Saturday, October 13, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 5)




• அரசியல் வரலாற்று மரபு
திருவரங்கம் பெரியகோயில் 
                         (பகுதி - 4)ன் தொடர்ச்சி … … … …




• முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை அரசாண்ட பாண்டிய மன்னனாவான். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனை அடுத்து முடி சூடியவனான இவன் தன் இறப்பு வரை ஆட்சி புரிந்தான்.

மாறவர்மன் குலசேகரன் 'எம் மண்டலமும் கொண்டருளிய', 'கோனேரின்மை கொண்டான்', 'கொல்லங்கொண்டான்' என்ற விருதுகளை ஏற்றான். கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம்,சிங்களம் ஆகிய நாடுகளை வெற்றிகொண்டான் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய வருகிறது. மூன்றாம் இராசேந்திரன் மற்றும் போசள இராமநாதனை கி.பி 1279 இல் வென்றான். சிங்களத்தில் உண்டான அரசியல் கலவரத்தை வாய்ப்பாக கொண்டு கி.பி 1284 இல் தனது படைத்தலைவன் ஆரியச் சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தான். புத்தரின் பல் சின்னமொன்றை கைப்பற்றி வந்தான் கி.பி 1302-1310 காலத்தில் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து குலசேகரபாண்டியனுக்கு அடிபணிந்து அப்புனித சின்னத்தை மீட்டு சென்றான். குலசேகரன் அரசவையில் 'தகியுத்தீன் அப்துல் ரகுமான்' என்பவர் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக 'அப்துல்லா வசாப்' எனும் அரபிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார்.
• மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 10வது ஆட்சியாண்டுக் (06-12-1277) கல்வெட்டு ஒன்று (A.R.E.No. 7 of 1936-37)
திருவரங்கம் பெரியகோயில்
 மூன்றாம் திருச்சுற்று  கிழக்குப்பக்கச்சுவரில்
உள்ளது. செவ்விருக்கை நாடு சக்கரவர்த்திநல்லூர் மதிதுங்கன் தனிநின்று வென்ற பெருமாளான ஆர்ய சக்ரவர்த்தி என்பான் திருவரங்கம் அழகியமணவாளப்பெருமாளுக்கு திருமாலைகள் சமர்ப்பிக்க கொடுத்த நிலதானங்கள் பற்றி அக்கல்வெட்டு கூறுகிறது.

• மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மறைவிற்கு பிறகு அவனது இரு மகன்கள் சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரிடையே எழுந்த பங்காளிச் சண்டையைப் பயன்படுத்தி தில்லி சுல்தான்(அலாவுதீன் கில்சி) பாண்டி மண்டல ஆட்சியை கைப்பற்றினான்.
யாரந்த 'அலாவுதீன் கில்சி' என்று
வரலாற்றுச்சுவடுகளைத் தேடியதில் எனக்குக் கிடைத்த செய்திகளோடு தொடருகிறேன்.

 • கில்ஜி வம்சம்:-
கில்ஜி வம்சத்தினர் மத்திய ஆசியாவைச் சார்ந்த துருக்கியர்கள் ஆவார்கள்.
இவர்கள் தில்லியைக் கைப்பற்றுவதற்கு முன்னர் தற்போதைய ஆப்கானிஸ்தான் பகுதியில் வசித்து வந்தனர். 'கில்ஜி' என்பது ஆப்கானியக் கிராமம் ஒன்றின் பெயர் ஆகும். இவர்கள் ஆப்கானியர்களின் கலாச்சாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றியதால் ஆப்கானிய இனக் குழுக்களுள் ஒன்றாகக் கருதப்பட்டனர். அதன் காரணமாய் இவர்களை துருக்கிய-ஆப்கான் வம்சம் என்று அழைத்தனர். கில்ஜி அரசர்கள் 'சுல்தான்கள்' என அழைக்கப்பட்டனர். இவர்களுள் ஜலானுதீன் பிரோஸ் கில்ஜி, அலாவுதீன் கில்ஜி மற்றும் குத்புதீன் முபாரக் ஆகிய மூவர் மிகவும் முக்கியமான சுல்தான்களாக வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றனர்.
• அலாவுதீன் கில்ஜி (கி.பி. 1296–1316)
அலாவுதீன் கில்சி போர்க்களங்களில் தனது படையணிகளை நடத்திச் செல்வதில் கைதேர்ந்தவர். முரட்டு மங்கோலியர்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தி இந்திய துணை கண்டத்திலிருந்து மங்கோலியர்களை விரட்டி அடித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுல்தான் அலாவுதீன் கில்சி.
சித்தூர் (மேவார்) நாட்டு பட்டத்து அரசி பத்மினியின் அழகை கேள்விப்பட்டு, பத்மினியை அடையும் நோக்கில் மேவார் கோட்டை மீது அலாவுதீன் கில்சி 1303ல் படை எடுத்த விவரங்கள்
சூஃபி கவிஞரான 'மாலிக் முகமது ஜாயசி' என்பவர், கிபி 1540ல் 'அவதி' மொழியில், சித்தூர் ராணி பத்மினி குறித்து 'பத்மாவதி காவியம்' இயற்றியுள்ளார். இக்காவியம் புனையபட்டது அன்றி, வரலாற்றுக் காவியம் அல்ல என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
[ராணி பத்மினி மற்றும் அலாவுதீன் கில்சி குறித்த 'பத்மாவத்'  என்ற திரைப்படமும் சனவரி, 2018ல் வெளியானது.]
அலாவுதீன் கில்ஜியின் தக்காணப் படையெடுப்பும் தென்னிந்திய வெற்றிகளும் குறிப்பிடத்தக்கவை. தெற்கில் நான்கு முக்கிய அரசுகளான 1.தேவகிரி யாதவ அரசு 2.வாரங்கல் காகதீய அரசு, 3.துவார சமுத்திரத்தில் ஹோய்சள அரசு மற்றும் 4.மதுரைப் பாண்டிய பேரரசு ஆகியனவற்றை கில்சி படையெடுத்து வென்றான்.

 • அலாவுதீன் கில்சி குசராத்து  படையெப்பு:-
அலாவுதீன் கில்சி, குசராத்து மீது படையெடுத்து செல்ல தனது இரண்டு படைத்தலைவர்களான, 'உலுக்கான் மற்றும் நுசுரத் கான்' என்பவர்கள் தலைமையில் இரண்டு படையணிகள் இரண்டு பக்கமாக அனுப்பினார். நுசுரத் கான் (24. 02. 1299ல்) தனது படைகளை தில்லியிலிருந்து குசராத்திற்கு நேர்வழியில் நடத்திச் சென்றார். உலுக்கான் தனது படைகளை, தில்லியிலிருந்து சிந்து நாட்டின் வழியாக குசராத்து நோக்கிச் சென்றான். பின்னர் குசராத்து மன்னர் வகேலா வம்சத்தின் இரண்டாம் கர்ணதேவ வகேலாவுடன் நடந்த போரில், கர்ணதேவன் தோற்று தனது மகள் தேவலா தேவியுடன் தேவகிரியை நோக்கி தப்பி ஓடிவிட்டார். அலாவுதீன் கில்சியின் படைகள் குசராத்தைக் கைப்பற்றி, அங்கிருந்த சோமநாதபுரம் (குசராத்து) சிவன் கோயிலை உடைத்தெறிந்தனர். மேலும் துவாரகையில் இருந்த கிருட்டிணன் கோயிலையும் இடித்து தரைமட்டம் ஆக்கினர். அரண்மனை மற்றும் கோயில்களின் கருவூலங்களில் இருந்த பெருஞ்செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர். அத்துடன் நில்லாது, குசராத்து மன்னன் இரண்டாம் கர்ணதேவ வகேலாவின் பட்டத்தரசி கமலாதேவி
மற்றும் அவளது பணிப்பெண்ணையும் (திருநங்கை), கில்ஜியின் படைத்தலைவர்கள் கைப்பற்றி தில்லி சுல்தானாகிய அலாவுதீன் கில்ஜியிடம் ஒப்படைத்தனர்.
குசராத் மன்னரின் மனைவியை கில்ஜி, இசுலாமிய மதத்திற்கு மத மாற்றம் செய்து மணந்து கொண்டார். அரசியின் பணிப்பெண்னான திருநங்கையையும் மதமாற்றம் செய்து ’மாலிக் கபூர்’ என்று இசுலாமிய பெயர் சூட்டினார்.
மத குருக்களின் எதிர்ப்பை மீறி, மாலிக்கபூருடன் கில்ஜி நெருங்கிய நட்பும், பாலியல் உறவும் கொண்டிருந்தார். மாலிக் கபூருக்கு முதலில் சிறு படைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. மாலிக் கபூர் விரைவாக கில்ஜியின் படையில் வேகமாக உயர்ந்து 10,000 படைவீரர்கள் கொண்ட படைஅணிக்கு படைத்தலைவரானார்.  

• மாலிக் கபூர்
தென்னிந்தியா மீது படையெடுப்பு:-
மாலிக் கபூர் இரண்டு முறை தென்னிந்தியா மீது படையெடுத்தான். முதலில் 1309ல் தேவகிரி மீது படையெடுத்து வென்றார். தேவகிரி மன்னர் இராமச்சந்திரனின் குசராத் பகுதியையும் அவரின் மகள் இளவரசியுமான சோதி என்பவளையும் பரிசாக பெற்று கில்ஜியிடம் ஒப்படைத்தார். 1311ல் மாலிக் கபூர் வாரங்கல் நாட்டை ஆண்டு கொண்டிருந்த காகாதீய குல மன்னர் பிரதாப் ருத்ர தேவனை வென்று, தில்லி சுல்தானுக்கு அடங்கி, ஆண்டு தோறும் கப்பம் கட்டும்படி பணித்தார். அத்துடன் நில்லாது, ஹொய்சாலப் பேரரசை கைப்பற்றி ஹம்பி பகுதிகளில் இருந்த ஹோய்சாலேஸ்வரர் கோவில், கேதாரேஸ்வரர் கோயில் போன்ற போசளர் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்துக் கோயில்களை பாழடித்தார்.
உலகப்புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை வாரங்கல் அரசிடமிருந்த்து கொள்ளையடித்து கைப்பற்றினார். பின்பு மாலிக் கபூர், தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி காஞ்சிபுரம் கோயில்கள், சிதம்பரம் நடராசர் கோயில், திருவண்ணாமலை, திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில்களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்ததுடன், கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார்.
(மதுரை ஆலவாய் கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கம், தானாய்த் தோன்றியவர். மாலிக் கபூர் படையெடுப்பின் போது கருவறையை மூடி, முன்னே வேறு ஒரு லிங்கத்தை வைத்து ஏமாற்றி, உண்மையான லிங்கத்தை பாதுகாத்துள்ளனர். இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்கு எதிரே மாலிக் கபூரால் உடைக்கப்பட்ட லிங்கம் காட்சிக்கு உள்ளது.)
• இசுலாமிய வரலாற்று அறிஞரான சியாவுதின் பருணியின் கூற்றுப்படி, மாலிக் கபூர், தென்னிந்தியாவில் கொள்ளையடித்த செல்வங்களையும் மற்றும் 240 டன் தங்கத்தையும், 612 யானகள், 20,000 குதிரைகள் மேலேற்றி தில்லிக்கு வெற்றி வாகையுடன் திரும்பிச் சென்றான் எனக் கூறுகிறார். தில்லி சுல்தான் அலாவூதின் கில்ஜி, மாலிக் கபூரின் வெற்றிகளையும், கைப்பற்றிய தென்னிந்த்திய செல்வங்களைக் கண்டு பாராட்டி, மாலிக் கபூருக்கு தில்லி சுல்தானகத்தின் “தலைமைப் படைத்தலைவர்” ('மாலிக் நைப்’) என்ற புதிய பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டு, மன்னரின் பிரிக்க முடியாத துணையாக மாறினான் மாலிக் கபூர். 
• சயாவுடீன் பார்னி , அமீர்குசுரு, வாசப் போன்றவர்களின் கூற்றுகள் படி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கோயில்களை இடித்து அங்கிருந்த பொன், பொருள்களைக் கொள்ளையிட்டு சிற்பங்கள் பலவற்றையும் சிதைப்பதற்குக் காரணமானான் மேலும் கொள்ளையிட்ட பொருள்களை டில்லிக்குக் கொண்டு சென்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாலிக்காபூர் 612 யானைகள், 20,000 குதிரைகள், 96,000 மணங்கு பொன், முத்து மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளினை எடுத்துச் சென்றான் என பார்னி என்பவன் குறித்துள்ளான்.
• 'பொன் வேய்ந்த பெருமாள்' ஆகிய ஜடாவர்மன் சுந்தரபாண்டியனாலே பொன்மயமாக இருந்த ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தென்னகத்து திருக்கோயில்களின் பொக்கிஷங்களைக் கொள்ளையிட்டு தில்லிக்கு கொண்டு சென்று கில்சி மன்னனிடம் ஒப்படைத்தான். அந்த பாபத்தின் விளைவாக அடுத்த வருடங்களில்
அலாவுதீன் கில்சிக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அவன் படுக்கையில் வீழ்ந்தான். பின்னர் அவனுக்கு நினைவாற்றல் குறையத் தொடங்கி மரணமடைந்தான். இதனைப் பயன்படத்தி மாலிக் காபூர் கில்சியின் வாரிசுகளைக் குருடாக்கி விட்டு அவர்களில் மீதம் இருந்த ஒரு சிறுவனை மன்னனாக்கி நாட்டை ஆளத்தொடங்கினான்.
 கில்ஜியின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து, மாலிக் கபூர் உயிரோடு இருக்கும் வரை தங்களால் நிம்மதியாக வாழ முடியாது என்று, அவனது பாதுகாவலர்களைக் கொண்டே அவனை மடக்கினர். டெல்லியில் தனி அரண்மனையில் படுக்கையில் இருந்த மாலிக் கபூரை, நள்ளிரவில் சுற்றி வளைத்த கில்ஜியின் விசுவாசிகள், அவனை கை வேறு கால் வேறாக வெட்டித் தலையை தனியே எடுத்தனர். டெல்லி கோட்டையின் ஒவ்வொரு வாசலிலும் ஒவ்வொரு உறுப்புகளைத் தொங்கவிட்டு பழிதீர்த்துக்கொண்டனர்.எதிர்ப்பே இல்லாமல் பெரும் படை நடத்திச் சென்று, இந்தியாவை நடுங்கச் செய்த மாலிக் கபூர், அடையாளமே இல்லாமல் அழித்து ஒழிக்கப்பட்டான். ஓர் அடிமையாகத் தொடங்கி ஆட்சி அதிகாரம் வரை உயர்ந்த இரண்டு பேரின் 'பெரும் எழுச்சியும் வீழ்ச்சியும்' வரலாறு நமக்குப் புகட்டும் பாடம்.
 காலவெளியில் காலச்சுவடுகளாய்  கண்ட இவை, காலத்தின் வெறும் நிகழ்வுதான் என்பதுபோல அந்த காலவெளியெனும் ஆறு அமைதியாய் ஏதுமறியாதது போலே ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
• தென் இந்தியாவின் மீது முதல் முதலில்  (1311-13) படையெடுத்து வந்தவன் மாலிக் கபூர்.
இரண்டாம் முறை படையெடுத்து வந்தவன் 'உலுக்கன்' ( இவனே பின்னாளில் முகமதுபின் துக்ளக் என்று பெயர் சூட்டிக்கொண்டான்) ஆவான். அப்போதைய ஹொய்சாள மன்னனான மூன்றாம் வீரவல்லாளன்,  மாலிக் கபூர்(கி.பி.1311) மற்றும் குரூஸ்கான் (கி.பி.1318)  ஆகியோரிடம் அடிபணிந்தது போல , உலூக்கனிடமும் (கி.பி.1323) அடிபணிந்து, துருக்கர்கள் தென்னிந்தியாவில் மிக எளிதாக நுழைய வழிவகுத்தான்.
• டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான்.
கிபி 1321ல் தென் இந்தியாவின் மீது படையெடுக்க விரும்பினான். அவனுடைய முக்கிய குறிக்கோள் தங்க வைரங்களின் கருவூலமாக திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே. கிபி1323 ஆம் ஆண்டு ஆனி மாதம் 22ஆம் தேதி டில்லியிலிருந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான். புறப்பட்டு திருவரங்கமருகே வந்தபோது,
அன்று நம்பெருமாள் 'பங்குனி உத்சவம்' எட்டாம் திருநாள் அன்று வடதிருக்காவேரி (கொள்ளிடக்கரை) கரையில் அன்று இருந்த பன்றியாழ்வான் கோவிலில் பெருமாள் எழுந்தருளி இருந்த போது, உலுக்கன் வருகை அறிந்த மக்கள் அவன்  தொடர்ந்து வருவானே என்று அஞ்சினர்.
[உலூக்கான் நடத்திய படுகொலைகளும் அடித்த கொள்ளைளும் ரத்ததை உறையச் செய்பவை. கோயிலுக்குள் நுழைந்ததும் அவன் உற்சவர் விக்கிரகத்தைத்தான் தேடினான். உற்சவர் இல்லாத்தால் கோபத்தில் அங்கே கூடியிருந்த அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களையும் கொன்றுகுவித்தான். அன்று மட்டும் ஸ்ரீரங்கத்த்தில் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்டனர். இதைப் “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.]
ஸ்ரீரங்கத்தில் வைணவ குரு பிள்ளைலோகாசார்யர் தம் சிஷ்யர்களுக்கு ரகசிய உபதேசங்கள் செய்து வந்த காலத்தில், இந்த வரலாற்றுச் சம்பவம் நடந்தேறியது.
எல்லாம் நல்லனவாகவே நடந்துகொண்டிருந்த அந்த கால, நேரத்தில் முகலாயர்கள் படையெடுத்து (கி.பி.1323) திருவரங்கத்தைத் தாக்க வரும் செய்தி ஊரெங்கும் காட்டுத்தீயாய் பரவியது. படையெடுப்பின் நோக்கமே கோயில்களைத் தகர்த்து அதிலுள்ள விலைமதிப்பற்ற பெருஞ்செல்வங்களைக் கொள்ளயடிப்பதுதான்.
அதை எண்ணி திருவரங்கத்திலுள்ள ஒவ்வொருவரும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துபோனார்கள்.
அந்தச் அவசரகால சமயத்தில் 'ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியார்' வைஷ்ணவ சமயத்தின் மூத்த ஆச்சாரியராக (குருவாக) இருந்து வந்தமையால் அந்த நிலைமையச் சமாளிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அவர் மிகவும் வயது முதிர்ந்து தன்னைத் தானே பராமரித்துக்
கொள்ள இயலாத நிலையில் இருந்தும் திருவரங்கம் பெரிய பெருமாளை அவர்களிடமிருந்து காக்கும் பொருட்டு மூலவர் சந்நிதியை கல்திரையிட்டு மூடி, முன்பொரு விக்ரஹத்தை வைத்துவிட்டு 'அழகிய மணவாளனை' உபயநாச்சிமார்களுடன் மூடுபல்லக்கில் எழுந்தருளப் பண்ணி தோளில் சுமந்துகொண்டு தெற்கு நோக்கி பயணப்படலானார். தெற்கே திருமோகூருக்கு அருகில் யானைமலை அடிவாரத்தில் 'ஜ்யோதிஷ்குடி' (யா. கொடிக்குளம்) என்ற கிராமத்தில் பெருமாளையும் நாச்சிமார்களையும் ஒரு குகையில் மறைவாக எழுந்தருளச் செய்து திருவாராதனம் செய்து வந்தனர். அக்ஷய வருடம் (கி.பி.1323) ஆனிமாதம் ஜ்யேஷ்ட சுத்த துவாதசியில் 118வது (118 வயதில்) திருநக்ஷத்திரத்தில் பிள்ளைலோகாச்சாரியார் பரமபத்திற்கு எழுந்தருளினார். அவரது சரமத் திருமேனியை (பூத உடலை) அலங்கரித்து ஜ்யோதிஷ்குடியில்(யா. கொடிக்குளம்) மலையடிவாரத்தில் திருப்பள்ளிப்படுத்தி திருவரசும் கட்டிவைத்தார்கள் என்கிற தகவலை கோயிலொழுகின் மூலம் அறிகிறோம்.

