Monday, October 15, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 6)





• அரசியல் வரலாற்று மரபு


திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 5)
 தொடர்ச்சி .....

 மதுரையை ஆண்ட பாண்டிய வம்சத்தின் கடைசி மன்னரரான
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
 கி.பி. 1308ஆம் ஆண்டு தன் இறப்பு வரை ஆட்சியைத் தொடர்ந்தார். இவருடைய இறப்புக்குப் பின் அவருடைய இரு மகன்களுக்கு இடையில் மூண்ட வாரிசுரிமைச் சண்டையால் ஏற்பட்ட குழப்பத்தால் "மதுரை அரசு" (பாண்டிய பேரரசின் தமிழ் மாகாண பேரரசு) தில்லி சுல்தானின் கைக்கு மாறியது. 1327ஆம் ஆண்டு ' மதுரை' தில்லி சுல்தானத்தில் 23ஆவது மாநிலமாக மதுரை அறிவிக்கப்பட்டது. ஜலாவுதீன் ஹசன் ஷா மதுரையின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
இதன் பிறகு முகமது பின் துக்ளக் 1325இல் தில்லியின் சுல்தானானார். ஆனால் பாரசீகப் படையெடுப்பால் மிக மோசமான பொருளாதார நிலைக்கு துக்ளக்கின் ஆட்சி சென்றது. மாநிலங்கள் பிரிந்து செல்லத் தொடங்கின. மதுரையும் தனி நாடாகியது. அதற்கான அறிவிப்பை ஜலாவுதீன் ஹசன் ஷா 1333ஆம் ஆண்டு வெளியிட்டான். இதிலிருந்துதான் 'மதுரை சுல்தானகத்தின் ஆட்சி' தொடங்குகிறது.
ஜலாவுதீன் ஹசன் ஷா மதுரையின் வலிமை மிக்க சுல்தானாக இருந்தான். அவர் காலத்தில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் கணக்கில் அடங்காதவை. இவன் 1340ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். இறுதியாக சிக்கந்தர் ஷாவின் காலத்துடன் மதுரை சுல்தான்களின் ஆட்சி
கி.பி. 1371 விஜயநகர குமார கம்பண்ணனால் முடிவுக்கு வந்தது.

விஜயநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு தோன்றிய விஜயநகரப் பேரரசு முஸ்லீம்களை புறமுதுகிட்டு ஓடச் செய்து இத்திருக்கோவிலை மீட்டு திருவேங்கடமலையிலிருந்து உற்சவப் பெருமாளையும், பிறபொருட்களையும் மீளக் கொணர்ந்து சற்றேறக் குறைய இன்றுள்ள
அளவிற்கு திருவரங்கம் சீர்படுத்தப்பட்டு பொலிவு பெற்றது. அன்று முதல்
விடுபட்டுப் போயிருந்த விழாக்களும். நிகழ்ச்சிகளும் தொடரத் தொடங்கின.
சில வைணவச் சொற்றொடர்களும் 15ஆம் நூற்றாண்டில் கொடுக்கப்பட்ட
பெயர்களுடனே இன்றும் நின்று நிலவுகிறது.
கி.பி.1565இல் தலைக்கோட்டை
யுத்தத்தில் விஜயநகர பேரரசு வீழ்ச்சி அடையும்வரை இத்திருக்கோவிலை
அவர்கள் கண் போல காத்து வந்தனர்.

