Wednesday, October 24, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 7)


    


அரசியல் வரலாற்று மரபு



 திருவரங்கம்  பெரியகோயில் 'பகுதி - 6' ன் தொடர்ச்சி......

• விஜயநகரத்தின் ராஜ்ஜியத்தை மாபெரும் ராஜ்ஜியமாக கட்டமைத்த ஸ்ரீகிருஷ்ண தேவராயர் கி.பி.1529-ல் இரண்டாவது மனைவிக்கு பிறந்த ஆறு வயது சிறுவனான தனது மகனை இளவரசனாக பட்டம் சூட்டி விட்டு திருவேங்கடமுடையானுக்கு சேவகம் செய்ய நினைக்கிறார். ஆனால் இந்த விசயத்தில் அமைச்சர் திம்மையாவிற்கு சம்மதம் இல்லை. காரணம் சிறுவனை அரசனாக்கினால் ராஜ்ஜியம் வலிமை இழந்துவிடும் என்று கருதுகிறார். ராயர் இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது பாலகன் (திருமலைராயன்) அரியணை ஏற்றுகிறார்.  இந்த சமயத்தில்தான் விதி விளையாடிவிட்டு போகிறது. அரியனை ஏறிய சில மாதங்களிலேயே  ராயரின் மகன்  இறந்து போகிறான்.  யாரோ விஷம் கொடுத்துதான் தனது மகன் இறந்தான் என்பதை ராயர் ஒற்றன் ஒருவனின் மூலமாக அறிகிறார். அரண்மனை வைத்தியனை பிடித்து விசாரிக்கையில் திம்மையாவும் அவரது மகன்களான கோவிந்தராஜூவும், திண்டம நாயகனும்தான் இதனை திட்டம் தீட்டி செயல்படுத்தினர் என தவறாக தெரிய வருகிறது. மூவரது கண்களை பிடுங்கி சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார் ராயர். சிறையிலேயே இவர்கள் இறந்துவிட ராயரை தொடர்ந்து தம்பியான அச்சுதராயர் அரியணை ஏறுகிறார். நோய்வாய்ப்பட்ட நிலையில் 27-10-1529-ல் ராயரை மரணம் தழுவிகொண்டது . ராயரின் மரணத்திற்கு பின்பு விஜயநகரம் அதன்  பலத்தை இழக்கவே முகலாயர்கள் படையெடுப்பு நடத்தி அதன் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றினர்.
இப்படி விஜயநகரத்தின் சரித்திரத்தில் எந்த வம்சமும் வாழையடி வாழையாக தழைத்து வளரவே இல்லை என்பதை வரலாறு தன்
காலச்சுவடுகள் மூலம் குரூர சிரிப்புடன் சொல்லுகிறது.

• மாபெரும் விஜயநகரத்தை கட்டமைத்து ஒட்டுமொத்தத தென்னிந்தியாவையே ஆட்சி செய்த  ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் இடம் வரலாற்றில்  சிறப்பானது மட்டும் அல்ல, தனித்துவமானதும் கூட!.  
திருவரங்கம் பெரியகோயிலில்
ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலத்தைய 34 கல்வெட்டுக்கள் உள்ளன. ஸ்ரீகிருஷ்ணதேவராயரால் இயற்றப்பட்ட 'ஞானசிந்தாமணி'யைப் பெரியபெருமாள் கேட்டுமகிழும் வண்ணம் அதைப் படிப்பதற்காக பண்டிதர்களை நியமித்து  அதற்காக ஸ்ரீபண்டாரத்தி ல் (கோயிற் கருவூலம்) 105 பொன் செலுத்தியது பற்றிய கல்வெட்டு (இரண்டாம் திருச்சுற்று மேற்குத் தாழ்வரை பகுதி - A.R.E.No 295 of 1950-52)  கூறுகிறது. இது ராயரின் மகன் இறப்பதற்கு முன்பு (கி.பி.03-02-1526) திருவரங்கம் பெரிய கோயிலில் ஏற்படுத்தப்பட்ட கட்டளையாகும். 
 • அச்சுத தேவ ராயன் (கி.பி.1529-1542)
                    கி.பி.1529ல் கிருஷ்ணதேவராயரின் ஒன்று விட்ட தம்பி அச்சுத தேவ ராயன்  விஜயநகரப் பேரரசின் அரியணை ஏறினார். (இவனுக்கு மூன்று முறை முடிசூட்டுவிழா நடைபெற்றது.)  அச்சுத தேவ ராயன் முடிசூட்டிக் கொண்ட போது பேரரசில் நிலைமைகள் அவனுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்த அமைதியும், வளமும் குறையத் தொடங்கியது. சிற்றரசர்களும், பகைவர்களும் பேரரசை வீழ்த்துவதற்கான காலத்தை எதிர்பார்த்து இருந்தனர். இவற்றுடன்கூட கிருஷ்ண தேவராயனின் மருமகனான அலிய ராம ராயனின் போட்டியையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது.