பிள்ளை லோகாச்சார்யரின் மறைவுக்குப்பிறகு,
பாதுகாப்பு கருதி'அழகிய மணவாளப்பெருமாள்' மதுரை அழகர் திருமலையில் (திருமாலிருஞ்சோலை - அஞ்சினான் கோட்டை)
ஒரு வருடம் மலைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தார். அப்போது அழகர்மலை அழகாபுரிக்கோட்டையை ஆட்சி செய்தவன் 'கங்கைகொண்ட சூரியத்தேவன் வாணாதிராயன் காளிங்கராயன்' எனும் பாணர்குலச் சிற்றரசன் ஆவான். அவனது பெரும் உதவியுடன் பிள்ளைலோகாச்சாரியார் சிஷ்யர்கள் அழகியமணவாளரின் திருமஞ்சனம் மமற்றும் திருவாராதனங்களுக்காக 'அழகியமணவாளன் திருக்கிணறு' ஒன்றையும் உருவாக்கினார்கள். (அழகர்மலையில் நூபுரகங்கைக்குச் செல்லும் வண்டிப்பாதையில் கோயிலின் மேற்கு மதில்சுவருக்கு அருகே இன்றும் அக்கிணறு உள்ளது.)

பிறகு  கோழிக்கோடு(கேரளம்), தமிழ்நாடு-கர்நாடகம்-கேரளா மாநிலம் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் திருக்கணாம்பியில் சில காலம், பிறகு மேல்கோட்டை திருநாராயணபுரம் பிறகு திருவேங்கடமலைக் காடுகளில்
மறைத்து வைக்கப்பட்டிருந்தார். பின்பு யாதவராயனால் கி.பி.1360ல் திருமலைக் கோயிலில் கட்டப்பட்ட ரங்க மண்டபத்தில் அழகியமணவாளப்பெருமாள் எழுந்தருளியிருந்தார்.
கிபி. 1336 ஆம் ஆண்டில் ஹரிஹரர் மற்றும் புக்கர் எனும் யாதவ சகோதரர்கள் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தார்கள். குமார கம்பணன் புக்கரின் மகன் ஆவார். இவர் கிபி 1362 இல் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட இராஜநாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினார். பின்னர் மதுரை சுல்தானகம் மீது படையெடுத்து அங்கு சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார். கி.பி. 1364 ஆம் ஆண்டளவில் மகமதியர்களின் ஆட்சி நிலை குலையத்தொடங்கி கி.பி. 1378 வரை போராட்டம் நடைபெற்றது. குமார கம்பண்ணன் கோயில் அறநிலையங்களினைப் பாதுகாப்பதனையும் கடமையாகக் கொண்டு போர் புரிந்து பல தலைவர்களை பாண்டிய நாட்டின் பொறுப்புகளில் அமர்த்தினான்.
[மதுரை படையெடுப்பின் போது உடனிருந்த இவரது மனைவி கங்கதேவி மதுரை முற்றுகையையும், வெற்றிகளையும் 'மதுரா விஜயம்' என்ற தனது சமஸ்கிருத நூலில் பதிவு செய்துள்ளார்]

• 1336 ஆம் ஆண்டு விஜயநகர் சாம்ராஜ்யம் இறைஅருளால் தென்னிந்தியாவில் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 'அழகியமணவாளப் பெருமாள்' திருமலையில் இருந்தபோது செஞ்சியை ஆண்டுகொண்டு இருந்த கோபண்ண உடையார் திருமலையில் வருகை தந்து அரங்கநாதனை திரிசித்து விட்டு  ஸ்ரீரங்கத்தில் திரும்பவும் அவரை எழுந்தருளப்பண்ண சித்தம் கொண்டார்.
அழகியமணவாளப்பெருமாளை செஞ்சிக்கு அருகேயுள்ள 'சிங்கபுரம்' என்கிற ஊரில் எழுந்தளுப்பண்ணி  பல காலம் ஆராதித்து வரும் காலத்து ஸ்ரீரங்கத்தில் இருந்து சிங்கபிரானுடைய குமாரர் திருமணத்தூண் நம்பி (திருமணல்தூண் நம்பி என்றும சில குறிப்புகள் சொல்லுகின்றன) அன்றைய கோவில் அதிகாரியான உத்தம நம்பியை செஞ்சிக்கு அனுப்பி கோபண்ண உடையாருக்கு கண்ணனூரில் உள்ள துலுக்கன் படை பற்றிய செய்திகளை சொல்லி அதனை வென்று,
கி.பி.1371 பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாள் அழகியமனவாளனையும் உபய நாச்சிமார்களையும் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பித்தான். இதற்கான கல்வெட்டு ஒன்று (A.R.E.No.55 of 1892) ஸ்ரீரங்கம் கோவிலில் ராஜமகேந்திரன் திருச்சுற்று கிழக்குப்பகுதியில் காணப்படுகிறது.
 (கி.பி.1324 முதல் 1370 வரை
சுமார் 48வருடம் அழகியமணவாளர் வனவாசம் அல்லது உலா சென்றார்) 





அழகியமணவாளப்பெருமாள் திருவரங்கத்திற்கு எழுந்தருளுவதற்கு முன்பு கொள்ளிடக்கரையின் வடகரையில் 'அழகியமணவாளம்' எனும் கிராமத்தில் தங்கியிருந்து, பிறகு கி.பி.1371 பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாளில் திருவரங்கம் வந்தார். மூன்றாம் திருச்சுற்றில்  சேரனை வென்றான் மண்டபத்தில் எழுந்தருள பண்ணப்பட்டனர். 48 வருடமாகியதால் இவர் தான் அழகியமணவாளனா? என்று திருவரங்க மக்கள் சந்தேகமுற்றனர். ஈரங்கொல்லி எனப்படும் ஒரு வண்ணானால் உண்மை அறியப்பட்டது.
அந்த வண்ணானால் திருவரங்கம் அழகிய மணவாளப்பெருமாளுக்கு சூட்டப்பட்ட திருநாமமே "நம்பெருமாள்" என்பதாகும். கி.பி.1371 ம் ஆண்டு தொடங்கி அழகிய மணவாளனுக்கு நம்பெருமாள் என்ற திருநாமமே வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ச்சி.....
அடுத்த பதிவு - Postல பாப்போம்.

அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் 



Friday, October 12, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 4)




• திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 3)
தொடர்ச்சி …… … … … … …



கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர்கள் 'முற்காலச் சோழர்கள்' என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் மிகவும் புகழ் பெற்று விளங்கினார். காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 'கல்லணை' இவரது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை" விளங்குகிறது. இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்றும் கூறப்படுகிறது.
இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி, போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு நட்பு பூண்ட கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்,இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி, குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். மேலும் நல்லுருத்திரன், கணைக்கால் இரும்பொறையை வென்று சிறைப்படுத்திய கோச்செங்கணான் ஆகிய மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
களப்பிரர்களின் வருகையால் சங்க காலச் சோழர்கள் சிற்றரசர்களாயினர்

சிற்றரசர்களான சோழர்கள் தம் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். பல குறுநில மன்னர்களோடு திருமணத் தொடர்பு கொண்டு இழந்த செல்வாக்கை சோழர்கள் மீட்க முயன்றனர். பல்லவருக்கு கீழடங்கி ஆண்ட சிற்றரசனான 'விசயாலய சோழன்' என்பவன் பாண்டிய மேலாதிக்கத்திலிருந்து ஆட்சி செய்த முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தான்.
கி.பி.9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழரும், அவரது மகனான முதலாம் இராசேந்திர சோழரும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க அரசர்களாவர்.
கி.பி. 10-12 ஆம் நூற்றாண்டுகளில், மேற்கண்ட சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. முதலாம் இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தார். முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.  இவ்வாறாக சோழப்பேரரசர்களாக முதலாம் குலோத்துங்கன், பின்னர் அவனது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர்.
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சோழர்கள்  தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்திருந்தனர். தெற்கே "பாண்டியர்கள்" வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன.
கி.பி.1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் 'மாறவர்மன் சுந்தரபாண்டியன்' தலைமையில் பாண்டியர்கள் 'கங்கைகொண்ட சோழபுரம்' மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான 'இரண்டாம் நரசிம்மன்' சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர்.  மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று. 
"பாண்டியப் பேரரசு" தொடங்கிய அக்காலகட்டடத்தில் திருவரங்கம் பெரிய கோயிலின் அரசியல் வரலாற்று நிகழ்வுகளை இனி அறிவோம்.



பாண்டிய பேரரசர்கள் காலத்தில் திருவரங்கம் பெரியகோயில்:-

திருவரங்கம் பெரியகோயிலின் வரலாற்றை ஆராயப் புகுந்தோமானால் இந்திய வரலாற்றினை முழுவதுமாக அறியவேண்டியிருக்கும். வைணவர்களால் "கோயில்" என்று கொண்டாடப்படும் திருவரங்கம் பெரியகோயில் எப்போது கட்டப்பட்டது என்ற சரியான தகவல்கள் கிடைக்காவிட்டாலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து இதன் வரலாற்று சுவடுகள் கண்டறியப்பட்டு வரலாற்று அறிஞர்களால் பெரிதும் பேசப்படுகிறது. இந்தக் கோயிலின் ஆரம்பகட்ட வரலாறு குறித்த ஆதாரபூர்வத் தகவல்கள் கிட்டாதது வருத்தத்திற்குறிய ஒன்றாகும்.
 எனினும் நமக்கு இந்தக் கோயிலின் ஒவ்வொரு பிரகாரங்கள் குறித்தும், மதில்கள் குறித்தும் கிடைக்கும் விபரங்களில் இருந்து அவ்வப்போது சோழ, பாண்டிய மன்னர்களால் இந்தக் கோயில் பல திருப்பணிகளைக் கண்டிருப்பது தெரிய வருகிறது.

நான்காம் திருமதிலைக் கட்டியவர் 'திருமங்கை ஆழ்வார்' என்கிறது கோயிலொழுகு.
ஏழாம் திருமதில் பிரகாரத்திலும், நான்காம் திருமதில் பிரகாரத்திலும் ஆண்டாளுக்கு எனத் தனிப்பட்ட சந்நிதிகள் தென்மேற்கு மூலையில் ஏற்படுத்தியுள்ளனர் . இதில் ஏழாம் திருமதில் பிரகாரத்தில் உள்ள வெளி ஆண்டாளின் திருச்சந்நிதி 'பிற்காலப் பாண்டியர்கள்' காலத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது.
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டிற்குள் அது கட்டப்பட்டிருக்கும் என அந்தச் சந்நிதி பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் கட்டப்பட்டிருப்பதில் இருந்து தெரிய வருகிறது.
இதைத் தவிர நான்காம் திருமதில் பிரகாரத்தில் இருக்கும் உள் ஆண்டாள் சந்நிதி கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம்.

திருவரங்கம் பெரிய கோயிலின்  கல்வெட்டுகள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்து கிடைத்துள்ளது.

