Friday, August 31, 2018

நன்மாறனும் தமிழருவியும் ( பகுதி - 4)





பெரிய திருவந்தாதி வெண்பாச் செய்யுளால் ஆனது. இந்த நூலில் 87 வெண்பாக்கள் அந்தாதியாகத் தொடுக்கப்பட்டுள்ளன. முதலும் இறுதியும் கூட மாலை போல் தொடுக்கப்பட்டுள்ளன

பல்உருவை எல்லாம் படர்வித்த வித்தா!உன்
தொல் உருவை யார் அறிவார்? சொல்லு

(3704:3-4)
(படர்வித்த = உண்டாக்கிய)

எனக் கேட்டு வியக்கின்றார் ஆழ்வார்.

இறைவனோடு தாம் பெற்ற இன்பத்தை அப்படியே உரையாடல் போக்கில் பாடுகின்றார். நெஞ்சம் பெருமாளை மட்டும் சிந்தித்து இருக்க வேண்டும் (3695), பஞ்சபாண்டவர்களைக் காத்தவனைக் காணவேண்டும் (3699), நாவு திருமாலை வாழ்த்த வேண்டும் (3730), இப்படி மனிதப் பிறவியின் பயனைத் திருமாலை வழிபட்டு அடையவேண்டும் எனக் காட்டுகின்றார்.

உலகைப் படைத்தவன் அவனே, அவனுக்கு எல்லாம் உரியது என்பதையும் (3278),

பார்உண்டான்! பார்உமிழ்ந்தான் பார்இடந்தான்! பார்அளந்தான்
பார்இடம் முன்படைத்தான் என்பரால் - பார் இடம்
ஆவானும் தான்ஆனால், ஆர்இடமே? மற்றொருவர்க்கு
ஆவான் புகாவால் அவை

 (3728)
எனக் காட்டுகிறார். அதாவது பெருமானின் செயற்கரிய செயல்களை இப்பாசுரம் கூறுகிறது. பிரளய காலத்தில் இவ்வுலகை விழுங்கித் தம் வயிற்றில் வைத்துக் காப்பாற்றிப் பின்னர் படைப்புக் காலத்தில் வெளிவிட்டார். அவரே வராக அவதார காலத்தில் பூமியை எடுத்துக் கீழிருந்து மேலே கொண்டு வந்தார். திரிவிக்கிரம அவதாரத்தில் பூமியை அளந்தார். அவ்வுலகை ஆதியில் படைத்தவரும் அவரே என்று கூறுவர். பார் (உலகம்) என்னும் பெயர்ச்சொல் மீண்டும் மீண்டும் வேறு வேறு வினைச்சொற்களோடு வந்து அவதாரங்களை நயம்படக் காட்டுகிறது.

‘எல்லாம் அவனே, அவனுள் எல்லாம்’ என்பதையும் அழகுபடச் சுட்டுகிறார்.


தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லைகாண் மற்றோர் இறை!

(3746:3-4)
எனவே நரகம் செல்லாதிருக்கத் துழாய் மாலை அணிந்த மாயனைப் பணிய வேண்டும் என்பது நம்மாழ்வார் முடிவாகும்.

கடவுள் எங்கு உள்ளான்? எப்படிப்பட்டவன்? என்று மனப் போராட்டத்துக்கு ஆளாகாமல் கண்ணனே கடவுள் எனத் தெளிந்து நன்மை பெறுங்கள் எனத் தம் சமயக் கடவுளைக் காட்டுவார் நம்மாழ்வார்.

ஐம்புலன்கள் படுத்தும் பாட்டைப் பற்றிப் பேசாத கவிஞர்களும், பக்தர்களும், சித்தர்களும் இல்லை எனலாம். ஆழ்வாரும் குறும்பு செய்யும் ஐவரை நெறிப்படுத்தி, சினம் அழித்துச் செலுத்தினால் திருத்துழாய் மாலையானைச் சேவிக்கப் பழகிக் கொள்ளும் பெருமை உடையது (3737) ஆகுமாம்.

வாழ்த்தி அவன் அடியைப் பூப்புனைந்து நின் தலையைத் தாழ்த்தி, இருகை கூப்பித் தொழுவாய் மனமே! அவனைத் தொழாமல் உன்னால் இருக்க முடிகிறதா? எப்போதும் பெருமானின் திருவடிகளைப் போற்று. வல்வினை நீங்கும் என்பதோடு பெரிய திருஅந்தாதி நிறைவுறுகிறது.

நெஞ்சை விளிப்பது போலத் தன் உணர்வையும், பிறரையும் பக்தி நெறிப்படுத்தும் ஆழ்வாரின் அணுகுமுறையைக் காட்டும் இவ்வந்தாதி, உண்மையிலேயே பெரிய அந்தாதிதான்.

            அன்புடன்

      ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்



No comments:

Post a Comment