• ஸ்ரீகிருஷ்ண தேவராயனைப் போலவே திருவேங்கடமலைக் கோயிலில்  அச்சுதராயன் தன் மனைவி திருமலாம்பாவுடன் திருவேங்கடத்துறைவனை வணங்கியவாறு
தனது சிலையினைச் செய்து வைத்தான் (அதன் பின்பே இரண்டாவது மனைவி 'வரதாம்பிகா'வை மணந்தான்).



• விஜயநகர பேரரசின் கீழ்க்கோட்டை மற்றும் 
மேல்க்கோட்டை என்று அமைந்துள்ள (திருமலா-திருப்பதி மலை அடிவாரத்தில்) சந்திரகிரிக் கோட்டை வளாகத்திற்குள் எட்டு உருக்குலைந்த சைவ, வைணவக் கோவில்களும், இராஜா மஹால், இராணி மஹால் மற்றும் சில சிதைந்த கட்டமைப்புகளும் இன்றும் உள்ளன. அச்சுதராயனுக்கு பிரியமான சந்திரகிரிக் கோட்டை இராஜாமஹாலிலும் விஜயநகர அரசர்களான ஸ்ரீகிருஷ்ணதேவராயர் மற்றும் அவருடைய இரு மனைவிகளான சென்னாதேவி மற்றும் திருமலாதேவியுடனும் காட்சி தரும் ஆளுயர வடிவிலான உலோகச் சிற்பங்களும் வெங்கடபதிராயர் மற்றும் ஸ்ரீரங்கராயர் ஆகியோர் அவரவர் அரசியுடன் காட்சிதரும் ஆளுயரக் கற்சிற்பங்களும் உலோகச் சிற்பங்களும் தர்பார் மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். 
• ஸ்ரீகிருஷ்ணதேவராயர்  ஒரே சமயத்தில் நாடெங்கும் (அவரது ஆட்சிக்
காலத்தில்) 96 திருக்கோவில்களில் இராஜ(ய) கோபுரம் கட்டும் பணியை  மேற்கொண்டார்
 என்று கூறுவர். தலைக்கோட்டை யுத்தத்தில் இவர் ஆட்சி முறியடிக்கப்பட்டதும் பல கோபுரங்கள் பூர்த்தி அடையாமல் பாதியளவிலேயே நின்று விட்டன.
 அவ்வாறு திருவரங்கம்  8வது திருச்சுற்றில் ராயர்கோபுரமான (தெற்கு கோபுரம்) ஸ்ரீகிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும். பின்பு அச்சுதராயனால் தொடரப்பட்டு பாதியிலேயே கைவிடப்பட்டது என்று கூறுவர்.
• திருவரங்கம் ஏழாவது பிராகாரத்தில் விஜய நகர சமஸ்தான அரண்மனை இருந்தது. 16-ஆம் நூற்றாண்டில் அச்சுதராயர், திருவனந்தபுரத்தின் மீது படையெடுத்தபோது, இந்த அரண்மனையைக் கட்டினார். அப்போது தன் மைத்துனனைப் படைகளுடன் திருவனந்தபுரம் அனுப்பினார். அவன் வெற்றியுடன் திரும்பும் வரை (கி.பி.1530ல்) திருவரங்கத்திலேயே தங்கி அச்சுதராயர் இருந்தார்.  ஒரு முறை கிருஷ்ண ஜயந்தி உற்சவத்தின் போது ஸ்ரீரங்க நாதனும், கிருஷ்ண பரமாத்மாவும் திருவீதிவுலாவாக எழுந்தருளினர். தனது அரண்மனைக்கு முன்னால் ஸ்வாமிக்கு ஓர் உபயம் ஏற்படுத்தி னார் அச்சுத ராயர். அதற்காக ஏராளமான மானியங்களை ஏற்படுத்தினார். அந்த உபயம் இன்றும் தொடர்கிறது. (அரண் மனை இருந்த இடத்தில் பின்னர் ‘வாணி விலாஸ் பிரஸ்’ செயல்பட்டது. ஏராளமான ஞான நூல்களை வெளியிட்ட அந்த அச்சகம் இப்போது அங்கு இல்லை. அங்கு அச்சுதராயர் ஏற்படுத்தி வைத்த உபயம் இன்றும் நடக்கிறது). 
திருவரங்கம் பெரியகோயிலில் அச்சுதராயன் காலத்தைய 56 கல்வெட்டுகள் தற்போது கிடைக்கின்றன.
• கி.பி.1530 ஜனவரியில் அச்சுதராயர்   திக்விஜயம் நிகழ்ந்ததையும், அதே ஆண்டு மார்ச் இரண்டாம் நாளில்  அவனது படைகள் திருவனந்தபுரம் திருவடி மன்னரை வெற்றி பெற்றதற்காக 'ஜய ஸ்தம்பம்' (வெற்றித்தூண் - அகளங்கன் திருச்சுற்றில் உள்ள திருப்பாணாழ்வார் சந்நதி எதிரே உள்ளது.) 


