Monday, September 17, 2018

கலையிலங்கு மொழியாளர் (பகுதி -2)




(ஸ்ரீரங்கம் கீழச்சித்திரை வீதி ஸ்வாமி பெரிய நம்பிகள் திருமாளிகை வாசலில் 07.01.2016 அன்று 'ஸ்ரீவைஷ்ணவ தாஸர்கள் என்ற சீர்மிகு ராமாநுச தாஸர்கள் ' புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது

~ |'செல்லப்பெருமாள் கோனார் கதை' |~

பற்றி அரங்கராஜன் ஸ்வாமி கூற அடியேன் கேட்டது )

¶||*    1930 ஆம் ஆண்டினின்று 1962 ஆம் ஆண்டு வரை
தீவிர திராவிடத் தொண்டராக இருந்த
மா. செல்லப் பெருமாள் கோனார் ஒரு மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி தெருவில் வாழ்ந்தவர். ’தந்தை பெரியார்’ என்றழைக்கப்பட்ட ஈ.வே.ராமசாமி நாயக்கர் மதுரை வந்தால்  செல்லப் பெருமாள் கோனார் வீட்டில் தான் தங்குவாராம்.

1962 ஆம் ஆண்டின் மார்கழி மாதத்தில் மதுரை அழகர் கோயிலில் நம் இரா.அரங்கராஜன் ஸ்வாமிகள்  திருப்பாவை உபன்யாசம் நடந்துக்கொண்டிருக்கிறார். அன்று மார்கழி கேட்டை – பெரிய நம்பிகள் திருநட்சத்திரம் வேறு. ( ஸ்ரீராமானுஜரின் ஆச்சார்யன் ஸ்ரீபெரியநம்பிகள் ஆவார் ).
“தாழ்ந்த குலத்தில் பிறந்த மாறநேர் நம்பி ஆசாரியன் திருவடிகளை அடைந்த போது (காலமான போது) மாறநேர் நம்பிக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார் பெரிய நம்பிகள் என்கிற
 உபன்யாசக் கதைப் பகுதி செல்லப் பெருமாள் கோனார் அவர்களின் காதுகளில் விழ அவர் மனம் அக்கணமே ஆஸ்திக வழியினை பின்பற்றியது.
இவ்வளவு காலம் நாஸ்திகவாதம், பகுத்தறிவு என்று காலத்தை வீண் செய்துவிட்டேனே என்று மனம் வருந்தி, மறுநாள் காலை அழகர் கோயிலில்  நூபுரகங்கையில் குளித்துவிட்டு, தன்னுடைய கருப்பு துணிகளை வீசி எறிந்துவிட்டு திருமண் காப்பு, ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு நம் அரங்கராஜன் ஸ்வாமி முன்பு முன் வந்து நின்றாராம்.
 தான் ஒரு தீவிர ஸ்ரீவைஷ்ணவன் ஆக வேண்டும் ”எனக்கு சமாஸ்ரயணம் செய்துவைக்க உதவ வேண்டும்” என்று கேட்க. பெரிய நம்பிகள் பற்றி காதில் விழுந்து ஒரு இரவில் மாறிய உங்களுக்கு (நம் ஸ்வாமியை விட வயதில் மூத்தவர் செல்லப்பெருமாள் கோனார்) ஸ்ரீரங்கத்தில் பெரிய நம்பிகள் திருமாளிகையில் அவர்கள் வம்சத்தவர்கள் செய்து வைப்பது தான் நன்றாக இருக்கும் என்று கூற செல்லப் பெருமாள் கோனாரும் ஸ்ரீரங்கம் விரைந்தாராம். இரவு போய் சேர்ந்த அவர் பெரிய நம்பிகள் வீட்டு வாசலில் படுத்துக்கொண்டார். காலை பெரிய நம்பிகள் வீட்டில் இருந்தவர்கள் விசாரிக்க இவர் வந்த காரணத்தை சொல்லி அவர்களிடம் 'சமாஸ்ரயணம்' செய்துக்கொண்டு உண்மையான ஸ்ரீவைஷ்ணவனாக மாறினார்.
அதன் பின் ஸ்ரீகாஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகளிடம் இருந்துக்கொண்டு அவருக்கு பல  கைங்கரியம் செய்துக்கொண்டு இருந்தார். அண்ணங்கராசாரியார் செய்த சொற்பொழிவுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து 1976ஆம் வருஷம் ஒரு சின்ன புத்தகத்தை அச்சடித்து பலருக்கு கொடுத்தார். ¶||*

