாரங்கள்'
என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக்
கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ 'பெரிய ஆழ்வார்' ஆனார்.



 காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட , உலகின் மிகப் பெரிய ஸ்ரீஅரங்கநாதஸ்வாமி திருகோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.

(ஸ்ரீரங்கம், உலகின் மிகப்பெரிய இந்து ஆலயமாக கருதப்படுகிறது. கம்போடியாவில் 'அங்கோர் வாட்' கோயில் பெரியது எனினும் வழிபாட்டு முறையில் செயல்படாமல் உள்ளது.)

 இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது.
இக்கோயிலானது ஏறத்தாழ 156 ஏக்கர் அதாவது 6,31,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக,
( சுமார் 6,31,000 சதுர மீட்டர் (6,790 சதுர அடி) பரப்பளவும் 4 கிமீ (10,710 அடி) சுற்றளவும் கொண்டது)
 நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.
• மதில் சுற்றுகள் (ஏழு உலகங்கள்)
1.மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று( பூலோகம்)
2.திரிவிக்ரம சோழன் திருச்சுற்று (புவர்லோகம்)
3.அகளங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று (ஸுவர்லோகம்)
4.திருமங்கை மன்னன் திருச்சுற்று (மஹர்லோகம்)
5.குலசேகரன் திருச்சுற்று (ஜநோலோகம்)
6.ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று (தபோலோகம்)
7.தர்ம வர்ம சோழன் திருச்சுற்று (ஸத்யலோகம்)

  ஏழு உலகங்கட்கு உண்டான பெயர்களையே இந்த ஏழு மதில்கட்கு வைத்திருப்பதும், பூலோகத்திலிருந்து ஒவ்வொரு உலகமாக
கடந்து சென்றால் ஏழாவது உலகமாக 'சத்திய லோகம்' இருக்குமோ என்று
எண்ணுவதைப் போல, சத்தியலோகத்திலிருந்தே இந்தப் பெரியபெருமாள் வந்ததால்
அந்த சத்திய லோகத்திற்கு வழிகாட்டுவதைப்போல் ஏழு மதில்களில்
முதலாவது மதிலுக்கு 'பூலோகம்' என்றே பெயரிட்டு எம்பெருமான் பள்ளி
கொண்டுள்ள கருவறை மதிலுக்கு 'சத்தியலோகம்' என்றே பெயர்
வைத்திருப்பதும் தத்வார்த்தமான ஒன்றாகும்.   
 ஏழு திருமதில்களை அடைவதற்கு முன்னால் 8வது திருச்சுற்று ஒன்று
தற்போது ஏழு மதில்களை உள்ளடக்கியதாய் அடைய வளையப்பட்டுள்ளது.
• இதற்கு 'அடைய வளைந்தான் திருச்சுற்று' என்று பெயர். சப்த பிரகாரங்கள்
எனப்படும் ஏழு பிரகாரங்களுக்குள் இது அடங்காது.

       | 'அடைய வளைந்தான் திருச்சுற்று'|

     இந்த 8வது அடையவளைந்தான் திருச்சுற்றில் தற்போதுள்ள மிக உயர்ந்த ராயர்கோபுரமான
தெற்கு கோபுரமே இந்தச் திருச்சுற்றின் நுழைவாயிலாகும். இந்த 'ராயர்
கோபுரம்' கிருஷ்ண தேவராயர் (கி.பி.1509–1529)
 காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும். வைணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு
கொண்ட  இவரால் ஒரே சமயத்தில் நாடெங்கும் ) 96 திருக்கோவில்களில் கோபுரம் கட்டும் பணியை
மேற்கொண்டார் என்று கூறுவர். தலைக்கோட்டை யுத்தத்தில் இவர் ஆட்சி
முறியடிக்கப்பட்டதும் பல கோபுரங்கள் பூர்த்தி அடையாமல் பாதியளவிலேயே
நின்று விட்டன.  அச்சுதராயன் (கி.பி.1530-1542)  எனும் மன்னனால்  முயன்று முற்று பெறாத நிலையில் முதல் நிலையிலேயே நிறுத்தப்பட்டது இந்த ஆலயத்தின் ராஜகோபுரமாகும்.  1979ம் ஆண்டு வரை ஏறத்தாழ 430 ஆண்டுகளாக மொட்டை கோபுரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.

     அடைய வளைந்தான் திருச்சுற்றில் பாதியளவில் நின்று போயிருந்த
ராயர் கோபுரத்தில் திருஷ்டிப் பரிகாரத்திற்கென்று முனிக்கு அப்பனான
ஸ்ரீனிவாசனை எழுந்தருளச் செய்திருந்தனர். இந்த ஸ்ரீனிவாசனுக்கு நித்ய
வழிபாடுகளும் நடைபெற்றன. இந்தக் கோபுர வாசலை முனியப்பன் கோட்டை
வாசல் என்றும் அழைத்தனர்.