நாட்டியதாக சேனைமுதலியார் கிழக்குப்பக்கச் சுவர் (02-03-1530) கல்வெட்டு  (A.R.E.No. 316/1950-51) கூறுகிறது.
• சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ள சம்பு காவியங்களுள் மிகச்சிறந்ததாக மதிக்கப்பெறும் 'வரதாம்பிகா பரிணய சம்பு' எனும் நூல் அச்சுதராயன் மனைவி திருமலாம்பாவால் எழுதப்பெற்றது.
கி.பி.1532 ல் திருவரங்கம் வருகை தந்த விஜயநகர ராணி திருமலாம்பா, தான் இயற்றிய 'பக்த சஞ்சீவி'     எனும் நூலில் அமைந்துள்ளவற்றை திருவரங்கம் அரையர்கள் நடித்துக் காண்பிப்பதற்காக 'அணிலை' எனும் ஊரில் நிலம் (கி.பி.12-09-1532 அன்று)அளித்ததை திருவரங்கம் பெரியகோயில் கல்வெட்டு (A.R.E.No. 308/1950-51) மூலம் அறியலாம்.  
• கி.பி.1543ல் அச்சுத தேவ ராயன் இறந்ததைத் தொடர்ந்து, சிறுவனாக இருந்த 'சதாசிவ ராயன்' (கி.பி.1542-1570) முடிசூட்டப்பட்டான். இவனும் ஆரவிடு மரபினனுமான
அலிய ராமராயனின் வலுவான ஆதரவினாலேயே ஆட்சி செய்ய முடிந்தது. சதாசிவ ராயனது ஆட்சிக் காலம் முழுவதும் அலிய ராம ராயனே அரசன் போல் செயல்பட்டு வந்தான்.
 கி.பி.1565ம் ஆண்டு சனவரி மாதத்தில் தக்காணச் சுல்தான்கள் ஒன்றிணைந்து, தலிகோட்டை சண்டையில், அலிய ராம ராயனின் விஜயநகரப் பேரரசின் படைகளை தோற்கடித்தனர். இப்போரில் விஜயநகரப் பேரரசின் படையில் இருந்த இரு முஸ்லிம் படைத்தலைவர்கள் தங்கள் படையணிகளுடன் தக்காணச் சுல்தான்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால், போரில் விஜயநகரப் பேரரசு தோற்றது என வரலாற்று அறிஞர்களான 'ஹெர்மன குல்கே' மற்றும் 'டயட்மர் ரோதர்மண்ட்' கூறுகிறார்கள். போரில் கைதியாக பிடிபட்ட இடத்திலேயே, சுல்தான்கள் கிருஷ்ணதேவரயரின் மருமகனான அலிய ராம ராயனின் தலையை கொய்தனர்.  மேலும் சுல்தான்கள் ஹம்பி எனும் விஜயநகரத்தின் கோயில்களையும், கோட்டைகளையும் சிதைத்து அழித்தனர்.