சோழமன்னர்கள் கல்வெட்டுக்களில் பழமையானதாகச் சொல்லப்படுவது முதலாம் பராந்தகனின் கல்வெட்டு ஆகும். இவனுக்கு அடுத்து மன்னன் இரண்டாம் ராஜேந்திரனின் மகன்களில் ஒருவனான ராஜமஹேந்திர சோழனின் கி.பி. பதினோராம் நூற்றாண்டில் அதாவது கி.பி. 1060---1063 ஆம் ஆண்டில் இங்குள்ள முதல் பிரகாரத்தின் திருமதிலைக் கட்டியதால் இது 'ராஜமஹேந்திரன் திருவீதி' என வழங்கப் படுகிறது. 
சோழகுல மரபில் முதலாம் குலோத்துங்கனுக்குப் 
பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியக் கல்வெட்டும், 'ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம்' சோழர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்து வந்ததைச் சொல்கிறது. தமிழ்நாட்டின் அப்போதைய காலநிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
 
மூன்றாம் குலோத்துங்கனின் இருபதாண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டு ஒன்றின் மூலம் திருவரங்கம் கோயில் நிர்வாக அலுவலர்கள், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில் நிர்வாகத்தினரோடு
 சமரமாகப் பூசல்களைத் தீர்த்துக்கொள்ளும்படிக் கட்டளை இட்டிருக்கிறான்.

 ஒரிசா வரை சோழ ஆட்சி பரவி இருந்தாலும் தெற்கே இருந்து இலங்கையின் துணையோடு பாண்டியர்களும், கீழ்த்திசையில் ஆட்சி புரிந்த கங்கர்களும், அடிக்கடி சோழர்களைத் தாக்கி வந்தனர். இதில் கி.பி. 1223 முதல் 1225 வரையிலும் ஸ்ரீரங்கம் கோயில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டுக் கோயிலின் நிர்வாகம் முற்றிலும் சிதைந்து பாழ்பட்டுப் போனது என்பதை சோழர் கால வரலாற்றின் மூலம் அறிகிறோம். ஹொய்சளர்களின் துணை கொண்டு கோயிலை மீண்டும் அவர்கள் வசம் கொண்டு வர நினைத்தாலும் அவர்களால் இயலவில்லை. அப்போது பாண்டியர்கள் தலை எடுத்துச் சோழர்களை நிமிர முடியாமல் செய்து வந்தனர்.

பாண்டிய பேரரசு:

பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். (மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர்.) இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத "நீண்ட நெடிய வரலாறு" பாண்டியர்களுக்கு மட்டுமே உண்டு. பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.

• திருவரங்கம் பெரியகோயிலில்
சுந்தரபாண்டியனான மானாபரணன்(கி.பி. 1104-31) கல்வெட்டே
A.R.E.No. 117 of 1937-38)
 பாண்டியர்களின் திருவரங்கக் கல்வெட்டில் பழமையானது. அதற்கடுத்து
• பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அரசனான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216---1238) கல்வெட்டானது (இரண்டாம் திருச்சுற்று கிழக்குப்பக்க சுவர்
-A.R.E.No. 53 of 1982) குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவனது 9வது ஆட்சியாண்டில் 28-03-1225 ஆம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் அவன் திருவரங்கத்தில் மேற்க்கொண்ட நிர்வாஹ சீர்திருத்தத்தைப் பற்றிஅறிய முடிகிறது. இந்தக் கல்வெட்டில் தான்,  எம்பெருமானார் திருவடிகளை ஆச்ரயித்திருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் என்ற சொற்றொடர் முதனே முதலாக வருகிறது. கோயில் உள்துறை நிர்வாகத்தினர் ராஜமகேந்திரன் திருச்சுற்று மேலைப்பகுதியில் கூடி இருந்து எடுத்த முடிவினை அக்கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டில் 2000 எழுத்துக்கள் உள்ளதாக கல்வெட்டுக்குறிப்பே கூறுகிறது.
• முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் ஒன்பதாம் ஆட்சியாண்டுக் காலத்தில் அவனுடைய படைகள் திருவரங்கம் கோயிலை கங்கர்களிடமிருந்து விடுவித்தது. ஆனாலும் கோயிலின் திருப்பணிகளில் ஹொய்சளர்களின் ஈடுபாடு குறையவில்லை. அவர்கள் பல திருப்பணிகளைச் செய்ததாகக் கலவெட்டுக்கள் பல குறிப்பிடுகின்றன.

பாண்டிமண்டலத்தில்  போஜளர்கள் ஆளுமை:-

     திருச்சிக்கு அருகேயுள்ள கண்ணனூர்(சமயபுரம்) எனும் ஊரினைத்
தலைமையிடமாகக் கொண்டு கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த
'போசளர்கள்' தமிழகத்தில் காலூன்றினர். பாண்டியர்களுக்கு
எதிராகச் சோழர்களுக்கு உதவ முற்பட்டதனால் இவர்களது
பலம் மிகுந்தது. கண்ணனூரில் போசளர் ஆட்சியைத்
தோற்றுவித்தவன் வீரநரசிம்மனாவான். இவ்வரசன் கி.பி. 1231- இல்
காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கனைத் தோற்கடித்து அவன்
சிறைபிடித்திருந்த மூன்றாம் இராஜராஜ சோழனைச் சிறையிலிருந்து
மீட்டு, அவனைச் சோழர் அரியணையில் அமரச் செய்தான்.
போசள வீரநரசிம்மன் மகனான 'வீரசோமேஸ்வரன்' பாண்டிய
நாட்டை வென்று அவர்களிடமிருந்து திறைபெற்றான். இக்கால
கட்டத்தில் வெட்டப் பெற்ற போசளர் கல்வெட்டுக்கள் பல
பாண்டியநாட்டின் பல்வேறு இடங்களில் காணப்பெறுகின்றன.
பாண்டியர் போசளர்களுடன் நட்புறவுடன் திகழும் நிலை
ஏற்பட்டது. திருவரங்கத்திலிருந்து கிடைக்கும் வீரசோமேஸ்வரனின் கல்வெட்டு (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் - A.R.E.No. 362 of 1953-54 ) முதலாம் சடையவர்மன் விக்கிரமபாண்டியனின்  (கி.பி. 1241-1254) நாலாவது ஆட்சியாண்டு 270ம் நாளில் 'விக்கிரம சதுர்வேதிமங்கலம்' என்ற ஊரை திருவரங்கம் பெரியகோயிலுக்கு தானமாக அளித்தது பற்றி கூறுகிறது. முதலில்
ஸ்வஸ்திஸ்ரீ போஜள வீர சோமேஸ்வர தேவர் என்று தொடங்கும்.
பின்பு 2வது வரியிலிருந்து ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடை பன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீவிக்கிரம பாண்டியத்தேவர் என்று தொடரும். இதன் மூலம் பாண்டிய அரசு போஜள வீரசோமேஸ்வரனின் மேலாதிக்கத்தை ஏற்றிருந்ததை அறிய முடிகிறது. வீரசோமேஸ்வரனது மற்றொரு கல்வெட்டு  (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் - A.R.E.No. 361 of 1953-54 ) இவனது
22வது ஆட்சியாண்டு(02-11-1252)நந்தவன தானம் பற்றிக் குறிக்கிறது.
வீரசோமேஸ்வரன் 6வது ஆட்சியாண்டில் பட்டத்து ராணி சோமலா தேவியார் தந்த தானம் பற்றிய மற்றொரு கல்வெட்டும் (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் - A.R.E.No. 68 of 1892) உள்ளது.

• கி.பி.1262 வரை ஆட்சி புரிந்த சோமேசுவரனுக்குப் பின்னர் வந்த ஹொய்சள மன்னன் இராமநாதர் என்பார்(கி.பி.1263—1297) வரை ஆட்சி புரிந்தார். இவர் படைத்தலைவர்களாகிய இரு சகோதரர்கள் கோயிலுக்குப் பல வகையான தானங்கள் வழங்கியுள்ளனர் என்பதைக் கோயில் வரலாற்று நூல் கூறுவதாக அறிகிறோம்.
வீரராமநாதனது இரண்டாம் ஆட்சியாண்டு (04-02-1256)கல்வெட்டு (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் - A.R.E.No. 67 of 1892) அழகிய மணவாளருக்கு திருமாலைகள் சமர்பித்திட நந்தவன கைங்கர்யத்திற்காக நிலதானம் தரப்பட்ட குறிப்பு உள்ளன.
வீரராமநாதனுடைய மூன்றாம் ஆட்சியாண்டில் (கி.பி.1257) இவன் தந்தருளின திருமுகப்படி  சிங்கண்ண தண்டநாயகரால் எடுத்த கை அழகியநாயனார் (மேட்டு அழகிய சிங்கர்) திருக்கோபுரத்திற்கு மேற்குப் பகுதியில் "ஆரோக்ய சாலை" ஒன்றினை ஏற்படுத்திப் பராமரிப்பதற்காக ஸ்ரீபண்டாரத்தில் 1100 பொற்காசுகள் சேர்ப்பிக்கப்பட்டு வைத்ததை ஒரு கல்வெட்டு (A.R.E.No. 80 of 1936-37)
 கூறுகிறது. சந்திர புஷ்கரணியிலிருந்து ஐந்து குழி மூன்று வாசல் செல்லும் நடை பாதையில் இக்கல்வெட்டை இன்றும்
காணலாம். தந்வந்தரிசந்நிதியை நெடுநாள் பராமரித்து வந்த 'கருடவாகன பண்டிதர்' இந்த ஆரோக்ய சாலையையும் நிர்வகித்து வருவார் என்றும் கல்வெட்டு குறிக்கிறது. மேலும் இவனது காலத்திய கல்வெட்டுகளாக
 (A.R.E.No.64,65,70,74, of 1936-37)  (A.R.E.No.372,377 of 1953-54)
(A.R.E.No. 52 of 1892) ஆகியனவற்றை திருவரங்கம் கோயிலில் காணலாம். ஸ்ரீரங்கவிலாஸத்தின் மேற்குப் பகுதியில்
இவனது ஆட்சி காலத்தில் தான் மிகவும் அழகு வாய்ந்த 'வேணுகோபால கிருஷ்ணர் சந்நிதி' கட்டப் பட்டது. இவனது 15வது  ஆட்சிகாலக் கல்வெட்டு
(A.R.E.No.74 of 1892)
'திருக்குழல் ஊதும் பிள்ளை சந்நிதி' என்று குறிக்கிறது
• முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின்
இந்த கல்வெட்டிற்குப் பிறகு இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1238-1255) காலத்து கல்வெட்டு (A.R.E.No. 77 of 1936-37) ஒன்று  இவனது அமைச்சர்களான அய்யன் மழவராயன், சக்கரபாணி நல்லூர் பல்லவராயன் என்பவர்கள் வேண்டுகோளுக்கிணங்க  குதிரை வியாபாரியான குளமூக்கு நாவாயன் கொண்ட நம்பி என்பான் திருவரங்கம் கோயிலுக்கு தானமாக கொடுத்த 'குமாரநம்பி நல்லூர்' என்ற கிராமத்தை (கடமை ற்றும் அந்தராயம் ஆகிய) வரிகள் நீக்கிய கிராமமாக கொள்வதற்கு மன்னன் பிறப்பித்த ஆணை பற்றி கூறுகிறது. 
• போசள வீரசோமேஸ்வரனுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே
இருந்த நட்பு அல்லது பகை வெகு நாட்கள் நீடிக்கவில்லை. கி.பி. 1250-இல்
முடிசூடிய 'இரண்டாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன்' போசள
மன்னனுடன் பகைமை கொண்டான்.
'கர்நாடக யானைக்கு சிங்கம் போன்றவன்' (கர்நாடக கரிகல்ப கந்திரவ) என்று தன்னைக் கல்வெட்டுகளில் கூறிக்கொண்டான்.
 அவனது தம்பியான
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1264- இல் வீரசோமேஸ்வரனைப் போரில் கொன்று, பாண்டிய நாட்டில்
இருந்த போசளர் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வந்தான்.


    திருவரங்கம் பெரியகோயிலின் பொற்காலம்:-

-|முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1251 - 1271)  ஆட்சி|-

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த 'பாண்டிய பேரரசன்' ஆவான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான்.

•  'மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன்,எல்லாம் தலையானான் பெருமாள்,கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன்' போன்ற பல பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இறுதிச்சோழ மன்னனாக அறியப்படும் மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் வம்சம் முற்றிலும் அழிந்ததற்கான காரணங்களில் இம்முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சோழ நாட்டுப் படையெடுப்பும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

• இவன் பல கட்டிடங்களை திருவரங்கம் பெரியகோயிலில் எழுப்பியுள்ளான் என்பதோடு பல்வகையான அலங்காரங்களையும் செய்ததோடு தாராளமாக நன்கொடைகளையும் வழங்கினான். இதனால் அவன் புகழ் மிகவும் பெரிய அளவில் பேசப்படுகின்றது என்பதோடு அவன் காலத்துக் கல்வெட்டுக்களும்
(இரண்டாம் திருச்சுற்று வடக்குப் பக்கச்சுவர் - A.R.E.No. 45 of 1891),
(சந்தனமண்டபம் -A.R.E.No. 60 of 1892)
அவன் ஸ்ரீரங்கம் கோயிலைப் பொன்மயமாகச் செய்தான் என்று பாராட்டுகிறது.

•  திருவரங்கநாதர் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, விஷ்ணு நரசிம்மன் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவை இவனால் கட்டப்பட்டதாக அறிகிறோம். இந்தக் கட்டிடங்களும், இரண்டாம் பிரகாரமும் பொன்னால் வேயப்பட்டதாகவும் அறிகிறோம். இத்தோடு நில்லாமல் ஆதிசேடன் திருவுருவம், பொன்னாலாகிய பிரபை, பொன்னாலான பீடம், பொன் மகர தோரணம், பொன் கருட வாகனம் ஆகியனவும் பொன்னாலேயே அவனால் வழங்கப் பட்டிருக்கிறது. ஒரிசா எனப்படும் கலிங்க நாட்டரசனைப் போரில் எதிர்கொண்டு வெற்றி பெற்று அவனுடைய கருவூலத்தில் இருந்து கைப்பற்றிய பல பொருள்களைக் கொண்டு ஸ்ரீரங்கநாதருக்கு மரகத மாலை, பொன் கிரீடம், முத்தாரம், முத்து விதானம், பொன் பட்டாடை, பொன் தேர், பொன்னால் நிவேதனப் பாத்திரங்கள், குவளைகள் போன்றவற்றை வழங்கியுள்ளான். விலையுயர்ந்த பட்டாடைகளாலும், ஆபரணங்களாலும் திருவரங்கத் திருமேனியை அலங்கரித்து மகிழ்ந்திருக்கிறான்.

• காவிரியில் இரு படகுகளை விட்டு தனது பட்டத்து யானையை ஒரு படகில் ஏற்றி அதன் முதுகில் மன்னன் அமர்ந்தான். மற்றொரு படகில் ஏராளமான ஆபரணங்களும், அணிமணிகளும், பொற்காசுகளும் அவனால் நிரப்பப்பட்டுக் குவிந்து கிடந்தன. தன்னுடைய படகினது நீர்மட்டத்திற்கு மற்றொரு படகும் வரும் வரையில் அந்தப் படகில் பொன்னைச் சொரிந்து கொண்டே இருந்தான். பின்னர் அப்பொன்னையும், அணிமணிகளையும் இக்கோயில் கருவூலத்திற்குத் தானமாக வழங்கினான். தன்னுடைய எடை அளவிற்குத் தங்கத்தினாலே திருவரங்கநாதரின் விக்ரஹம் செய்து அதையும் தன் பெயரால் (ஹேமச்சந்தன ஹரி) வழங்க வைத்துக் கோயிலுக்கு அளித்தான். இவ்வாறு அவன் செய்த பல திருப்பணிகளை 'கோயில் ஒழுகு' நூல் கூறுகின்றது.
'பொன்வேய்ந்த பாண்டியன்' என்று புகழப்பட்ட 'ஹேமச்சந்தன ராஜா'வால் எடுப்பிக்கப்பெற்ற அரங்கனது தங்க விமானம், கருடன் சந்நிதி,தங்கமணி மயமான மண்டபம் ஆகிய விமானங்களும் திருவரங்கனுக்கே அணிவித்த கிரீடம் போல விளங்கின.