    இந்த ராயர் கோபுரந்தான் இன்றைய இந்தியாவின் பெருமைக்கு சிகரம்
வைத்தாற்போன்று ஆசியாவிலேயே பெரிய கோபுரமாகக் கட்டப்பட்டு
திருப்பொலிவோடு செம்மாந்து நிற்கிறது. இவ்வளவு உயரமான கோபுரம்
வேறெந்த திவ்யதேசத்திலும் இல்லை. அகோபில மடத்தின் 44 வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. (இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.)  
  மொட்டை கோபுரம் என்று பெயரைத் தாங்கிய தெற்கு வாசல் இராஜகோபுரம் 13 நிலைகளுடன் கூடிய ஒரு முழுமையான கோபுரமாக மாநில அரசின் உத்தரவின் பேரில் ஸ்ரீ அகோபில மடம் 44வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் ஸ்ரீ வண்சடகோப ஸ்ரீ வேதாந்த தேசிக யதீந்திர மகா தேசிகன் ஜீயர் சுவாமிகளால் அவருடைய  நேரடி பார்வையில் நன்கொடைகளைக் கொண்டே நிர்மாணித்தப் பெருமையைப் பெற்றோர்கள்.

இந்த மொட்டை கோபுர முதல் தள நிலையைக் கொண்ட கற்கட்டடமாக இருந்தது. இதனை ஒழுங்குபடுத்தி திருப்பணி துவக்க விழா 20.05.1979 ல் ஆரம்பிக்கப்பட்டது.

 இக்கோபுரத்தில் சுதைச்சிற்ப உருவங்கள் குறைவுதான். தற்சமயம் 13 நிலைகளுடன் 236 அடி (கலசங்கள் உள்பட) உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது. இதை கட்டி முடிக்க 7 வருடங்கள் 10 மாதங்கள் 8 நாட்கள் ஆகியது. இது தென் கிழக்கு ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் ஆகும்.
கோபுர உச்சியில் 13 செப்பு கலசங்கள் அலங்கரிக்கின்றன. கோபுர திருப்பணி நிறைவு பெற்று குடமுழுக்கு 25-03-1987ம் நாள் இந்திய குடியரசு துணைத்தலைவர், மாநில ஆளுனர், மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் பிரமுகர்கள் மற்றும் பலர் முன்னிலையில் நடந்தது. திருவரங்கம் அதற்கு இரண்டு தினங்களாக விழாக்கோலம் பூண்டதையாரும் மறக்க இயலாது. இது பொழுது பல நிறுவனங்கள் பொது மக்களுக்கு அன்னதானம் செய்தது. பல ஆன்மிக சொற்பொழிவுகளும் நடந்தன.

 இந்த ராஜ கோபுர திருப்பணியினால் ஸ்ரீமத் அகோபில மடம் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீரங்கம் ஆலய வரலாற்றில் நீங்கா இடம் பெற்று விட்டார்கள் எனக் கூறினர். அதுதான் உண்மை. மன்னர்கள் செய்யாததை மட அதிபதி (முனிவர்) நன்கொடையிலேயே சிறப்பான  முறையில் செய்து விட்டார்கள்.
இராஜகோபுரம்
கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள்:

1.7 கோடி செங்கற்கள்
20,000 டன் மணல்
1,000 டன் கருங்கல்
12 ஆயிரம் டன் சிமெண்ட்
130 டன் இரும்பு கம்பிகள்
8,000 டன் வர்ண பூச்சு
ராஜகோபுரத்தின் மொத்த எடை ஒரு இலட்சத்து 28 ஆயிரம் டன்கள்