• விஜயநகர வீழ்ச்சி:-
தலிகோட்டா சண்டையில் இறந்த அலிய ராம ராயனின் தம்பியும், ஆரவிடு மரபைத் துவக்கியவனுமான திருமலை தேவ ராயன், தற்கால ஆந்திரப் பிரதேசத்தின் பெனுகொண்டாவிற்கு விஜயநகரப் பேரரசின் தலைநகரை மாற்றினார். தலைக்கோட்டைப் போரின் முடிவில் விஜயநகரப் பேரரசு வலுவிழந்தபோது, பேரரசின் கீழிருந்த மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள் மற்றும் செஞ்சி நாயக்கர்கள் தனிவழி செல்லத் தொடங்கினர். வேறு சிலர் திருமலை தேவ ராயனுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1572ல் திருமலை தேவ ராயனை அரியணை விட்டு விலகிய போது, மீதமிருந்த விஜயநகரப் பேரரசை தனது மூன்று மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். 1614ல் அரவிடு மரபினரின் விஜயநகரப் பேரரசு, பிஜப்பூர் சுல்தானகம் மற்றும் பிற சுல்தான்களின் தொடர் படையெடுப்புகளால் உருக்குலைந்து, இறுதியாக 1646ல் விஜயநகரப் பேரரசின் ஆட்சி முடிவிற்கு வந்தது.
விஜயநகர பேரரசின் வீழ்ச்சியின் போது தென்னிந்தியாவில் மைசூர் அரசு, கேளடி நாயக்கர்கள், மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள், சித்திரதுர்க நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆட்சி செலுத்த துவங்கினர்.  
• • நாயக்க மன்னர்களின் எழுச்சி:-
         'நாயக்கர்' என்னும் சொல் நாயக் என்னும் வடசொல்லின் திரிபாகும். இச்சொல் முதலில் தலைவன் என்னும் பொருளில் வழங்கி வந்து, பின்பு படைத்தலைவனைக் குறிக்கலாயிற்று. விசயநகரப் பேரரசில் இச்சொல், அப்பேரரசின் பகுதிகளாய் இருந்த தஞ்சை, செஞ்சி, இக்கேரி, வேலூர், மதுரை ஆகியவற்றை அரசச் சார்பாளர்களாகவோ (viceroys), ஆளுநர்களாகவோ (Governors) இருந்து ஆட்சி செய்தவர்களைச் சிறப்பாகக் குறிப்பிடலாயிற்று.
• விசயநகரப் பேரரசின் பகுதிகளாய் இருந்த தஞ்சை, செஞ்சி, இக்கேரி, மைசூர், வேலூர் இவற்றைப் பற்றி இங்குப் பார்க்கலாம். தஞ்சை விசய நகரப் பேரரசின் ஒரு பகுதியாக கி.பி.1532இல் அமைந்தது. தஞ்சையில் முதன்முதலில் நாயக்கர் ஆட்சியைத் தொடங்கியவர் செவ்வப்ப நாயக்கர் ஆவார். செஞ்சியும் கி.