• இவனது ஆட்சிகாலத்தில் நடுவிற்கூற்றத்து துஞ்சலுடையான் வரந்தருவான் எடுத்தகை அழகியான் என்கிற பல்லவராயன் என்பான் திருவிக்கிரமன் திருவீதியில் தன்னுடைய மன்னன் நலம் வேண்டி, முக்கோல் பகவர்களான ஸ்ரீவைஷ்ணவ ஸந்நியாஸிகள் தங்கியிருப்பதற்காக  'சுந்தரபாண்டியன் மடம்' என்று தன் மன்னனின் பெயரிலேயே மடம் ஒன்றைக்கட்டியுள்ளான். 




இரண்டு மீன்சின்னங்கள்  பொறிக்கப்பட்டு சுதர்சன சக்கரத்தோடு காணப்படுகிற திருவாழிக்கல் கல்வெட்டு (A.R.E.No.99 of 1936-37) விக்கிரமசோழன் திருவீதியாகிய தெற்கு உத்திர வீதியில் தென்கிழக்கு மூலையிலுள்ள சுந்தரபாண்டியன் மடமாகிய ஸ்ரீமணவாளமாமுனிகள் சந்நிதி  முன்பு இன்றும் காணலாம்.
மேலும் இவனதுஆட்சிகால கல்வெட்டு (A.R.E.No.81,82,83,84,89 of 1938-39)
கல்வெட்டு (A.R.E.No.43 of 1948-49)
கல்வெட்டு (A.R.E.No.338 of 1952-53) ஆகியன திருவரங்கம் சந்தன மண்டபத்தில் உள்ளன.

• சடையவர்மன் சுந்தர பாண்டியனின் கைங்கர்யங்கள் 
(கோயிலொழுகு தரும் தகவல்)

      திருவரங்கத்தில் பல ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் மற்றும் பல அரசர்களும் கைங்கர்யங்கள் செய்து உள்ளனர். இதில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் (எ) சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்கு மட்டும் தனி சிறப்பு உண்டு. 'சுந்தரபாண்டியம் பிடித்தேன்' என்ற அருளப்பாடு உண்டு.

||சுந்தரபாண்டியம் பிடித்தேன் என்ற அருளப்பாடு காரணம்||

இந்த அரசன் திருவரங்கம் கோயிலுக்கு சமர்ப்பித்த கைங்கரியங்கள் அளவு கடந்தவை. இந்த அரசன் அரங்கனுக்கு சமர்ப்பித்த ஆபரணங்களின் புகழ் வட இந்தியா வரை பரவி 14ஆம் நூற்றாண்டு முகலாய படையெடுப்புக்கள் நடக்க இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுவதும் உண்டு.
பெருமாள் தன் திருவாராதனம் கண்டருளும் போது ராமானுஜர் பெயரோ அல்லது எந்த ஒரு ஆழ்வார்களின் பெயரும் கேட்பதில்லை. ஆனால் இரண்டு முறை “சுந்தரபாண்டியம் பிடித்தேன்” என்று அருளப்பாடு சாதிப்பதுண்டு.
பெருமாளுக்கு கண்ணாடி காட்டும் போது (வெள்ளி கண்ணாடி)
அர்க்யம்,பாத்யம் ஆசமணீயம் சேர்க்கும் படிக்கம் பிடிப்பதற்க்கும்  உண்டு.
சுந்தரபாண்டியம் பிடித்தேன் அருளப்பாடு
இதனை அனைவரும் அனுபவிக்க வேண்டுமென்றால் நம்பெருமாள் வெளி மண்டபங்களில் (பூச்சாற்று மண்டபம், வசந்த மண்டபம், பவித்ர மண்டபம், ஊஞ்சல் மண்டபம்) திருவாராதனம் நடைபெறும் போது காணலாம். 'சுந்தரபாண்டியம் பிடித்தேன்' என்ற அருளப்பாடு 800 ஆண்டுகளுக்கு மேல் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
இந்த அருளப்பாடுக்கு ஒரு காரணம் உள்ளது. “ஒரு முறை அரசன் சுந்தரபாண்டியன் பெருமாள் திருவாராதனம் நடைபெறும் போது சேவித்து கொண்டு இருந்தான். அப்போது பெருமாள் கைங்கர்யபாரர் பெருமாளின் படிக்கம் (தீர்த்தம் சேர்க்கும் பாத்திரம்) கொண்டு வர மறந்து விட்டார். அரசன் சுந்தரபாண்டியன் தனது கிரீடத்தை எடுத்து பெருமாளின் தீர்த்தத்தை பிடித்தான். இந்த காரணத்தினால் இன்றளவும் தீர்த்தம் சேர்க்கும் படிக்கத்தின் வடிவம் அரசனின் மகுடம் தலைகீழாக வைத்தது போல் இருக்கும்.
சுந்தரபாண்டியன் திருவரங்கத்தில் எண்ணற்ற கைங்கர்யங்களைச் செயதார்.
அவற்றுள் தலைசிறந்தது பிரணவாகார விமானத்திற்கு பொன்வேய்ந்த கைங்கர்யம்.
சுந்தர பாண்டியன் தங்கத்தினால் பல கைங்கர்யங்கள் செய்ததனால் “பொன்மேய்ந்த பெருமாள் சுந்தரபாண்டிய தேவர்” என்று சிறப்பு பெயர் பெற்றார்.
சுந்தர பாண்டிய அரசனின் மற்றொரு கைங்கரியம் நம்பெருமாள் பொதுவாக அணிந்து கொள்ளும் “பாண்டியன் கொண்டை” வைகுண்ட ஏகாதசி அன்றும் உபயநாச்சியார்களோடு திருச்சி வகையில் எழுந்தருளும் போதும் இந்த பாண்டியன் கொண்டை சாற்றப்படும்.
இந்த பாண்டியன் கொண்டையை பெருமாள் இரண்டு விதமாக சாற்றி கொள்வார் .
(இந்த பாண்டியன் கொண்டையில் மூன்று பகுதிகள் இருக்கும் (தத்வ த்ரயம் நிலை)
1) அடி பகுதி
2) வட்ட வடிவம் கொண்ட நடு பகுதி
3) குமிழ் பகுதி)

இந்த பாண்டியன் கொண்டை 19ஆம் நூற்றாண்டு பழுதாகி “வேங்கடாத்ரி ஸ்வாமிகள்” என்ற அடியவர் புனர்நிர்மானம் செய்த செய்தியும் உண்டு.

• சுந்தர பாண்டிய அரசனின் மற்றொரு கைங்கரியம்
      சுந்தர பாண்டியன் வடக்கே ஆந்திர மாநிலம் நெல்லூர் முதல் தமிழகத்தில் இருந்த சோழ ஹொய்சள மற்றும் கேரளத்தை ஆண்ட சேர அரசர்களையும் வெற்றி கொண்டதனால் “எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள்” என்ற சிறப்பு பெயருடன் விளங்கி வந்தார். தற்போது நம்பெருமாள் பவித்ர உற்சவம் கண்டருளும் மண்டபத்தின் பெயர் “சேரனை வென்றான்(சேனை வென்றான்) மண்டபம் ஆகும். இந்த மண்டபம் சுந்தரபாண்டியன் சேர அரசனை வென்றதன் நினைவாக கட்டியது.
(சேரனை வென்றான்) பவித்ர உற்சவம் மண்டபத்தில் நம்பெருமாள்
துலா புருஷ மண்டபம் பெயர் காரணம்:
“திருமுகத்துறையிலே ஒரு நிறையாக இரண்டு ஓடம் கட்டி அதில் ஒரு ஓடத்தில் தச்சுமுழத்திலே ஏழு முழம் இருக்கிற பட்டத்தானையின் மேலே தானும் தன்னுடைய ஆயுதங்கலோதேனிருந்து ஒரு ஓடத்திலே அந்த மட்டத்துக்சரியான ச்வேர்ணம் முத்து முதலான நவரத்னங்கள் ஏற்றி யானை யானை துலாபுருஷந தூக்கி …..”
            ஒரு தச்சு முழம் = 33 inch
தச்சுமுழத்திலே ஏழு முழம் இருக்கிற பட்டத்து யானை (33 × 7 = 231 inch)
19 அடி உயர யானையை ஒரு படகின் மேல் ஏற்றி அதற்கு மேல் அம்பாரியில் தானும் தனது ஆயுதங்களுடன் ஏறி அமர்ந்து கொள்வார். அதன் அருகில் மற்றொரு படகை நிறுத்தி தான் அமர்ந்த படகு எத்தனை ஆழம் இறங்குறதோ அதே அளவுக்கு இறங்க அந்த படகில் தங்கம், முத்து, நவரத்தினம் ஆகிய தனங்களை ஏற்றி துலாபாரம் போல் சமநிலையாக இருக்க வைத்து அந்த தனங்களை கொண்டு நான்கு கால் மண்டபம் கட்டியதால் இதற்கு துலா புருஷ மண்டபம் என்று பெயர்.
சுந்தரபாண்டியன் 24 நான்கு கால் மண்டபங்கள் கட்டினார்.இந்த நான்கு கால் மண்டபங்களுக்கு துலா புருஷ மண்டபம் என்று பெயர். இந்த மண்டபங்கள் இரண்டாம் திருசுற்று (ராஜ மகேந்திரன் திருவீதி) முதல் ஐந்தாம் திருசுற்று (அகனங்கன் திருவீதி) வரை பல்வேறு இடங்களில் அமைய பெற்றுள்ளன.

• பெருமாள் செல்வங்களை ஏற்க மறுத்தது:
“அந்த த்ரவ்யத்தை கைங்கர்யம் பண்ண உத்யோகிக்குமளவில் அந்தத்ரவ்யம் ஸபரிகரரான ஸ்வாமிக்குத் திருவுள்ளமாகாதபடியினாலே இரண்டு வருஷம் மறிபட்டுக் கிடந்தது....”
அரசன் தான் சமர்ப்பிக்கும் தனம் என்று பெருமையுடன் கொடுத்தபோது பெருமாள் இந்த தனங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து ஆரியப்படால் வாசலின் வெளியே இரண்டு ஆண்டுகள் கிடந்தன. தங்கம், வெள்ளி, வைரம், முத்து, பவளம் என செல்வங்கள் பெருமாள் மறுத்த படியினாலே திருவரங்க வாசிகள் எவரும் தொடாமல் சீந்துவாரற்று கிடந்தது.

• பெருமாள் செல்வங்களை ஏற்றுக்கொண்டது:
"அநந்தரம் அவனுடைய ஆர்த்தியாலேயும் அனுஸரணத்தினாலேயும் ஸபரிகரரான பெருமாள் திருவுள்ளமானவந்தரம் அந்த த்ரவயயத்தை கருவு கவத்திலே முதலிட்டு பண்ணின கைங்கர்யத்துக்கு…"
[விவரம் – கோயிலொழுகு]
இரண்டு ஆண்டுகள் பின்னர் சுந்தரபாண்டியன் இது பெருமாளின் சொத்துக்கள் என்றும் அவருடையதை அவரே எடுத்துக்கொள்ள வேண்டியது. தான் இதில் ஏதும் செய்யவில்லை என்று சரண் அடைந்த பிறகு பெருமாள் மனமுவந்து ஏற்றார்.

• சரஸ்வதி பண்டார நூலகம்:
சுந்தர பாண்டியன் திருவரங்கம் கோவில் திருப்பணிகள் செய்ததோடு இல்லாமல் பழங்கால சுவடிகளையும் பாதுகாத்து வந்தார். கோவிலில் சரஸ்வதி பண்டார நூலகத்தில் பூர்வாசார்யர்கள் அருளிச்செய்த நூல்களின் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பாக வைத்து அதற்கு பணியாளர்களை நியமித்து அனைவருக்கும் ஓலைச்சுவடிகள் கிடைக்க ஆவன செய்தார்.
இந்த சரஸ்வதி பண்டாரம் நூலகம் மூன்றாம் திருச்சுற்றில் இருந்தது.  சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவர் சன்னதிகள் அமைந்துள்ள பவித்ர மண்டபத்திற்கும் பூச்சாற்று உள்கோடை மண்டபத்திற்கும் இடையில் அமைந்துள்ள நடைமாளிகையில் இடது புறத்தில் அமைத்திருந்தது.
இந்த ஓலை சுவடிகள் அனைத்தும் முகலாய படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது.
(இன்றும் திருவரங்கம்
பெரிய கோயிலில் ஒரு நூலகம் உள்ளது ஆனால் அது  எவருக்கும் உபயோகமின்றி உள்ளது.)
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனை (கி.பி. 1251 - 1271)  
 அடுத்து 25 ஆண்டுகள் வரை எந்தவிதக் குழப்பமும், தொந்திரவும் இன்றி அரங்கநாதர் நிம்மதியாக இருந்து வந்தார்.
ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் அதாவது கி.பி. 1268-1308 ஆம் ஆண்டு காலத்தில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மட்டும் அல்லாமல், முக்கியமாய்த் தென்னகத்துக் கோயில்களுக்கும் மாபெரும் பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.
• போர்ச்சுக்கீசிய யாத்திரீகனான 'மார்க்கோபோலோ' பாண்டிய மண்டலத்திற்கு வந்து இப்பகுதியின் சிறப்பையும் செல்வச் செழிப்பையும் வியந்து எழுதியுள்ளார்.
 பாண்டிய நாட்டு மக்களையும், மன்னனையும் பற்றி அவர் எழுதியுள்ளவை அக்காலத்தில் நாட்டின் பெரும் செல்வத்தை மட்டும் குறிப்பிடாமல் மக்களின் உயர்ந்த பண்பையும் குறிப்பிடுகின்றது. தமிழ்நாட்டின் பெரும் செல்வ வளத்தையும் முத்துக்குளித்துறையின் வளத்தையும் பற்றிப் பெருமையாகப் பேசிய மார்க்கோபோலோ தமிழகத்து மக்கள் அனைவரும் இருமுறை குளித்துச் சுத்தமாக இருந்ததாகவும், குளிக்காதவர்களைத் தூய்மைக்குறைவுள்ளவர்களாகக் கருதியதையும், நீர் அருந்துகையில் உதட்டுக்கு மேல் வைத்துத் தூக்கிக் குடித்ததையும், மன்னனாகவே இருந்தாலும் தரையில் அமர்வதைக் கெளரவக் குறைவாய்க் கருதாததையும் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்.
• இத்தகைய யெருமைக்குரிய குலசேகர பாண்டியன் காலத்திலேயே பாண்டிய நாட்டில் பிரச்னைகள் ஆரம்பித்தன. இவனுக்குப் பட்டமஹிஷி மூலம் ஒரு மகனும், ஆசை நாயகி மூலம் இன்னொரு மகனும் இருந்தனர். பட்டத்து இளவரசன் சுந்தரபாண்டியன் என்னும் பெயருள்ளவன். நியாயமாய் இவனே பட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் “எம்மண்டலமும் கொண்டருளிய” என்னும் பட்டம் பெற்ற குலசேகரனோ, தன் ஆசை நாயகியின் மகனான வீரபாண்டியனுக்கே அரசு உரிமையை அளித்தான். இது இரு சகோதரர்களுக்குள் பகைமையை உண்டாக்கியது என்பதோடு அந்நியரைத் தென்னகத்தில் வரவும் வழி வகுத்தது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஸ்ரீரங்கம் கோயிலும், சிதம்பரம் கோயிலும், மதுரை மீனாக்ஷியம்மன் கோயிலும் ஆகும்.

• ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் அதன் அரசியல் பின்னணியையும் அடுத்த பதிவு - Postல பார்ப்போம்.

                 அன்புடன்

         ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
 E.P.I.இராமசுப்பிரமணியன் 



Wednesday, October 10, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 3)





• 6வது திருச்சுற்று



                       ||திருவிக்கிரமன் திருவீதி||

• 6வது திருச்சுற்று
 சக்கரம்,சங்கம் என்னும் துவாரபாலகர்களை வணங்கி விட்டு 'புவர்லோகம்' என்று அழைக்கப்படும்  6 வது திருச்சுற்றாகிய 'திருவிக்கிரமன்
திருவீதி' என்று அழைக்கப்படும் ப்ராகாரத்தினுள் நுழைவோம்.
ஒருபுறம் மதிலும் எதிர்பக்கத்தில் கட்டிடங்களும் காணப்படுகின்றன. 
இது ஜவுளிக்கடைகளும்,
பாத்திரக்கடைகளும் நிறைந்து ஒரு கடைவீதி மாதிரி அமைந்துள்ளது. இந்த
வீதியில் பெருமாள் திருவாகனங்கள் உலாப்போகும் காரணத்தால் இதற்கு
உள் திருவீதியென்றும் உத்திரவீதி என்றும் பெயர். திருக்கோயிலின் உள்துறை நிர்வாகிகள் தங்கும் வீதியாக  'உள்துறை வீதி'  என்றும்
கூறப்படுகிறது.
 யானைகட்டும்
மண்டபம்,உத்தராதிகள் (பாங்கூர்) சத்திரம், தைத்தேர் நிற்குமிடம், அர்ச்சகர்களின் திருமாளிகை, ஸ்ரீஉத்தம நம்பி திருமாளிகை, மேலக்கட்டைகோபுரம்(இதன் வழியாக வெளியே வந்தால், 7வது மேற்கு திருச்சுற்று மற்றும் தெப்பக்குளத்தை அடையலாம்), ஸ்ரீபுத்தங்கோட்டம் ஸ்வாமி திருமாளிகை, ஸ்ரீஎம்பார் திருமாளிகை, வடக்கு கட்டை கோபுர வாசல் ( இவ்வழியே
 7வது வடக்குச் சுற்று,
வடதிருக்காவேரி, திருமங்கை மன்னன் படித்துறை, தசாவதாரன் சந்நதி ஆகியவற்றை காணச் செல்லலாம்)
தாயார் சந்நதிக்கு செல்லும் வடபுறக்கோபுர வாசல், அதன் எதிரே
புரட்சித்துறவி ஸ்ரீராமானுஜர் தங்கியிருந்து ஸ்ரீரங்கத்து நிர்வாகத்தைக்
கவனித்த மடமாகிய
 'ஸ்ரீரங்கநாராயண
ஜீயர் ஸ்வாமி மடம்' என்ற பெயரில் தொன்று தொட்டு ஜீயர்கள்
பரிபாலனத்திலேயே இருந்து வருகிற மடம்
அஹோபில மடம்,
ஆஞ்சநேயர் சந்நதி,(பெரிய பெருமாள் திருவடி இங்குள்ளது)
கீழக்கட்டை கோபுர வாசல் ( இதன் வழியே 7வது கிழக்கு திருச்சுற்று, காட்டழகிய சிங்கர் கோயில் ஆகியவற்றிற்கு செல்லலாம். அஞ்சாவது கிழக்கு திருச்சுற்றிலுள்ள ஆயிரம் கால் மண்டபம், சேஷராயர் மண்டபம் கண்டுகளிக்க வழியான வெள்ளைக்கோபுரம் இந்த 6வது வீதியில் உள்ளது. அரையர்கள் திருமாளிகை, கோயில் கந்தாடைஅண்ணன் ஸ்வாமிதிருமாளிகை,
 மணவாள
மாமுனிகள் மடம் போன்றனவும் இதில்தான் உள்ளது. மணவாள மாமுனிகள்
தமது அவதார ரகசியத்தை உத்தம நம்பி என்னும் தமது சீடருக்கு இங்குதான்
காட்டியருளினார்.
இம்மடத்தின் தூண்களில் இந்நிகழ்ச்சி செதுக்கப்பட்டுள்ளது. பெரியபெருமாளின் திருப்பார்வை படும் இடம் 'மணவாளமாமுனிகள் மடம்' ஆகும் என்பது ஐதீகம்.
 மார்வாரி சத்திரம் ஆகியன உள்ளன. 5வதுதிருச்சுற்று நுழைவதற்கான நான்முகன் கோபுரம் (அ) ஸ்ரீரங்கா ரங்கா ரங்கா கோபுரமும் இந்த (தெற்கு) உத்தர வீதியில் உள்ளது.


    ||:அரசியல் வரலாற்று மரபு:||

வரலாறு (History) (கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: "ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு") என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

வாய்மொழி வரலாறுகளே வரலாற்றின் முதல் வடிவங்கள் எனலாம்.
எழுத்து வடிவ வரலாறும் எழுத்துவடிவ இலக்கியமும் வலுவாக உருவாகிய  பிறகு  'வாய்மொழி வரலாறு' அழியத் தொடங்கின.
  வரலாறென்பது இறந்தகாலத்தை நிகழ்காலம் வழியாக எதிர்காலத்துடன் இணைக்கும் ஒரு பெரிய சித்தரிப்புதான். தொடர்ச்சியை உருவாக்குவதே அதன் இலக்கு.

• வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்திருந்த மக்கள்
பெரிய பெரிய பெருங்கற்குழிகளில் (பாழிகளில்) பிணங்களைப் புதைக்கும்
வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இக் குழிகளில் பலவகையான இரும்புக்
கருவிகளும் சக்கரத்தைக் கொண்டு வனையப்பட்ட மட்பாண்டங்களும்
புதைக்கப்பட்டுள்ளன. இத்தகைய புதைகுழிகள் மேற்காசிய நாடுகளிலும்,
வடஆப்பிரிக்காவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
அவற்றுக்கும், தமிழகத்துக் குழிகட்கும் பல ஒற்றுமைகள் தோன்றுகின்றன.
ஆதிச்சநல்லூரிலும், கீழடி மற்றும் புதுச்சேரிப் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்ட
புதைபொருள்களுள் பல சைப்ரஸ் தீவிலுள்ள ‘என்கோமி’ என்னும்
இடத்திலும், பாலஸ்தீனத்திலுள்ள காஸா, ஜெரார் என்னும் இடங்களிலும்
கண்டெடுக்கப்பட்ட புதைபொருள்களைப் போலவே காணப்படுகின்றன.
இவற்றையெல்லாங் கொண்டு பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைகளையும்
குடிப் பெயர்ச்சிகளையும் ஒருவாறு யூகித்து அறியலாம்.

• இவ்வாறு ‘கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்தக்குடி'யான தமிழ்க்குடிச்சமூகம் சங்ககாலத்தின் தொடக்க காலத்திலேயே தன்னுடைய நிலவியல் எல்லைகளை தெளிவாக வகுத்துக்கொண்டிருந்ததை நாம் பல சங்கப் பாடல்களின் மூலம் அறியலாம். இவ்வாறு தன்னுடைய நிலவியல் எல்லைகளை தமிழ்ச்சமூகம் எப்போது பதிவுசெய்ததோ அதையே தமிழக வரலாற்றின் தொடக்கமாக கருதலாம்.
சிலப்பதிகாரம் தமிழ்நிலத்தை வரையறை செய்கிறது.
"நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு..." [வேனில்காதை]
(வடக்கே நெடியோனாகிய திருமால் நிற்கும் வேங்கட மலை, கீழே தொடிவளை அணிந்த தென்குமரியின் கடல். நடுவே உள்ளது தமிழ்நன்னாடு என்கிறார் இளங்கோவடிகள்)
இந்த நில அடையாளம் காலம் செல்லச்செல்ல மேலும் பரவலான அங்கீகாரம் பெற்றது என்பதை தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பனம்பாரனார்
"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து.."
என்று சொல்வதிலிருந்து காணலாம்.

• தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக தமிழ்மொழியே இருந்துள்ளது என்பதை சிலப்பதிகார வரியும் பனம்பாரனாரின் வரியும் காட்டுகின்றன. ‘தமிழ்கூறு நல்லுலகம்’ என்ற சொல்லாட்சி தமிழ்பேசப்படுவதனாலேயே இந்த நிலப்பகுதி தங்களுடையதாக ஆயிற்று என்று அன்றைய தமிழர் எண்ணியிருந்ததைக் காட்டுகிறது.
நிலம், மொழி என்னும் இவ்விரு சுயஅடையாளங்களும் உருவாகிவந்த காலகட்டத்தில் தமிழ் வரலாறு தொடங்குகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். பழந்தமிழ்நூல்கள் குறிப்பிடுவதுபோல திருப்பதிக்கு தெற்கே குமரிவரைக்கும் அரபிக்கடல் முதல் வங்காளவிரிகுடா வரைக்கும் விரிந்திருக்கும் நிலத்தை அந்த வரலாற்றின் களம் என்று வரையறை செய்யலாம்.
பழந்தமிழகத்தின் வரலாறானது பண்டைய எகிப்து,
பாபிலோனியா, சுமேரியா, ரோம், கிரீசு ஆகிய நாடுகளின் வரலாறுகளுடன்
தொடர்பு கொண்டுள்ளன.
தமிழக வரலாற்றைக் கீழ்க்காணுமாறு பகுத்துக் கொள்ளலாம்:
வரலாற்றுக்கு முற்பட்ட காலம், சங்க காலம், பல்லவர் காலம், பாண்டியர்
சோழரின் பேரரசுக் காலம், மத்திய காலம், பிற்காலம் என ஆறு காலங்களாக
வரையறுத்துக் கொள்ளலாம். இப் பல்வேறு காலங்களில் வாழ்ந்துவந்த
தமிழரின் வாழ்க்கை வரலாறுகளை ஆராய்ந்தறிவதற்கு நமக்கு உதவியுள்ளவை
புதை பொருள்கள், சங்க இலக்கியங்கள், தமிழ்நாட்டைப் பற்றி அயல்நாட்டு
வரலாற்று நூல்களில் காணப்படும் குறிப்புகள், புராணங்கள், சமய
இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், முஸ்லிம் வரலாற்று
ஆசிரியர்களின் குறிப்புகள், பிரிட்டிஷ் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனிகள்,
அரசாங்கங்கள் ஆகியவற்றின் ஆவணங்கள், டச்சு போர்ச்சுகீசியப்
பாதிரிகளின் நாட்குறிப்புகள், கடிதங்கள், அறிக்கைகள், புதுச்சேரி
ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புப் போன்ற ஆவணங்கள்
ஆகியவையாம். பிற்கால வரலாற்றிற்கு இந்திய விவரங்களின் ஆவணங்கள்
மிகப் பயன்படுகின்றன. தமிழகத்தில் கோயில்களிலும் குகைகளிலும்
அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களும் அவ்வக்
காலத்து மக்களின் கலை வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன. ஆகையால், தமிழக
வரலாறு எழுதும் முயற்சிக்கு அவை பெரிதும் துணைபுரிகின்றன.
ஆனால், விரிவான வரலாறு ஒன்று
எழுதுவதற்கு இவையும் போதுமானவை என்று கூறமுடியாது. தமிழகத்தில்
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் முப்பதினாயிரத்துக்கு மேற்பட்டவை
இன்னும் பதிப்பிக்கப்படாமலே உள்ளன. அவை வெளியாகக் கூடிய செய்திகள்
இப்போது தொகுக்கப்பட்டுள்ள செய்திகளுக்கு முரண்பாடாகவும், விளக்கங்
கொடுக்கக்கூடியனவாகவும், கூடுதலான தகவல்கள் அளிக்கக்கூடியனவாகவும்
இருக்கக்கூடும்.

  தமிழக வரலாற்றைத் தொகுக்க உதவும் கல்வெட்டுகள் பல்லவர்
காலத்தில்தான் தொடங்குகின்றன. பல்லவர்கள் காலத்திய கல்வெட்டுகள் ஏழு, எட்டாம்
நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை.
     பாண்டியர் சோழர் காலத்திய வரலாற்றைத் தொகுப்பதற்கும் அவர் காலத்திய
மக்கள் சமுதாயத்தின் நிலையை அறிந்து கொள்ளுவதற்கும்
கல்வெட்டுகளேயன்றி அக் காலத்துப் பொறித்து அளிக்கப்பெற்ற செப்பேட்டுப்
பட்டயங்களும் பெரிதும் துணை புரிகின்றன. வேள்விக்குடிச் செப்பேடுகளும்,
பெரிய சின்னமனூர்ச் செப்பேடுகளும் கிடைத்திராமற் போனால் ஏழு முதல்
பத்தாம் நூற்றாண்டு வரையிலான பண்டைய பாண்டியர் வரலாறும்,
களப்பிரரைப்பற்றிய சில தகவல்களும் நம் கைக்கு எட்டியிராது.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆளத்துவங்கிய, 18-ஆம் நூற்றாண்டில் தான்
இந்திய வரலாற்றை எழுத வேண்டிய கவனஈர்ப்பு
 அறியப்பட்டது எனலாம். ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் பெரும்பாலும் பேரரசர்கள், பரம்பரையாக ஆட்சி செய்வது போன்றவற்றையே எழுதிவந்தனர். அரசர் தவிர வேறு எந்தவிதமான பயனுள்ள அரசியல், சமூக அமைப்புகளைப்பற்றியும் இவர்கள் எவ்விதக் குறிப்பும் கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும் இந்திய மக்கள் சோம்பேறித்தனமான பிற்போக்கு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று ஆழமான எண்ணங்களைத் தம் மனதில் கொண்டே வரலாறை எழுதினர். பாகுபாடற்ற அணுகுமுறையுடன் இந்திய வரலாறு இவர்களால் பார்க்கப்படவில்லை என்னும் கருத்து இன்றளவிலும் உள்ளது.
 சர் வில்லியம் ஜோன்ஸ், சார்லஸ் வில்கின்ஸ், H.T. கோல்புரூக், H.H. வில்சன்,மேக்ஸ் முல்லர் உட்பட பல ஐரோப்பிய அறிஞர் பெருமக்கள் இந்திய நாகரிகத்தையும், பண்பாட்டையும் புரிந்துகொள்வதற்கும், இந்திய வரலாறு பின்பு சரித்திர ஆசிரியர்களால் எழுதப்படுவதற்கும் இவர்களது எழுத்து உதவியாக இருந்துவந்துள்ளது. இவர்களின் எண்ணமும் எழுத்தும் கூட ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாறு எழுதப்பட்டதற்கு காரணமாக அமைந்தது என்று கருதுவோரும் உண்டு.
ஜான் ஸ்டூவர்ட் எழுதிய பிரித்தானிய இந்தியாவின் வரலாறு (History of British India) என்னும் நூல் 1817-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 'இந்தியர்களின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் காட்டுமிராண்டித்தனமானது, காரண காரியங்களுக்கு எதிர்மறையானது' என்று இந்நூல் வலியுறுத்தியது. ஆங்கில அதிகாரிகள் இந்தியா வருவதற்கு முன் பயிற்சியின் போது இந்நூலை ஒரு பாடமாகவே கற்று வந்தனர். இந்நூல் இந்தியர்கள் குறித்த ஒரு மோசமான மனப்பான்மையை அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தியது.