 ✒  பரம்பரை பரம்பரையாக காடிக்கஞ்சி அல்லது புளிஞ்சதண்ணி எனும் மருந்து தரும் வைத்தியப் பிண்ணனியும், மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணனின் மலரடி தொழும் வைணவப்பிண்ணனியும் பெற்ற திருமால் சோலைமணி (இராமக்காரர்) என்கிற வைணவமணி மட்டுமல்லாது வைணவப் பற்றுடைய வடக்குமாசி வீதி இடையர்கள் பலரும் நம் அரங்கராஜன் ஸ்வாமியின் அன்பிற்குரியோராய் இருந்தனர். அண்ணா கடை நம்மாழ்வார் நாயுடு, அவரது தம்பி சௌந்தரராஜன் நாயுடு, கந்தகப்பொடி கைங்கர்யம் டிரில் மாஸ்டர் சௌந்தரராஜன் நாயுடு, கோவிந்த ராமாநுச தாஸர் (அரங்கராஜன் ஸ்வாமிக்கு  ஆதிசேஷனைப் போன்றவர்), மதுரை ஸ்ரீசரண்யாபிமத விஷ்ணுசித்த ராமாநுச கூடம் டிரஸ்ட்டில் ஒருவரான தியாகி T.V. ராமக்கோனார், அ.வீ.நவநீதகிருஷ்ணன் ( பலசரக்கு கடைஅண்ணா), வே.ராமலிங்கம் (இவர்கள் இருவரும் அரங்கராஜன் ஸ்வாமிக்கு துவாரபாலகர்கள் போன்றவரர்கள்),மதனகோபாலன்(அண்ணா) ஞா.ராஜேந்திரன்(க.இ.பரம்பரை),ரெங்கராமாநுச தாஸர்(அருணகிரி), இரா.மணிகண்டன், ஆகியோர் அரங்கராஜன் ஸ்வாமிக்கு அன்பர்களாய் இருந்த வடக்கு மாசி வீதி வைணவ மணிகள் ஆவார்கள்.

  ✒ கூடலழகர் திருக்கோயிலில் மார்கழி மாதம் அத்யயன உத்ஸவம்  திருவரங்கத்தில் நடப்பது போலவே சீரும்,சிறப்புமாக நடந்திட காரணமாக இருந்தவர் நம் அரங்கராஜன் ஸ்வாமி ஆவார்.
  
✒ 2006 ம் ஆண்டு ஸ்ரீகூடலழகர் திருக்கோயில் மகாசம்ரோட்சணம் நடந்திட பெரும் பங்கு வகித்தார். அக்கோயிலில் வாரம் தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையன்று தெற்கு ஆடி வீதி பகுதியில் ஸ்ரீகூடலழகர் சித்திரத்தின்  கீழே திருமால் திருக்கதைகளை சாதாரண சம்சாரிகளும் உய்யும்படி சொல்லிவந்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடலழகர் கோயிலுக்கு அருகிலுள்ள ஸ்ரீசரண்யாபித விஷ்ணு சித்த ராமாநுச கூடத்தில் வைணவ அன்பர்களுக்கு மட்டும் ரஹஸ்ய க்ரந்த காலட்சேபம் நடத்தி வந்தார்.  வைகுண்ட ஏகாதசியன்று மட்டும் (மார்கழி மாதத்து) திருப்பாவை உபன்யாசத்தினை 'திருமோகூர்' திவ்யதேசத்தில் நடத்துவார். அன்று வைணவ அன்பர்கள் திருக்கூடல் திவ்யதேசத்திற்கு நடந்தே  செல்வார்களாம். வழித்துணைப்பெருமாள் அல்லவா நம் திருமோகூர் ஆப்தன். இருந்த போதிலும்  மதுரை சார்ந்த வைணவ மணிகள் 1980,90களில் அரங்கராஜன் ஸ்வாமியையே வழித்துணைப்பெருமாளாகக் கொண்டாடினர் என்றால் மிகையாகாது.
திவ்யதேச யாத்திரைகளுக்கு வைணவ அன்பர்களை ஒன்றினைத்து அமைப்பாளராகவும், வழிகாட்டியாகவும் கைங்கர்யம் செய்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

  ✒ மதனகோபால ராமாநுசதாஸர், திருக்கூடல்.செ.ஜகந்நாத பராங்குச தாஸர்,கிருஷ்ணப்பிரியன் போன்ற இளைய தலைமுறை பாகவத மணிகள் அரங்கராஜன் ஸ்வாமிக்கு மிகவும் அணுக்கர்களாய் இருந்தனர். இவர்களில் ஸ்வாமியின் பேச்சாற்றல் வாரிசாக ஜகந்நாத பராங்குச தாஸரும், அறிவாற்றல் வாரிசாக மதன கோபால ராமாநுச தாஸரும் திழ்ந்தனர். மதன கோபால தாஸர் நம் அரங்கராஜன் ஸ்வாமியின் 'மன்னு புகழ் மணவாள மாமுனிகள்' எனும் படைப்பிற்கு 'நம்பெருமாள் வனவாசம்' பற்றிய பகுதிக்கு பெரும் உதவியாக இருந்து ஆச்சார்ய அபிமானம் பெற்றவர். இதனை அரங்கராஜன் ஸ்வாமியே அந்நூலின் நன்றியுரையில் பதிவு செய்துள்ளார்.  இதனை ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாச்சாரியர் படைப்பாக 'நம்பெருமாள் வனவாசம் அல்லது திருவரங்கன் உலா, என்ற தலைப்பிடப்பட்ட நூலின் தொகுப்பாசிரியராக கைங்கர்யஸ்ரீ. மதனகோபால தாஸரை சேர்துக்கொண்டார்.