பி.1526இலிருந்து விசயநகரப் பேரரசிற்கு உட்பட்டு இருந்தது. செஞ்சியில் முதன்முதலில் நாயக்கர் ஆட்சியைக் கிருஷ்ணதேவராயர் காலத்தில் தொடங்கி வைத்தவர் வையப்ப நாயக்கர் என்பவர் ஆவார். கி.பி.1540இல் இக்கேரி என்னும் இடம் (இது மைசூரில் அடங்கிய ஷிமோகா ஆகும்) விசயநகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. சதாசிவன் என்பவன் இக்கேரியில் நாயக்கர் ஆட்சியைத் தொடங்கிவைத்தான். இக்கேரியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்ததால் இவர்களை இக்கேரி நாயக்கர் என்பர்.
செஞ்சி நாயக்கருக்கு அடங்கிய நாயக்கர் ஆட்சி வேலூரில் ஏற்பட்டது. அங்கு நாயக்கர் ஆட்சியை நடத்தியவர் வீரப்ப நாயக்கர் என்பவர் ஆவார்.
• துளுவ வம்சத்து மன்னர் துளுவ நரச நாயக்கரின் மகன்களாகிய
ஸ்ரீகிருஷ்ணதேவ ராயருக்கும், அச்சுத தேவ ராயருக்கும் இரு தளபதிகள் இருந்தனர். ஒருவர் திம்மப்பா நாயக்கர் , மற்றொருவர் நாகம்ம  நாயக்கர். இந்த திம்மப்பா நாயக்கரின் மகன் தான் செவப்ப நாயக்கர். இவர்தான் தஞ்சையில் நாயக்க ஆட்சியை தோற்றுவித்தவர்.
திம்மப்பா நாயக்கருக்கு 4 மகன்கள். அவர்களில் இரண்டாவது மகன்தான் செவப்ப நாயக்கர். இவர் அச்யுத நாயக்கரின் மனைவியாகிய திருமலம்பாவின் தங்கை மூர்த்திம்பாவாய் திருமணம் செய்த கொள்கிறார். அப்போது தனக்கு சீதனமாக தஞ்சாவூரை தர வேண்டுமென அச்யுத நாயக்கரிடம் கேட்டு பெற்று கொண்டு , தஞ்சையில் நாயக்க ஆட்சியை தோற்றுவித்தார்.
கி.பி.1509 முதல் 1529 வரை கிருஷ்ணதேவ ராயர் ஆட்சியின் கீழ் மட்டமே தஞ்சை இருந்தது .
கி.பி.1529 ல் கிருஷ்ணதேவ ராயர் தனது சகோதரர் அச்சுதன் ஆட்சிக்கு வரட்டும் என்று கூறி விட்டு இறந்து விடுகிறார்.
தன்னுடைய சகலையாகிய அச்சுத தேவராயருக்கு கப்பம் கட்ட மறுத்து தானே இனி தஞ்சையின் மன்னன் என கூறி செவப்ப நாயக்கன் தனக்கென தனி அரசை உருவாக்குகிறான்.
• ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் தளபதியான
நாகம்ம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயக்கர். இவர்  தான் "மதுரையில் நாயக்க ஆட்சி"யை தோற்றுவித்தவர். இவரைப் பற்றிய வரலாற்றோடு அடுத்த பதிவு-Post ல (பகுதி 8) தொடர்வோம்.

                 அன்புடன்

     ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் 



No comments:

Post a Comment