வி. ஏ. சிமித் என்னும் ஆங்கில அதிகாரி, இது போன்று வந்தவர்தான். இவர் ஆக்ஸ்போர்டு இந்திய வரலாறு (The Oxford history of India) என்னும் நூலை எழுதினார். ஆனால் ஸ்டூவர்ட் மில் போன்று அல்லாமல் இந்தியர்களைக் குறித்து வின்சென்ட் சிமித் அவ்வளவு மோசமான எண்ணம் கொண்டிருக்கவில்லை. இருந்தாலும் இந்தியர்கள் 'ஆளத்தெரியாதவர்கள்' என விவரிக்கிறார். இதுபோன்று ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாற்றை எழுதுவதற்கு இந்தியச் சரித்திர ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்திய அரசுமுறை குறித்தும் அதன் மேன்மை குறித்தும் பலவாறு விளக்கிவந்தனர்.

பிற்காலத்தில் இந்திய வரலாறு அதன் உண்மையான பரிமாணத்துடன் எழுதப்படவேண்டும் என பல அறிஞர்கள் விரும்பி, அவ்வாறு எழுதப்பட்டும் வந்துள்ளது.
கல்வெட்டுகள்,செப்பேடுகள், ஓவியங்கள், சுவடிகள்,இலக்கியங்கள் ஆகியவற்றைக் கொண்டு 19ம் நூற்றாண்டு வரையிலான தென்னிந்திய வரலாறு கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
அவர்களால் உருவாக்கப்பட்டது.
கே.ஏ.நீலகண்டசாஸ்திரி தென்னிந்திய வரலாற்றை எழுதியதில் தனிப்பட்ட ஆளுமை செலுத்தியவர். அவருடைய வரலாற்று ஆய்வுகள் இன்றைக்கும் தமிழ்ச்சமூகம் குறித்த ஆழ்ந்தபுரிதலுக்கு உறுதுணையாக உள்ளது.

 முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு பற்றி அறிய முற்படும் போது,
சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பேரரசுகளே நான்கு பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்கள் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர், இதனால் உலகில் அழியாமல் வழக்கத்திலிருந்த சில பழமையான இலக்கியங்களின் வளர்ச்சி சாத்தியமானது. இவர்கள் ரோமப் பேரரசுடன் அதிகப்படியான கடல்வழி வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இப்பகுதியின் தலைமைக்காக இந்த மூன்று வம்சத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாக போரிட்டுக் கொண்டனர். மூன்று பேரரசுகளும் பாரம்பரியமாக ஆட்சி செய்துவந்த இந்தப் பகுதியை மூன்றாம் நூற்றாண்டில் நுழைந்த களப்பிரர்கள் விரட்டியதால் இப்பகுதியின் பாரம்பரிய ஆட்சி வடிவம் மாறியது.

பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் மீட்டெழுந்து களப்பிரர் ஆதிக்கத்தை முறியடித்து தங்களின் பாரம்பரிய பேரரசுகளை மீண்டும் நிலைநாட்டினர். வீழ்ந்திருந்த 'சோழர்கள்' ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும் பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் சோழப் பேரரசை விரிவுபடுத்தினர். வங்காள விரிகுடா பகுதியில் சோழப் பேரரசு சுமார் 3,600,000 கி.மீ அளவிற்குப் பரவி இருந்தது.
14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இசுலாமிய படைகளின் ஊடுருவல் காரணமாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டின் மையப்பகுதியில் சேர,சோழ,பாண்டியர்களாகிய பண்டைய மூன்று தமிழ் பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக, தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது. விஜயநகரப் பேரரசின் கீழ் 'தெலுங்கு பேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள்' தமிழ்ப் பகுதியை ஆட்சி செய்தனர். மராத்தியர்களின் குறுகிய கால வருகை தமிழ்ப் பகுதியில் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகைக்கு வழிவகுத்தது. பதினேழாம் நூற்றாண்டின் போது இவ்வாறு வணிகம் செய்ய வந்தவர்கள் இறுதியில் இந்தப் பகுதியின் பூர்வீக ஆட்சியாளர்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய 'சென்னை மாகாணம்' பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.
இப்பகுதி 'பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால்' நேரடியாக ஆட்சி செய்யப்பட்டது.

 இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு மொழியியல் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு 'தமிழ்நாடு' மாநிலம் உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவான பிறகு
அரசியல் நிலைமை மூன்று விதமான நிலைகளை அடைந்துள்ளது. 1947 ஆம் ஆண்டுக்கு பிறகு இருந்த காங்கிரசு கட்சியின் செல்வாக்கு 1960 ஆம் ஆண்டில் திராவிட கட்சியின் கொள்கைகளால் மாறியது. 1990 ஆம் ஆண்டின் இறுதி வரை இந்த நிலை நீடித்திருந்தது. திராவிட அரசியல் கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கூட்டணி அரசாங்கம் அமைக்கும் நிலையை தற்போது கொண்டிருக்கிறது.

• அரசியல் வரலாற்று மரபில் திருவரங்கம் பெரியகோயில்

திருவரங்கம் பெரியபெருமாள் திரேதாயுகத்துப் பெருமாள் என 'புராண மரபு' மூலம் நம்பப்படுகிறது. புராணத்தில் கூறப்படும் 'தர்மவர்மா' மற்றும் 'கிளிச்சோழன் என்னும் கிள்ளிவளவன்' ஆகியோரின் காலம் சரிவர
அறியமுடியவில்லை.

• சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் பெரிய கோயில் புகழ் பெற்றது. அதனால் இரண்டாயிரம் ஆண்டுகளாக திருவரங்கம் பெரியகோயில் ஆகம முறையிலான வழிபாடு நடப்பது அறியமுடிகிறது.  சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் "விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், 'ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன்' என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது" என வர்ணிக்கப்படுகிறது.
அகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தன்னார்) திருவரங்கம் பெரியகோயிலில் நடக்கும் 'பங்குனி உத்திரம்' திருவிழா பற்றி குறிப்புள்ளது.

• திருவரங்கம் பெரியகோயிலில்  வரலாற்று  கால கல்வெட்டுகள்
 சுமார் 800க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. Archaeological survey of India; Annual epigraphic Volume XXIV -ல் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் South Indian Temple Inscription என்ற தொகுப்பு நூலிலும் காணலாம். செப்பேடுகளைப் பற்றிய செய்திகள் Epigraphia indica களில் வெளிவந்தன.

    • கி.பி. 10ம் நூற்றாண்டு - இது சோழர்கள் தமிழ்நாட்டின்
ஆட்சியுரிமையில் சிறந்திருந்த காலம்.
ஏறத்தாழ 181 சோழர் கல்வெட்டுகள் திருவரங்கம் பெரியகோயிலில் உள்ளது.

• முதலாம் ஆதித்த கரிகாலன் (கி.பி.871-907) காலத்திய கல்வெட்டுகள் இரண்டு (A.R.E.No.69 & 70 of 1892) நான்காம் திருச்சுற்றான ஆலிநாடன் திருச்சுற்றில் அமைந்துள்ள கொட்டாரத்தின் தரைப்பகுதியில் உள்ளன.

• முதலாம் பராந்தகச்சோழன் (கி.பி. 907- 955) காலத்து எட்டு கல்வெட்டுகள்  (A.R.E.No. 71,72,73,95,345,415,417,418 of 1961-62)  திருவரங்கம் பெரிய கோயிலில் உள்ளன.
கி.பி. 953 ல் முதலாம் பராந்தக சோழனின் 17ம் ஆட்சியாண்டுக்
கல்வெட்டு ஒன்று (A.R.E.No. 72 of 1892) இம்மன்னன் இக்கோவிலுக்கு ஒரு வெள்ளி மற்றும் தங்கத்திலான  குத்துவிளக்கு
அளித்ததையும் அதற்கு , பட்டுத்திரி, நூல், நெய்யோடு சேர்த்து எரிப்பதற்காக 'பீமஸேனி கற்பூரம்' வாங்குவது உட்பட அதன்
நிலையான செலவினங்கட்கு 71 கழஞ்சு பொற்காசுகள் வழங்கியதையும் தெரிவிக்கிறது.

• இரண்டாம் பராந்தகன் எனும் சுந்தரச்சோழன் காலத்தைய (கி.பி. 957 -970) கல்வெட்டு(A.R.E.No.416 of 1961-62) ஒன்று மட்டும் சந்தன மண்டபத்தின் இடது பக்கம் அமைந்துள்ளது.

• உத்தமசோழன் (கி.பி.973-985) காலத்திய கல்வெட்டு (A.R.E.No.65 of 1938-39) ஒன்று இரண்டாம் திருச்சுற்றிலுள்ள சந்தன மண்டபத்தில் உள்ளது. அதில் 'பீமஸேனி கற்பூரம்' கலந்த நெய்யைக் கொண்டு திருவிளக்கு ஏற்றும் நடைமுறை கூறப்படுகிறது. கோயில் விளக்குகளிலே சேர்க்கப்படும் நெய்யை கோயில் ஊழியர்கள் தங்களது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தாதிருக்க பீமஸேனி கற்பூரம் நெய்யுடன் சேர்த்து எரிப்பது அக்கால  வழக்கம் ஆகும்.

• முதலாம் ராஜராஜன்(கி.பி.985-1014) மற்றும் முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012-1043) காலத்திய பத்து கல்வெட்டுகள் (A.R.E.No.19 of 1948-49 327,328,331,341,342,343,344,344a,370)  உள்ளன.

• முதலாம் ராஜாதிராஜன்
(கி.பி. 1018-1054) காலத்திய கல்வெட்டுகள் இரண்டு (A.R.E.No.333,334 of 1952-53) சக்கரத்தாழ்வார் சந்நிதி முன் அமைந்துள்ள மண்டப தாழ்வாரத்தில் உள்ளது.

  • இராசமகேந்திர சோழன் (கி.பி. 1058-1063) திருவரங்கம் பெரியகோயிலில் பல திருப்பணிகளைச் செய்துள்ளதை 'கோயிலொழுகு'  (இராசமகேந்திர சோழன் கைங்கர்யம்) மூலம் அறியலாம். இங்குள்ள இரண்டாம்
பிரகாரத்தில் முதலாம் பிராகாத்திற்கான திருமதிலை கட்டினான். இரண்டாம் திருச்சுற்றினை திருப்பணி செய்தவன் இவனே. அதனால் 'இராசமகேந்திரன் திருவீதி'
என்றே இன்றும் வழங்கப்படுகிறது.

• இராஜேந்திரச் சோழனின் மகன் வீர ராஜேந்திரன் அவன்மகன்  அதிராஜேந்திரன் (கி.பி. 1068-71) காலத்திய கல்வெட்டு ஒன்று மட்டும் நாழிகை கேட்டான் வாசலின் நுழைவு வாசல் பக்கச்சுவரில் உள்ளது.

• திருவரங்கம் பெரியகோயிலில் காணப்படும் சோழர்காலக் கல்வெட்டுகளில்  முதலாம் குலோத்துங்கச்சோழனின்  (கி.பி.1070-1122) கல்வெட்டுகளே மிகுதியானவை ஆகும். ஸ்ரீரங்கம் கல்வெட்டு எண். 26 தொடங்கி 108 முடிய உள்ள இவனது கல்வெட்டுகள் மூன்றாம் திருச்சுற்றான குலசேகரன் திருச்சுற்றில் அமைந்துள்ளன.

  • வைணவ சமய புரட்சித்துறவி ஸ்ரீஇராமானுஜர் (கி.பி.1020-1137) காலத்திலே நடந்த நிகழ்வுகள்  ஸ்ரீரங்க வரலாற்றின் 'பொற்காலம்' என்றே கூறலாம். இவரின் அரிய
சேவைகளை 'கோயிலொழுகு' என்னும் நூல் சிறப்பித்துப் பேசுகிறது. அவற்றை சமய மரபில் விரிவாக காணலாம். முதலாம் குலோத்துங்க சோழன் இராமானுஜருக்குப் பல கொடுமைகள் விளைவித்ததாகவும் இதனால் ராமானுஜர் சிலகாலம்
(சுமார் 13 ஆண்டுகள்) ஒய்சாளப் பேரரசின் மைசூர்பகுதியில் உள்ள மேல்கோட்டை- திருநாராயணபுரத்தில்  தங்கியிருந்தார் எனவும் கோயிலொழுகின் மூலம் அறிய முடிகிறது.

• விக்ரமச்சோழன் (கி.பி.1118-1135) ஆட்சிகாலத்திய. கல்வெட்டுகளை (A.R.E.No27,28,31,33,37,38,39,112,115,127,438,340,339)
மூன்றாம் திருச்சுற்றுகளில் காணலாம்.

  • இரண்டாம் குலோத்துங்கச்சோழன்  ( கி.பி. 1133-1150) காலத்திய  இரு கல்வெட்டுகள் (A.R.E.No.55,56 of 1936-37) நான்காம் திருச்சுற்றுகளில் உள்ளன. 

  • இரண்டாம் இராஜராஜச்சோழன்  ( கி.பி. 1133-1150) காலத்திய  கல்வெட்டுகள் (A.R.E.No.68 of 1936-37
122 of 1947-48) நான்காம்
திருச்சுற்றுகளில் உள்ளன. 

  • இரண்டாம் இராஜாதிராஜச்சோழன்  ( கி.பி. 1163-1178) காலத்திய  கல்வெட்டுகள் (A.R.E.No.63,73 of 1936-37
267,268,269 of 1930) நான்காம்
திருச்சுற்றில்  உடையவர்சந்நதி எதிரில் உள்ளன. 

 • மூன்றாம் குலோத்துங்க சோழன்(கி.பி.1178-1218)
 காலத்தில்
இத்தலத்தின் நிர்வாகம் இவனது நேரடிக் கவனத்தின் கீழ் கொண்டுவரப்
பட்டது. காலத்திய  கல்வெட்டுகள் (A.R.E.No.50,51 of 1948-49
61,75,76,89, of 1936-37 ; 17,18,119,120,113,148, of 1938-39
63,66,67,of 1892;
364 of 1953-54;
157,158, 335 of 1951-52;) நான்காம்,ஐந்தாம்
திருச்சுற்றில் உள்ளன.
இவன் சைவ- வைணவ சமயப் பூசல்களைத் தீர்த்து வைத்ததாகவும் அறிய முடிகிறது.

• மூன்றாம் இராஜராஜன் (கி.பி.1216-1256) காலத்திய கல்வெட்டுகள்
(A.R.E.No.71,72 of 1936-37;
102,133,134,147 of 1938-39
156 of 1956-57;
30,52 of 1948-49; 156,157,158 of 1951-52;
363 of 1953-54; 30,35 of 1936 -37;) ஆகியன 3,4,5 திருச்சுற்றுகளில் உள்ளன.

   •  கி.பி.1223-1225 திருவரங்கம் கோவில் கங்கர்களால் கவர்ந்து
கொள்ளப்பட்டது. கோவில் நிர்வாகம் சீர் குன்றியது.

• மூன்றாம் ராஜேந்திரன் (கி.பி. 1246-1279) காலத்தைய (A.R.E.No.148 of 1938-39;
64,65 of 1892; 317 of 1952-53; 368 of 1953-1954; கல்வெட்டுகள்
 5,4,3 திருச்சுற்றுகளில் காணலாம்.
 இவனது ஆட்சிக்குப்பிறகு காலத்தில் சோழநாடு பாண்டியர்களுடைய நாடாக மாற்றம் அடைந்தது.