  கோபுரத்திற்கு அழகு சேர்க்கும் 13 கலசங்கள் பற்றி சிறிது அறியலாம். இவைகள் ஒவ்வொன்றும் தாமிர உலோகத்திலானது. 6 பகுதிகளைக் கொண்டு இணைக்கப்பட்டு.  10.5 அடி உயரம் கொண்டது. இக்கலசங்கள் நன் கொடையாக கும்பகோணம் “திருப்பணித்திலகம்” திருவாளர் S.R.G.  ரெங்கனாதான் அவர்களும் திருமதி லஷ்மி அம்மாள் அவர்களும் வழங்கியுள்ளார்கள். இவர்கள் பெயர்களில் தான் எவ்வளவு பொருத்தம். அருள்மிகு ரெங்கநாதரையும், தாயாரையும் நினைவுப்படுத்துகிறது. இதனால் இவர்களும் ராஜகோபுர நிர்மான வரலாற்றில் நிரந்தரமாக இடம் பெற்று விட்டார்கள். கல்வெட்டுகளின் வாயிலாக இவர்களைப் போல் மற்ற திருப்பணி நன்கொடையாளர்களையும் அறியலாம். இக்கல்வெட்டுக்கள் அனைத்தும்  (எண்பது - 80 கல்வெட்டுக்கள்) ராஜகோபுர அடித்தளத்தில் பதிக்கப் பெற்றுள்ளன. யாவரும் காணலாம். கலசங்கள்:-
 ஒவ்வொன்றின் உயரம் 10.5 அடி, விட்டம் 5 அடி. எடை 135kg, இக்கலசங்களுக்குள்ளும் 1 அடி விட்டமும் 16 அடி உயரமும் உள்ள தேக்கு மர உருட்டுகள் நடப்பட்டு (இவை யோக தண்டு எனப்படும்) இவைகளைச் சுற்றி கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன (இக்கலசங்கள் ஆறு பாகங்களைக் கொண்டது கழற்றி மாட்டி விடலாம்) இடைவெளியில் மொத்தத்தில் சுமார் 100 மூட்டை வரகு தானியம் நிறப்பப்பட்டுள்ளன. கோபுரத்தின் உச்சியில் மூன்று இடி தாங்கிகள் பொருத்தப்பட்டன. இக்கலசங்கள் வரை செல்ல படிகள் உள்ளன. மொத்ததில் இந்த ராஜ கோபுரத்திருப்பணிக்கு செலவிடப்பட்ட நிதியின் மதிப்பு 1,46,36,000 ரூபாய் ஆகும். அதாவது ஒரு1 கோடியே 46 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்கள் என்று அறியப்படுகிறது. ஒரு பிரம்மாண்ட  திருப்பணி நிறைவுற்றது.

கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு திருவரங்க நகரமும் அடங்கியுள்ளது.



"ஸப்த ப்ராகார மத்யே ஸரஸி ஜமுகுளோத் பாஸமானே விமானே
காவேரி மத்ய தேஸே ம்ருதுதரபணிராட் போக பர்யங்க பாகே!
நித்ரா முத்ராபிராமம் கடிநிகிட ஸிர: பார்ஸ்வ வின்யஸ்த ஹஸ்தம்!
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம்!!"

பொருள்:

காவிரிநதியின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்ட கோவிலில் வீற்றிருப்பவரே! ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவரே! இடது கையை இடுப்பில் வைத்து யோக நித்திரையில் இருப்பவரே! ஸ்ரீதேவி, பூதேவி தாயாரால் வணங்கப்படும் திருப்பாதம் கொண்டவரே! ஸ்ரீரங்கநாதரே! உம்மை வணங்குகிறேன்.



இந்த ஏழு பிரகாரங்கள் என்பது யோக நெறியின் ஏழு ஆதாரங்களையும் , மனித உடம்பிற்குக் காரணமான ஏழு தாதுக்களையும் குறிப்பதாகவும், உடம்பினுள்ளே நடுவில் ஆன்மா அமைந்திருப்பது போல, 7 பிரகாரங்களின் நடுவில் பரமாத்மா எழுந்தருளியிருப்பதாக வைணவ ஆன்றோர் கூறுவர்.

ஏழு ப்ராகாரங்களைக் கொண்ட இந்த திவ்யதேசத்தினை ஏழு தலைப்புகளில் அடியேனால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
1.புராணமரபு.  2. அரசியல் வரலாற்று மரபு.
3. சமய மரபு. 4. இலக்கிய மரபு. 5.கோயிற்கலை மரபு. 6. தொல்லியல் மரபு
7.வழிபாட்டு மரபு எனும் ஏழு தலைப்பில் ஆய்வு மேற்க்கொண்டு உங்கள் திருக்கண்களுக்கு விருந்தாக அடியேன் படைத்துள்ளேன்.

இனி ஏழு ப்ராகாரத்தில்  ஒவ்வொரு ப்ராகாரமாக விவரணத்துடன்  கூறி ஏழு தலைப்புகளில் ஆய்வு செய்துள்ள கட்டுரையைத் தொடருவோம்

புராண மரபில் திருவரங்கம் பெரியகோயிலை அறிய
1.மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று( பூலோகம்)
சித்திரை வீதி பகுதியில் நுழைவோம்.......

தொடர்ச்சி அடுத்த பதிவு Post ல பார்ப்போம்...

                 அன்புடன்

     ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்



1 comment:

  1. "பேரும் பெரியது, ஊரும் பெரியது' என்று சொல்வது வழக்கம். காரணம், "கோயில் -பெரியகோயில்; பெருமாள் - பெரிய பெருமாள்; தாயார்- பெரிய பிராட்டியார்; ஊர் - பேரரங்கம்; தளிகை - பெரிய அவசரம்; வாத்தியம் - பெரிய மேளம்; பக்ஷ்யங்கள் - பெரிய திருப்பணியாரங்கள்' என்பதால்தான்

    ReplyDelete