இக் காலத்தில் பல புதிய கோயில்கள் கட்டப்பட்டன, அத்துடன், தென்னிந்தியா முழுவதும் ஏற்கனவே இருந்த பல ஆயிரக்கணக்கான கோயில்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டதுடன், திருத்த வேலைகளும் செய்யப்பட்டன. தென்னிந்தியாவில் உள்ள
விஜயநகரக் கோயில்கள் பெரும்பாலும் உறுதியான சுற்று மதில்களால் சூழப்பட்டவை. சிறிய கோயில்கள் ஒரு கருவறையையும் அதன் முன் அர்த்த மண்டபம் எனப்படும் சிறிய மண்டபம் ஒன்றையும் மட்டும் கொண்டவை. நடுத்தர அளவிலான கோயில்களில், கருவறையயும், அர்த்த மண்டபத்தையும் இணைக்கும் சிறிய இடைநாழி எனும் ஒரு சிறிய இடம் அமைந்திருக்கும். அத்துடன் அர்த்த மண்டபத்துக்கு அப்பால் முக மண்டபம் என்னும் இன்னொரு மண்டபமும் இருக்கும். பெரிய கோயில்களில் சுற்று மதில்களில் வாயில்கள் இருக்கும் இடங்களில் பெரிய கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விஜயநகரப் பேரரசர்களான ராயர்களின் பெயரைத் தழுவி இக் கோபுரங்கள் 'ராய கோபுரங்கள்' என அழைக்கப்பட்டன. இவை, மரம், செங்கல், சாந்து ஆகியவற்றைக் கொண்டு, பெரும்பாலும் சோழர் பாணியில் அமைக்கப்பட்டன. கோபுரங்களில், மக்கள், கடவுளர் ஆகியோரின் பெரிய அளவுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
தமிழர் கட்டிடக்கலைச் செல்வாக்கினால் உருவான இவ்வழக்கம், பேரரசன் கிருஷ்ணதேவ ராயரின் காலத்தில் பிரபலமாகிப் பின்வந்த 200 ஆண்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வந்தது.  இவை தவிர, மதில்களுக்குள் கருவறையைச் சுற்றிய கூரையிடப்பட்ட திருச்சுற்று, மகாமண்டபம் எனப்படும் பல தூண்களோடு கூடிய பெரிய மண்டபங்களாக 1000கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், கல்யாண மண்டபம், திருக்குளம் என்பனவும் இக் காலக் கோயில்களின் கூறுகள் ஆயின. இக் காலத் தூண்களின் ஒரு புறத்தில், அவற்றோடு ஒட்டியபடி நிமிர்ந்த நிலையில் யாளிகள், முதுகில் வீரர்கள் இருக்க, இரண்டு கால்களில் பாய்ந்தபடி நிமிர்ந்து நிற்கும் குதிரைகள் ஆகியவற்றின் சிற்பங்கள் காணப்படுகின்றன. தூணின் மறு பக்கங்களில் இந்துப் பழங்கதைகளை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். யாளிகள், குதிரைகள் போன்றவை இல்லாத தூண்கள் சதுர வடிவாக அமைந்து அவற்றில் பழங்கதைகளை அடிப்படையாகக் கொண்ட சிற்பங் களஞ்சியங்கள் காணப்படும்.



||: விஜயநகரப் பேரரசு :||

 தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசாக விஜயநகரப் பேரரசு
இருந்தது. தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவே சிருங்கேரி மடாதிபதி "வித்யாரண்யர்" வழிகாட்டுதலின் படி, விஜயநகரப் பேரரசு கி.பி.1336 ஆம் ஆண்டில்
சங்கம மரபைச் சேர்ந்த முதலாம் 'ஹரிஹரர்' மற்றும் 'முதலாம் புக்கராயர்' ஆகியோரால் நிறுவப்பட்டது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந்திய வரலாற்றில் 'விஜயநகர பேரரசு ஒரு முக்கிய இடம்' கொண்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. விஜயநகர பேரரசு உண்மையில் பார்த்தால் ஒரே மன்னர் வம்சம் கிடையாது, அது 1336 - 1485 வரை சங்கம வம்சம், 1485-1491 வரை சாலுவ வம்சம், 1491-1542 வரை துளுவ வம்சம் மற்றும் 1542 - 1646 வரை ஆரவிடு வம்சம் என 4 வம்சங்களால், சுமார் 310 வருடங்கள் விஜயநகரத்தை தலைநகரமாக கொண்டு ஆளப்பட்டது.  இப்பேரரசின் அழிபாடுகள் இன்றைய கர்நாடகத்தில் உள்ள 'ஹம்பி'யைச் சுற்றிலும் காணப்படுகின்றன.
 கிருஷ்ண தேவராயரின் ஆமுக்த மால்யதா, கங்காதேவி எழுதிய மதுராவிஜயம், அல்லசானி பெத்தண்ணாவின் மனுசரிதம் போன்ற பல  விஜயநகர சமகால இலக்கிய  நூல்களில் இருந்து விஜயநகர பேரரசின் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.
விஜய நகரப் பேரரசுக்கு பல்வேறு அயல்நாட்டு பயணிகள் வருகைபுரிந்தனர். அவர்களது குறிப்புகளும் பயனுள்ள சான்றுகளாகும். மொரோக்கா நாட்டைச் சேர்ந்த இபின் பதூதா, வெனிஷியப் பயணி நிக்கோலோ டி கோன்டி, பாரசீகப்பயணி அப்துல் ரசாக், போர்ச்சுகீசியப் பயணி டோமிங்கோ பயஸ் போன்ற பயணிகள் விஜய நகர கால சமூக பொருளாதார நிலைமைகள் பற்றி தங்களது பயணக் குறிப்புகளில் விவரித்துள்ளனர்.
இரண்டாம் தேவராயரின் ஸ்ரீரங்கம் செப்பேடுகள் போன்ற செப்பேடுகள் விஜயநகர அரச வழித்தோன்றல்கள் மற்றும் அவர்களது சாதனைகளைக் கூறுகின்றன. ஹம்பி இடிபாடுகளும் பிற சின்னங்களும் விஜய நகர ஆட்சியாளர்களின் பண்பாட்டுப் பங்களிப்பை வெளிப்படுத்துகின்றன. அவர்கள் வெளியிட்டுள்ள எண்ணற்ற நாணயங்களில் காணப்படும் உருவங்கள் மற்றும் சொற்றொடர்கள் விருதுகளையும் சாதனைகளையும் எடுத்துக்கூறுகின்றன.