...தொடர்ச்சி அடுத்த பதிவு - Post ல பார்ப்போம்.

                  அன்புடன்

         ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்


Saturday, October 6, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 2)







||• ஏழாவது திருச்சுற்று•|| 







   இதற்கு 'பூலோகம்' என்று பெயர். இதற்கு ராஜவீதி, மாட மாளிகை வீதி, கலியுகராமன் திருச்சுற்று, சித்திரைத் திருவீதி எனவும் பெயர்கள் உண்டு. இது தற்போது கடைகள்,
வீடுகள், கட்டிடங்கள், அலுவலகங்கள் சூழ ஒரு சிறுநகரம் போல் தெரிகிறது. ஏழாம் சுற்றான தெற்குச் சித்திரை வீதி புறமுள்ள கட்டைக் கோபுரம்  வழியாக நுழைய  பூர்ணன்,புஷ்கரன்  என்னும் துவாரபாலகர்கள் இருவரை வணங்கி உள்ளே செல்வோம் .  கோபுரத்தின் எதிர்புறமுள்ள நான்கு கால் மண்டபத்தில் வலப்புறக்கம்பத்தின் கீழ்
பாதாள கிருஷ்ணன் சன்னிதி உள்ளது.


பாவனாச்சார்யர் திருமாளிகை, தாத்தாச்சாரியர் திருமாளிகை,  ஆஞ்சநேயர் திருக்கோவில்,
ஸ்ரீஹயக்ரீவர் தேசிகர் சந்நதி,ஆயனார் திருமாளிகை,
கபிஸ்தலம் ஸ்வாமி திருமாளிகை,பகுகுடும்பி ஸ்வாமி திருமாளிகை,
திருவரங்கத்தமுதனார் திருமாளிகை, சித்திரைத்தேர் முட்டி, பெரியநம்பிதிருமாளிகை,கூரத்தாழ்வான் திருமாளிகை,முதலியாண்டான் திருமாளிகை
வானமாமலை மடம் ஆகியனவற்றை நான்கு சித்திரை வீதிகளைச் சுற்றி வந்து காணலாம்.



                              ||' புராணமரபு '||

• புராணம் ஓர் விளக்கம்:-
             புராணம் என்னும் சொல் புராதனம் (பழைமை) என்னும் வடசொல்லின் அடியாக அமைந்ததாகும். புராணம் என்கிற வடசொல் புரா - நவ என்ற இரு வேர்களிலிருந்து பிறந்ததாகும். இச்சொல் பழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் உள்ளது என்று பொருள்படும் என்பர். பழைமை வாய்ந்த வரலாறுகளுள்     பெரும்பாலும்    இறைப்பக்தி,     இறையருள் தொடர்புடைய செய்திகளைக் கொண்டதே புராணம் என்பர். மிக நுட்பமான தத்துவங்களை அல்லது செய்திகளை எல்லோரும் அறிந்துகொண்டு பின்பற்றும் நிலையில் அமைவது புராணத்தின் சிறப்பாகும். இத்தகைய செய்திகளை விளக்கிக் கூறும்போது எளிய இனிய கதைகளையும், மனித வாழ்வியல் உண்மைகளையும் இணைத்து, சுவைவமிக்க நிலையில் கூறுவது புராணம் ஆகும்.
 புராணம் என்பதைப் பழங்கதை (Ancient tale or legend) என்று கூறுவதைக் காட்டிலும், வழிவழி வந்த மரபு வரலாறு (Traditional history)     என்று     கூறுவதே மிகவும் பொருத்தமுடையதாகும்.
புராணம் என்ற சொல் வடசொல் ஆயினும், அது தமிழில் மிகத் தொன்மையிலிருந்தே வழங்கப்பட்டு வந்ததை அறியலாம். அதற்குச் சான்றாக, ‘காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினன்’ என மணிமேகலை (27: 98-99) யில் சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வருவதைக் காணலாம்.
அதுமட்டுமன்றி,  திருவாசகத்தின் முதல் அகவல் சிவபுராணம் என்றே பெயர் பெற்றுள்ளதைக் கொள்ளலாம்.
'சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன்யான்'
என்று பாடுகின்றார் மாணிக்கவாசகர்.
புராணம் என்பது ‘பழமை சான்ற வரலாறு’ என்னும் பொருள் கொண்டு வழங்கப் பெற்றதைத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணலாம்.
   
 • புராண இலக்கணம்:-
         வடமொழியில் புராணங்கள் பழமை வாய்ந்த நூல்களாயினும், அவற்றை முறையான வடிவில் இயற்ற வேண்டும் என்ற இலக்கண வடிவும் இருந்திருக்கக் கூடும். அவ்வாறு புராணங்களுக்கு இலக்கணம் வகுத்த பிற்காலத்தவர் முக்கியமானதாக ஐந்து அடிப்படைகளைக் குறிப்பிடுவர். அவை :
   (1) உலகத் தோற்றம்    
   (2) உலகம் அழிந்து மறுபடி தோற்றம் பெறுதல்   
   (3) தெய்வ பரம்பரை    
   (4) மனுக்களின் காலம்    
   (5) அரச வமிசங்களின் வரலாறு
என்பனவாகும்.
     ஆனால், இன்றுள்ள புராணங்களில் பல தானம், விரதம், தீர்த்தம், மூர்த்தி, தலம், சிராத்தம் முதலியனவற்றையே சிறப்பித்துக் குறிப்பிடுகின்றன.
புராணங்கள்     தெய்வங்களின்     பராக்கிமத்தைக் கூறுகின்றனவாயும்,     உலகின் சிருட்டி, திதி, சங்காரம் என்பனவற்றையும்,   அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றையும்  கூறுகின்றனவாயுமிருக்கின்றன. ஆதலால், இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில், கதை தொடர்ச்சியாக இருப்பது போல் புராணங்களில் காண இயலாது.
 புராணங்கள் கதை கூறி நீதி புகட்ட வந்தனவேயாம். எனவே, கதையில் கருத்துச் செலுத்தாமல், வேதங்களில் உள்ள வேள்விகள், உயிர்களின் படைப்பு, உலக அமைப்பு, கிரகங்கள், சுவர்க்கம், நரகம், வழிபாடு, உடலமைப்பு, வைத்திய முறை, நாடிகள், யோக முறைகள், நோன்புகள், மந்திரம், துதி, சகுனம், இம்மைக்கும் மறுமைக்கும் உதவக் கூடிய பல வழிமுறைகள் ஆகிய எல்லாச் செய்திகளும் புராணங்களில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

• புராணம் - ஐந்தாவது வேதம்
       வடமொழியில் வேதம் மிகத் தொன்மையான இலக்கியப் படைப்பாகும். அவ்வேதத்திற்கு அடுத்தபடியாகப் புராணங்கள் ஐந்தாவது வேதமாகக் கொண்டாடப்படுகின்றன. இப்புராணங்கள் வேதங்களைப் போலவே மிகத் தொன்மையானவையாகும் என்பது ஆன்றோர் கருத்து.
மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்கள் போலவே, புராணங்களும் சமய இலக்கியங்களாகக் கருதப்பட்டு வந்துள்ளன.
 புராணங்கள்,    செவிவழி வாயிலாக வந்த புராதனச் செய்திகளையும், வரலாறுகளையும், கலைச் சிறப்புகளையும் மக்களிடையே சென்றடையச்செய்ய சிறந்த கருவூலமாக விளங்கின எனலாம்.
    ‘ஒரு நண்பன் புத்தி சொல்லி நல்லொழுக்க உணர்ச்சியை ஊட்டுவது போல், பழைய கதைகளைச் சொல்லி நீதியை உணர்த்துகின்றன புராண இதிகாசங்கள்’ என்பர். தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் ஒன்று புராணம் என்கிறது பிற்கால தமிழ் இலக்கணம்.

• தலபுராணம் - ஓர் அறிமுகம்
      ஹிந்து சமயக் கோவில்களின் பழம்பெருமையினையும் வரலாற்றுச் சிறப்பினையும் எடுத்து விளக்கும் நூல்களே தலபுராணங்களாகும்.
புராணம் என்பது 'பழைமையானது, புராதனமானது' எனப்படும். பழைமையான திருத்தலங்களின் பெருமையைப் பற்றிப் பிற்காலத்தவரும், நெடுந்தூரம் பயணம் செய்து வந்து தரிசிக்க முடியாதவரும் அறிந்து கொள்ளவும், அவ்வாலயத்தின் புகழைப் பாடவும் முயன்ற புலவர்கள், தேவாரங்கள் மூலம் பாடல்பெற்ற தலங்களின் பெருமையைப் பாட்டினால் தாமும் பாடியதால் தோன்றியவையே தலபுராணங்களாகும். இவை, அத்தலங்களிலே எழுந்தருளியிருக்கும் இறைவன், அருட்செயல்கள், துன்பங்களையும் நோய்களையும் நீக்கவல்ல தீர்த்தங்கள் என்பவற்றின் சிறப்புக்களை எடுத்துரைக்கின்றன.
இவை குறிப்பாக கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதிலேயே தோற்றம் பெற்றனவாகக் கொள்ளப்படுகின்றன. தல புராணங்களில் முதலாவதாகத் தோன்றியது பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவர் எழுதிய திருவிளையாடற்புராணம். ஆயினும் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் குறிப்பாக 14 முதல் 16 வரையான நூற்றாண்டுகளில் அந்நியரின் ஆதிக்கமும் சமூகக் குழகப்பங்களும் ஏற்பட தலபுராணங்களின் தோற்றமும் மங்கிப் போய்விட்டது. பின்னர் விஜயநகர நாயக்க மன்னர்களின் ஆட்சி தமிழகத்தில் நிலைபெற்றுவிட தலபுராணங்களும் மேலும் பெருக்கமாய்த் தோன்றத் தொடங்கின.
தல புராணங்களின் செய்திகள் மக்களுக்கு எழுச்சி தரும் இன்ப ஊற்றுக்களாகவும், அந்நியரது தாக்குதலினால் அல்லலடைந்து மனங்குன்றியிருந்த மக்களுக்கு புத்துயிர் தருவனவாகவும் அமைந்ததால், மக்கள் மத்தியில் பெருஞ்செல்வாக்கு மிக்கனவாகத் திகழ்ந்தன. இதனால், இவற்றைப் பாடிய புலவர்களை மக்கள் புகழத் தொடங்கினர். இதனால், வறுமையில் வாடிய புலவர்களும் திருக்கோவில்களைப் புகழ்ந்துபாடி உணவும், பெயரும் பெற்றனர். இந் நிலை 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் தொடர்ந்ததால் பல்வேறு தலபுராணங்கள் தோற்றம் பெற்றன.
பெரும்பாலான தலபுராணங்கள் இறைவனும் இறைவியும் எழுந்தருளி, தேவர்கள் - முனிவர்களுக்கு அருள்செய்த வகையை கூறுகின்றன. இதனால் இவை, தெய்வநம்பிக்கை, சமய நம்பிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கோயில் வழிபாடு, பூசை, விழாக்கள், விரதங்கள் என்பவற்றின் பயனையும், சரியை கிரியைத் தொண்டு என்பவற்றையும் தெளிவாக விளக்குகின்றன. இவை, மனிதர்களைப் பாடி பொருளை மாத்திரம் சேர்ப்பதைவிட, இறைவனைப் பாடி இம்மைக்கும் மறுமைக்குமாக அருளைப் பெறல் வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு வலியுறுத்துவன.
இந்திய அளவிலான புராணக் கதைகளில் இடம் பெறும் ஏதேனுமோர் கதையை, அது நிகழ்ந்தது இந்த ஊரில்தான் என எழுதுவர். எனவே இந்திய அளவிலான புராணக்கதையானது பல கோயில்களின் தலபுராணங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும்.
பாடல்பெற்ற தலங்கள்
அற்புதங்கள் நிகழ்த்திய தலங்கள்
முத்தித் தலங்கள்
தேவர் முனிவர் வழிபட்ட தலங்கள்
புராணக் கதைகளில் குறிப்பிடப்படும் தலங்கள்
சித்தர் வாழ்ந்த தலங்கள்
எனப் பலவகையான தலங்களையும் பற்றிப் பேசுவன.
• தமிழ்த் தலபுராணங்கள் நூற்றுக்கணக்கில் கிடைக்கின்றன. முதலில் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்த இவை செய்யுள் வடிவில் பெருகி, ஏட்டிலும் எழுதி வைக்கப் பெற்றன. பிற்காலத்தில் உரைநடை வளர்ச்சியின் காரணமாக வசன நடையிலும் இப்புராணங்கள் நூல்களாக மலர்ந்தன. இவ்வகையில் கி.பி. 12ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரையிலும் செய்யுள் நடையிலமைந்த சுமார் 400 தமிழ்த் தலபுராணங்கள் பற்றி நாம் அறிய முடிகின்றது.
இவற்றுள் சில:
கோயிற் புராணம், தணிகைப் புராணம், சேது புராணம், திருக்கோணாச்சலப் புராணம்,
திருவிளையாடற் புராணம்,திருச்செந்தூர்ப் புராணம், அருணாச்சலபுராணம், திருப்பரங்கிரிப் புராணம், சிதம்பர புராணம்
திருக்குடந்தைப் புராணம்
ஆகியனவாகும்.

• பழங்காலத்தில், மக்கள் தலங்களில் வரலாறுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டு, அத்தலங்களின் விருட்சம், மூர்த்திகளின் திருநாமம்,     தீர்த்த விசேடம் முதலியவற்றை அவ்வூரில் உள்ளோரிடம்     தெரிந்து கொண்டு பிறருக்குச் சொல்வார்கள். இவ்வகையில், பல தலங்களில் சிறப்பு அம்சங்கள் கொண்டது போல், தங்கள் ஊரிலும் அந்தத் தலங்களைப் போல் அமைத்து வழிபடுதல் பழங்காலத்து வழக்கம்.

• மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம்
    மூர்த்தி (இறைவன்), தலம் (ஊர்), தீர்த்தம் (புனித நீர்), விருட்சம் (கோயில் மரம்) ஆகிய நான்கும் தலபுராணங்களில் சிறப்பாகக் கூறப்படும் பொருள்களாகும்.

இதையே தாயுமானவர்,
"மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாயத் தொடங்கினர்க்கு ஓர்
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே"  
           (43, பராபரக் கண்ணி - 156) என்கிறார்.

    ஒவ்வொரு தலத்திலும் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகியவற்றை வழிபட்டதால் எய்திய பேறுகள், நீங்கிய பாவங்கள், நீங்கிய பிணிகள் முதலியனவற்றைச் சான்றுகள் மூலம் அறியலாம்.

• மூர்த்தி
    ஒரு தலத்தில் வீற்றிருக்கும்     இறைவன், இறைவி இவர்களையே மூர்த்தி என்பர்.
 தலங்களுக்கு     ஏற்ப மூர்த்தங்கள் (இறைவன், இறைவி) இருவரும் இணைந்தும் இருப்பர். சில இடங்களில் சற்றுத் தள்ளித் தனிச்சந்தியிலும் இருப்பர்.