மேலும் சீர்மிகு ராமாநுச தாஸர் நூலின் அட்டைப்படமான ஸ்ரீராமாநுசர்  மற்றும் தாஸர் கோஷ்டி படமானது மதன் ஸ்வாமியின் படைப்புத் திறமையினை பறைசாற்றும் கைங்கர்மாகும்.



மதுரை  கொடிக்குளம் ஜோதிஷ்குடியில் வைணவ குருபரம்பரை ஆச்சார்யரான பிள்ளை லோகாச்சாரியர் திருவரசு நம்பெருமாள் மறைத்து வைக்கப்பட்ட குகை ஆகியனவற்றை கண்டுபிடித்து அரங்கராஜன் ஸ்வாமி மூலம் உலகிற்கு அறிவித்தவர் மதன் ஸ்வாமியே ஆவார். அடுத்ததாக கிருஷ்ணப்பிரியன்  நம் அரங்கராஜன் ஸ்வாமிக்கு வாழித்திருநாமமே பாடியுள்ளார் என்றால் அவரது ஆச்சார்ய ர் பக்தியின் மேன்மையை விரிவாக கூறவேண்டியதில்லை.

✒ பேரா.தொ.பரமசிவன்,பேரா.ம.பெ.சீனீவாசன், பேரா. வெ.வேதாசலம், சாந்தலிங்கம் போன்ற மதுரை சார்ந்த ஆய்வாளர்களும், திரு.சொ.சொ.மீ.சுந்தரம், திரு. தா.கு. சுப்பிரமணியம் போன்ற சமயச் சொற்பொழிவாளர்களும் நம் அரங்கராஜன் ஸ்வாமியிடம் நட்பு பாராட்டினர். மதுரை கம்பன் கழகம் அரங்கராஜன் ஸ்வாமி என்கிற ஒரேஒரு வைணவ பேச்சாளரைங் கண்டு திகைத்தது என்றால் அது மிகையாகாது.  கம்பநாட்டாழ்வார் ஒர் தலைசிறந்த வைணவர் என்கிற வாதத்தின் மூலம் மாற்றுச்சிந்தனையாளர்களை அதிர்வடைய வைத்தார். ஸ்வாமியின் பேச்சாற்றலைக் கண்டு சாலமன் பாப்பையா பட்டிமன்ற நடுவர்களும் போன்றோரும் வியந்துள்ளனர்.

✒  ஸ்ரீ உ.வே.கிருஷ்ணஸ்வாமி  அய்யங்கார் (ஸ்ரீஸுதர்சனர் ஸ்வாமி) மற்றும் ஸ்ரீ.உ.வே. கிருஷ்ணமாச்சாரியார் (ஸ்ரீபாஞ்ச சன்னியர் ஸ்வாமி- ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ) ஆகியோர்களின் அன்பிற்குரியவர்  நம் அரங்கராஜன் ஸ்வாமி. இரு ஸ்வாமிகளின் பதிப்பு நூல்களுக்கு நம் அரங்கராஜன் ஸ்வாமி அணிந்துரை கட்டாயம் இடம் பெற்றே தீரும்.  பாஞ்ச சன்னியரான கிருஷ்ணமாச்சாரியாரின் வெளியீடான 7000 பக்கமுடைய கோயிலொழுகு நூலிற்கு நம் அரங்கராஜன் ஸ்வாமியின் அணிந்துரையானது  'ஸ்ரீராமபிரானுக்கு பட்டாபிஷேகம்' செய்த செயலை ஒத்திருந்தது.

✒ ஸ்ரீமத்ராமாயணம்,ஸ்ரீமத் ஹாபாரதம், ஸ்ரீமத்பாகவம், ஸ்ரீரங்க மாஹாத்ம்யம், ஸ்ரீவேங்கடாசல மாஹாத்ம்யம், ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்யம்,ஸ்ரீயாதவாத்ரி மாஹாத்ம்யம் ,ஆழ்வார்,ஆச்சார்யர்கள் வைபவங்கள் ஆகிய தலைப்புகளில் 1997 முதல் 2009 வரை ஸ்ரீகூடலழகர் திருக்கோயிலில் நம் அரங்கராஜன் ஸ்வாமி திருவாய் மலர்ந்து கூறிய கதாகாலட்சேபங்களை கேட்கும் பாக்கியம் அடியேனுக்கும் கிடைத்தது.

|மதுரவல்லி மணாளன் ஸ்ரீகூடலழகர் சங்கல்பம்.|

அடியேன் ராமாநுச தாஸன்

                        அன்புடன்

             ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
       E.P.I. இராம சுப்பிரமணியன்

 


No comments:

Post a Comment