• விஜயநகர கம்பண உடையார், இஸ்லாம் மத ஆதிக்கத்தை ஒழிக்கக் கருதித் தெற்கே படையெடுத்துச் சென்றார். தமிழகத்துத் தொண்டை நாட்டில் இருந்த படைவீடு ராஜ்ஜியத்தை வென்று, பின்பு மதுரையில் முகமது பின் துக்ளக்கின் காலத்தில் ஏற்பட்டு நடந்து வந்த சுல்தான் ஆட்சியை ஒழித்து, அங்கே விஜயநகர நேரடி ஆட்சிக்கு வழிகோலி வைத்தார்.



• ஸ்ரீரங்க அழகியமணவாளன்
 திருவேங்கடமலையில் ரங்கமண்டபத்தில்  இருந்தபோது செஞ்சியை ஆண்டு கொண்டு இருந்த கோபண்ண உடையார் திருமலைக்கு வருகை தந்து அழகியமணவாளனனை
 தரிசித்து விட்டு  திருவரங்கத்தில் திரும்பவும் அவரை எழுந்தருளப்பண்ணச் சித்தம் கொண்டு அவரது பெரு முயற்சியால் அழகியமணவாளனையும் உபய நாச்சிமார்களையும் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பித்தான்  என்பதை கடந்த பதிவிலேயே அறிந்தோம்.
அப்போது (கி.பி. 1371 பரீதாபி ஆண்டு வைகாசி 17ஆம் நாள்) தற்போதைய பவித்ரோத்ஸவ மண்டபத்தில்தான் அழகியமணவாளன் எழுந்தருளியிருந்தார். திருவரங்க மாளிகையாரும் அப்போது எழுந்தருளியிருந்ததால், யார் உண்மையான 'அழகியமணவாளன்' என்பதைத் தெள்ளத் தெளிவாக அங்கு கூடியிருந்தோரால் அறுதியிட இயலவில்லை. கி.பி.1323ஆம் ஆண்டு நடந்த படையெடுப்பின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதால் 1371ஆம் ஆண்டில் 48 வருடத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறுவார் யாருமில்லை. அப்போது வயது முதிர்ந்த கண்பார்வையற்ற ஈரங்கொல்லி ஒருவன் (வண்ணான்) அழகிய மணவாளனின் திருமஞ்சனம் செய்த பிறகு அழகியமணவாளன் உடுத்தியிருந்த கைலியைப் பிழிந்து பிரஸாதமாகக் கொடுக்கப்படும் புனிதநீரை
(ஈரவாடை தீர்த்தம்) சுவைத்து முன்பு எழுந்தருளியிருந்த அழகிய மணவாளனே “நம்பெருமாள்” ஆவார் என்று உறுதி செய்தார்.
அவன் இட்ட "நம்பெருமாள்" என்ற
பெயரே இன்றுவரை வழங்குகிறது என்கிற இந்த செய்தியையும் கடந்த பதிவில் கண்டோம்.
• நம்பெருமாள் (கி.பி.1371ல்) ஆஸ்தானம் எழுந்தருளிய போது மூலஸ்தானம் முழுதுமாக பாழ்பட்டு கிடந்தது.  வெயிலிலும் மழையிலும் மூலவர் ரங்கநாதர் காய்ந்தும் நினைந்தும் கிடந்திருக்கின்றார்.  ஆதிசேஷனின்
சேஷபடம் அவரது திருமுகத்தினை மட்டும் பாதுகாத்தபடியிருந்திருக்கின்றது.
 சுந்தரபாண்டியனால் வேயப்பட்ட தங்கவிமானம், தங்கத்தினால் ஆனக் கொடிக்கம்பம், தங்கத்தினால்