• தலம்
    தலம் என்பதற்கு இடம், பூமி எனப் 'பிங்கல நிகண்டு 'பொருள் கூறுகிறது. இடம், பூமி, உலகம், தலைமை நகரம் எனப் பலப் பெயர் பெறினும், இறைவன் உறையும் ஊர்களையே புண்ணிய பூமி எனவும், தலம் எனவும் க்ஷேத்திரம் எனவும் கூறுவர்.
தலம் என்னும் இச்சொல் முதன்முதலில் மணிமேகலையில் காணலாம். ‘இத்தலம் நீங்கேன் இளங்கொடி யானும்’ (மணி, 21-169) என்பது கந்திற்பாவை வருவதுரைத்த காதையில் வரும் ஒரு தொடராகும். சிறப்புடைய ஊர்களுக்கு அங்குள்ள கோயில்களே பெருமை தருவனவாதலின் தலம் என்பது சிறப்பாகக் கோயிலையே குறிக்கும்.

• தீர்த்தம்
    தீர்த்தம் என்பது இறைவன் வீற்றிருக்கும் கோவிலிலோ அல்லது அடுத்தோ உள்ள நீர்நிலைகளைக் குறிப்பிடுவதாகும். பெரும்பாலான புகழ்பெற்ற கோவில்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற     முப்பெரும் பெருமைகளைக் கொண்டனவாகவே அமைந்துள்ளன எனலாம்.
இறைவனை வழிபட்டவர்கள் அங்கு உள்ள தீர்த்தங்களையும் வணங்கி     வழிபட்டனர். அவ்வத் தீர்த்தங்களில் மூழ்கி வழிபட்டோரை விட்டு நீங்கிய பாவங்களைத் தலபுராணங்கள் மூலம் அறியலாம். இந்நீர்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு பல விழாக்கள் நடைபெறுகின்றன.

• விருட்சம்
    விருட்சம் என்ற சொல் மரத்தைக் (கோயில் மரத்தை) குறிப்பதாகும்.     ஆகவே இதைத் தலவிருட்சம் என்றே குறிப்பிடுவார்கள்.     முதன்முதலில்     இம்மரத்தடியிலேயே இறையுருவத்தை     வழிபட்டிருப்பர். பின்னரே கோயில் எழுப்பப்பட்டிருக்கும். விருட்சங்களால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அம்மர நிழல்களில் அமர்ந்து அதன் பயனை நுகர்ந்ததனால் நீங்கிய பிணிகள், அதனால் பெறும் நன்மைகள் முதலானவற்றைத் தலபுராணங்களில் காணலாம்.
 இத்தகைய சிறப்புமிக்க தலங்களில், இன்னின்ன காலங்களில் இன்னின்ன முறைகளால் வழிபடுவோர்க்கு உடம்பு பற்றியும் உணர்வு பற்றியும் தீராமல் நிற்கும் பிணிகளும், மாசுகளும் நீங்கி இன்பமும் நலமும் பெற்று, இம்மையில் வளமான வாழ்வும் மறுமையில் சிறப்பான வீடுபேறும் கிடைக்கும். இதனைத் தெரிவிக்கவே தலபுராணங்கள் பலப்பல வரலாறுகளைக் கொண்டு இயற்றப்பட்டன.

• திருவரங்கம் பெரியகோயில்
ஸ்தல புராணம்

திருவரங்கம் பெரியகோயிலின் புராண மரபுகளான ஸ்ரீரங்க மாஹாத்ம்யத்தை கருடபுராணத்தில் உள்ள 'சதாத்யாயீ' (108 அத்யாயம்) மற்றும் ப்ரம்மாண்ட புராணத்தில் அமைந்துள்ள 'தசாத்யாயீ' (10 அத்யாயம்) ஆகிய இரு புராணங்கள் கொண்டு அறியமுடிகிறது.
• ஸ்ரீரங்க விமான ப்ரதஷிணம்
மேற்க்கண்ட தசாத்யாயீயில் 11வது அத்யாயமாக
ஸ்ரீரங்க விமான ப்ரதஷிணம் என்ற அத்யாயயமும் சேர்த்து பாப்பாக்குறிச்சி கிருஷ்ணய்யங்கார் 1908-ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.(பத்துஅத்தியாயம் போலே சிவன் நாரதருக்கு சொல்லுகிற க்ரமமாயிராமல், ப்ரம்மா ஸநத்குமாரருக்கு சொல்லுவதியிருப்பதால், இது 11ம் அத்யாயம் ஆகாது)
• ஸ்ரீரங்க ப்ரஹ்ம வித்யை
ப்ரம்மாண்ட புராணத்தில் நாரதரால் பிரகலாதனுக்கு உபதேசிக்கப்பட்டது. ஒரே அத்யாயம் கொண்டது இந்த ஸ்ரீரங்க ப்ரஹ்ம வித்யை ஆகும்.
• பாரமேஸ்வர ஸ்ரீரங்க மாஹாத்ம்யம்
ஸ்ரீரங்கம் கோயிலுக்காக ஏற்ப்பட்ட பௌஷ்கர ஸம்ஹிதையின் 10ம் அத்தியாயத்தில் 387 ஸ்லோகங்களில் ஸ்ரீரங்க மாஹாத்ம்யம் சொல்லப்படுகிறது.

• தலபுராணச்சுருக்கம்:-
    இங்கு பள்ளி கொண்டுள்ள பெருமாள் சத்தியலோகம் எனப்படும்
பிரம்மலோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்ட திருவாராதனப்
பெருமாள் ஆவார்.
இப்பூவுலகில் சூரிய குலத்தில் வந்த மனு குமாரரான இட்சுவாகு
என்னும் மன்னன் பிரம்மனைக் குறித்து கடுந்தவமியற்றினான். இவன் தவத்தை
மெச்சிய பிரம்மன் இவனுக்கெதிரில் தோன்றி வேண்டிய வரம் கேள் என்றான்.
அதற்கு இட்சுவாகு, பிரம்மனே, உம்மால் தினந்தோறும் பூஜிக்கப்படும்
திருமாலின் திருவாராதன விக்ரகமே எனக்கு வேண்டுமென்று கேட்க
பிரம்மனும் மறுப்பின்றி வழங்கினான். அப்பெருமானை அயோத்திக்கு
கொணர்ந்த இட்சுவாகு பூஜைகள் நடத்தி வந்தான். திருப்பாற்கடலில்
பள்ளிகொண்ட வண்ணத்தில் உள்ள இப்பெருமானே இட்சுவாகு மன்னன்
முதல் இராம பிரான் வரையில் உள்ள சூரிய குலமன்னரெல்லாம் வழிபட்டு
வந்த குலதெய்வமாயினான்.



இட்சுவாகு மன்னனால் விண்ணுலகில் இருந்து இங்கு கொண்டுவரப்
பட்டு அவன் குலத்தோர்களால் பூஜிக்கப்பட்டு பின்பு எல்லோருக்கும்
உரியவனான். இப்பெருமாள் இட்சுவாகுவால் கொணரப்பட்டதால் இப்பெருமாள்
இட்சுவாகு குலதனம் என்றே அழைக்கப்பட்டார்.
திரேதா யுகத்தில் இராமாவதாரம் மேற்கொண்ட திருமால்
இராவணனையழித்து, அயோத்தியில் பட்டம் சூட்டிக் கொண்டார்.
இலங்கையிலிருந்து தன்னுடன் போந்த வீடணனுக்கு விடைகொடுத்து
அனுப்பும்போது, தன் முன்னோர்களால் பிரம்மனிடமிருந்து கொணரப்பட்ட
இந்த திருவாராதனப் பெருமாளை வீடணனுக்கு (விபீஷணனுக்கு) சீதனமாக
கொடுத்தார். வீடணன் இப்பெருமாளைப் பெற்றுத் திரும்பியதை  வால்மீகி
தமது இராமாயணத்தில்

    " விபிஷனோபி தர்மாத்மா ஸஹ தைர் நைர்ருதைர்ஷபை
     லப்தவா குலதனம் ராஜா லங்காம் ப்ராயாந்த மஹாயா"
     என்று கூறுகிறார்.

     (• வால்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 128 வது ஸர்க்கம்,
     87 வது சுலோகம்.)

     மிக்க பயபக்தியுடன் ப்ரணா வாக்ருதி என்ற விமானத்துடன்
அப்பெருமானை எழுந்தருளச் செய்து இலங்கைக்கு வீடணன்
கொண்டுவருங்காலை, வண்டினம் முரல, குயில் கூவ, மயிலினம் ஆட,
செழுநீர் சூழ தன் சிந்தைக்கு இனிய அரங்கமாகத் தோன்றின, இந்த காவிரி,
கொள்ளிட நதிகட்கிடையில் பள்ளி கொள்ள விரும்பிய திருமால் வீடணனுக்கு
சற்றுக் களைப்பையும் அசதியையும் உண்டு பண்ண வீடணன் இப்பெருமாளை
இவ்விருநதிக்கிடைப்பட்ட இவ்விடத்தில் சற்றே கிடாத்தினான்.
அம்மட்டே தன் உள்ளங்கவர்ந்த இடமாதலால் அசைக்க இயலா
அளவிற்கு வீடணன் செல்ல வேண்டிய தென்றிசை நோக்கி இன்றுள்ள
வடிவில் பள்ளி கொண்டார். வீடணனோ விழுந்து, , அழுது,தொழுதான்.
 இப்பகுதியை ஆண்டுவந்த
சோழமன்னன் தர்ம வர்மன், என்பவன் இந்நிகழ்ச்சியை அறிந்து ஓடிவந்து
பெருமாளையும் தொழுதுவிட்டு வீடணனுக்கு ஆறுதல் கூறினான்.
பித்துப் பிடித்த நிலையில் சில நாட்கள் இங்கு தங்கியிருந்த
வீடணணின் கனவில் வந்த எம்பெருமான் தான் இவ்விடத்தே பள்ளிகொள்ளத்
திருவுள்ளம் பற்றியதை தெரிவித்து, நீ செல்லக்கூடிய பாதையை நோக்கியே
நான் பள்ளி கொண்டுள்ளேன். கவலை வேண்டாம் என்று கூறி,
ஆண்டுக்கொருமுறை வந்து தன்னை வழிபட்டுச் செல்லுமாறும் அருளினார்.
 பின்னர் தர்மவர்மன் அவ்விமானத்தைச் சுற்றி சிறிய கோவில் எழுப்பி
வழிபாடு செய்ய வழிவகை செய்தான்.

• சத்ய லோகத்தில் இருந்த பிரம்மாவால் ஆராதிக்கப்பட்ட ஸ்ரீலக்ஷ்மிநாராயணன், சூர்ய குல அரசர்கள் வழிபட்டு, பின்னர் சூர்யவம்சத்தவரான ஸ்ரீராமபிரான் மூலமாக இராவணன் தம்பி விபீஷணனுக்கு ஸ்ரீதனமாக கிடைக்கிறது.  அவரால் 'சேஷபீடம்' 'அனந்தபீடம்' என்று முதலில் அழைக்கப்பட்ட
திருவரங்கம் சேர்ந்த பிறகு 'திருவரங்க நாதன்' என அழைக்கப்படலானார்.
• தர்மவர்மா காலத்திற்குப் பிறகு அநேக ஆண்டுகள் காலவசத்தால் தற்போது உள்ள இடம் மணற்காடாகக் காட்சியளித்தது. தர்மவர்மா பரம்பரையில் வந்த சோழ மன்னன் வேட்டையாடி களைப்படைந்து ஒரு மர நிழலில் தங்கியிருக்கையில் மரத்தின் மேலே அமர்ந்திருந்த கிளி,

|"காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ்வாஸீதேவோ ரங்கேச வேதச்ருங்கம் பரமம் பதம்
விமாநம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக"|

என்ற வசனம் சொல்லக் கேட்டு வியப்படைந்து பார்க்கையில் அந்தக் கிளி அதே ஸ்லோகத்தைப் பல தடவை சொல்லக் கேட்டான். பகவானே அவன் கனவில் வந்து ""யாம் இம்மரத்தின் கீழ்தான் இருக்கிறோம்'' என்று சொல்லவும் அரசன் மணற்மேட்டைத் திருத்தி, ஸ்ரீரங்க விமானத்தை வெளிப்படுத்தினான் என்பது வரலாறு. ஆகவே கிளிச்சோழன் எனப் பெயர் பெற்ற அவ்வரசன் கிளி மண்டபம் உட்பட பல திருப்பணிகளைச் செய்தான். இங்கு பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாள் வேதஸ்வரூபன் என்னும் விமானத்தை ப்ரணவாகார விமானம் என்றும், கலசங்களை வேதச்ருங்கக்ளெனவும் அழைப்பர். காவிரியும் கொள்ளிடமும் ரங்கநாதனுக்கு மாலை போல் அமைந்துளளன. காயத்ரி மண்டபத்தில் காணப்படும் 24 தூண்கள் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களைக் குறிப்பிடுகின்றன.
வைணவ திவ்ய தேசங்கள் 108 ல் முதன்மையானது திருவரங்கம் பெரியகோயில்.  இந்த திருவரங்கனை வழிபட்டால் மற்றைய திவ்யதேங்களின் மூர்த்திகளை வழிபட்டதற்க ஒப்பாகும் என்றும், ஒவ்வொரு இரவிலும் மற்றைய திவ்யதேச மூர்த்திகள் இங்கு வந்து ஒன்றாக இருந்து பின்பு தமது திவ்யதேசத்திற்குப் புறப்பட்டுச் செல்வதாக ஓர் ஐதீகம் உண்டு.
 • இதன் பெருமையையும் மகத்துவத்தையும் ஸ்வாமி தேசிகன் தன் அதிகார ஸ்ங்கரஹத்தில் கூறுகிறார்.
பரமசிவன் நாரதருக்கு ஸ்ரீரங்க மஹாத்மியத்தைப் பற்றிச் சொல்லும்போது காவிரி நடுவே சந்த்ரபுஷ்கரணி கரையிலுள்ள ஸ்ரீரங்கம் செல்பவர்களுக்கு நரகமோ, ஞானக் குறைவோ கிட்டாது என்று சொல்கிறார். அந்த இடம்தான் ஸ்ரீரங்கம் என வழங்கப்படுகிறது.

திருவரங்கம் பெரியகோயில்  மூர்த்தி தீர்த்தம் தலம்  சிறப்பு:-
• மூலவர்(மூர்த்தி)
 ஸ்ரீரெங்கநாதன், பெரிய பெருமாள்
(ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டு தெற்கே திருமுகம் காட்டிய
புஜங்க சயனம் )

• உற்சவர்
 நம் பெருமாள்
அழகிய மணவாளன் என்னும் திருப்பெயரும்
உண்டு

• தாயார்
ஸ்ரீரங்க நாச்சியார்

• தீர்த்தம்
 (இங்கு மொத்தம் 9 தீர்த்தங்கள் உள்ளன)
     • நவ தீர்த்தம்
1.சந்திர புஷ்கரணி
2.வில்வ தீர்த்தம்
3.சம்பு தீர்த்தம்
4.பகுள தீர்த்தம்
5.பலாச தீர்த்தம்
6.அசுவ தீர்த்தம்
7.ஆம்ர தீர்த்தம்
8.கதம்ப தீர்த்தம்
9.புன்னாக தீர்த்தம்

• தலவிருட்சம்
  புன்னை
• விமானம்
    ப்ரணா வாக்ருதி விமானம்
• காட்சி கண்டவர்கள் (பிரத்யட்சம்)
 வீடணன், தர்மவர்மன், கிள்ளிவளவன், சந்திரன். ஆழ்வார்,ஆச்சார்யர்கள்


• புராணமரபு இத்தோடு பூர்த்தியடைந்தது. இனி அரசியல் வரலாற்று மரபுக்குள் தொடர்வோம்.

• அதற்கு உத்தரவீதிகள் உள்ள   'புவர்லோகம்' என்று அழைக்கப்படும் 6ம் திருச்சுற்று திருவிக்கிரமன்
திருவீதிக்குள் நுழைவோம்.

                  அன்புடன்

        ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
 E.P.I. இராமசுப்பிரமணியன்