செய்த சேரகுலவல்லி, அணிகலன்கள், சிம்மாசனங்கள் அனைத்தும் சுத்தமாக கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இந்த சமயத்தில் உத்தமநம்பி வம்சத்தரான 'கிருஷ்ணராய உத்தமநம்பி' செய்த கைங்கர்யங்கள் முக்யத்துவமானது. மகத்தானது.  இவர் வீரகம்பண்ண உடையாரையும், அவரது உறவினரான விருப்பண உடையாரையும் விஜயநகரம் சென்று ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வந்துள்ளார். கம்பண்ணரும், விருப்பண்ண உடையாரும் திருவிடையாட்டமாக பல கிராமங்களை கோவிலுக்கென்று அர்ப்பணித்து திருப்பணி வேலைகளை மேற்கொள்கின்றனர்.
 கோவிலின் ஸ்தலத்தார்களும், உத்தமநம்பிகளும், கோவிலார்களும் வெகுவாக அரசர்களுடன் சேர்ந்து பாடுபட்டு ஸ்ரீரங்கத்தினை புனர்நிர்மாணம் செய்கின்றனர்.
 சித்திரையில் விருப்பண உடையார், கோவிலின் நிதிநிலைமையை சீர்செய்யும் பொருட்டும், கோவிலில் ஆராதனைகள் சீராக நடைபெறுவதற்கு தானியங்களை பெருக்குவதற்கும் அருகிலுள்ள அனைத்து கிராம மக்களையும் அரவணைத்து அன்போடு அழைத்து, அரங்கனுக்கு ஒரு தேரோட்டத்துடன் 'பிரம்மோற்சவம்' ஒன்றை கொண்டாடுகின்றார்.
 கிராமத்து மக்கள் அனைவரும் தாங்கள் விளைநிலங்களில் விளைந்த தானியங்களை அரங்கனுக்குக் காணிக்கையாக்கி உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
 அரங்கனது நித்யபடி பூஜைகளுக்குக் குறைவின்றி தானியங்கள் குவிந்தன.  அன்று தொடங்கிய இவ்விழா இன்றும் அன்று போன்றே குறைவற நடந்து வருகின்றது.  இந்த விழாவிற்கு ‘விருப்பண் திருநாள்” என்று பெயர்.
(விஜயநகர பேரரசின் சங்கமகுல மன்னன் இரண்டாம் ஹரிஹரன், அவருடைய புதல்வரான  விருப்பண்ண உடையார் பெயரில் கி.பி.1383ல் ஏற்படுத்தப்பட்டத் திருவிழா சித்திரை பிரம்மோத்ஸ்வம் ஆகும்.)


கோயிலொழுகு நூலில் கோபண்ணவுடையார்,குண்டு சாளுவயர், மற்றும் விருப்பண்ணஉடையார்
கைங்கர்யம்  பற்றி குறிக்கிறது.
இதில் கோபண்ணவுடையாருடன் வந்த 'குண்டு சாளுவயர்' அணியரங்கன் திருமுற்றத்திலே பாண்டியன் கைங்கர்யமான பொன்னாலான 'திருக்கொடித்தட்டு' (த்வஜஸ்தம்பம்-கொடிமரம்) துலுக்கனழித்ததால் வெண்கல வார்ப்பாகத் திருக்கொடித்தட்டு பண்ணி நாட்டுவித்தார். (தற்போது அந்த வெண்கல கொடிமரத்திற்கு பொற்கவசம் பூட்டியுள்ளனர்). அதன் அருகே கிழக்கே பெரிய கிருஷ்ணராய உத்தமநம்பி, ஹரிஹரராயரின் குமாரர் உத்தரவுப்படி துலாபுருஷ மண்டமும் கட்டி வைத்தனர். அந்த ராயர் குமாரர் விருப்பண்ண உடையாரும் வந்து, "துலாபுருஷங்கட்டி தாரைவார்க்கையில், பொன்னும், குட்டிக்கோயில் விமானமும் பொன் மேய்ந்து, இந்த ராயர் காணிக்கை இரண்டு பொற்குடம் உள்பட ஒன்பது பொற்குடமும் வைப்பித்து, பெருமாள் பஹுநாளைக்காக எழுந்தருளினபடியாலே நாநாதேசத்திலும் வந்த, பரிஜனங்களுக்கு ஸேவிக்கும்படி, விருப்பண்ண உடையார் பேரிலே சித்திரைத்திருநாள் த்வாஜாரோஹணத் திருநாள் நடத்துகையில்...." என்று விருப்பண்ண உடையார் கைங்கர்யம் பற்றி கோயிலொழுகு விவரிக்கிறது.

வீரகம்பண்ண உடையார் காலத்துக் கல்வெட்டுகள்
ராஜமகேந்திரன் திருச்சுற்றுகளில்
[( கி.பி.1371  பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாள் கல்வெட்டு:
A.R.E.No. 55 of 1892)
மற்றும்( A.R.E.No. 47,48 of 1938-39), ( A.R.E.No. 35 of 1948-49)] உள்ளன.
• மேலும் விருப்பண்ண உடையாரின் தாதியான 'கன்னாத்தை' என்பாள் திருவரங்கநாதனுக்கு பாலமுது மற்றும் நெய்யமுது படைப்பபதற்கு ரக்தாக்ஷி மற்றும் அக்ஷய ஆண்டுகளில்  முறையே 15 கன்றுகளுடன் கூடிய பசுக்களை தானமாக அளித்தமை பற்றிய கல்வெட்டு ( A.R.E.No. 341 of 1952-53)
ஒன்று ஆர்யபடாள் நுழைவு வாயில் இடது உள்பக்க சுவரில் உள்ளது. மேலும் அதே கைங்கர்யமாக விருப்பண்ண உடையாரின் 'பிரதானி தேவராஜர்' செய்தது பற்றிய கல்வெட்டு    (A.R.E.No.77,78 of 1938-39) சந்தன மண்டபம் தென்பக்க சுவரில் உள்ளது.
• சங்கமகுல விஜயநகர அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு
திருச்சி பகுதியை "கோனேரிராயன்" என்போன் மகாமண்டலேஸ்வரனாக ஆண்டு வந்தான்.
கி.பி.1486  ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சாளுவநரசிம்மன் என்போன் விஜயநகர் ராஜவானான்.  இவனின் மூத்த சகோதரர்  “ராமராஜராயன்” என்போன் சன்யாசி கோலம் கொண்டு  "கந்தாடை ராமானுஜ முனி” பெயருடன் ஸ்ரீரங்கத்தில் (தனது தம்பியின் விஜயநகர அரச அனுமதியுடன் ) பல கையங்கரியங்கள் செய்தது வந்தார்.
இவர்தான் வைணவ கோவில்களில் பிராமணர் பிடியில் இருந்து விடுவித்து சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் ஏற்றமும் மரியாதையும் பெற்றுத் தந்தவர்.
மேலும் எண்ணற்ற  திருப்பணிகளும் செய்தனர்.
இவர் வாழ்ந்த வீடு இன்றும் 'ஸ்ரீரங்கம் தெற்கு உத்திரவீதி'யில் உள்ளது.


சைவ சமயத்தின் மீது பற்றுக்கொண்ட, சோழமண்டல அரசனான கோனேரிராஜா திருச்சிராப்பள்ளியிலேபாளையம் பண்ணிக் கொண்டிருக்கையில்,திருவரங்கம் கோயில் சொத்துகளை பறித்து, திருவானைக்காவல் கோவிலுக்கு கொடுக்க உத்தரவிட்டார். திருவரங்கம் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தனக்கு வேண்டியவர்களான கோட்டை சாமந்தனார், மற்றும் சென்றப்ப நாயக்கர் ஆகியோருக்கு குத்தகைக்கு விட்டார். 'புரவரி' 'காணிக்கைவரி' 'பட்டுவரி' 'பரிவட்ட வரி' போன்ற வரிகளை விதித்து திருவரங்கம் கோயில் ஸ்ரீ பண்டாரத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த உயர்ந்த திருவாபரணங்களையும், பொற்காசுகளையும் கவர்ந்து சென்றான். இவ்வாறான கொடுமைகளை பொறுக்க ஒண்ணாத நிலையில்
இதை எதிர்த்து, கி.பி., 1489ல், இரண்டு ஜீயர்கள் மற்றும் 'அழகியமணவாள தாஸர்' எனப்படும் ஒரு ஏகாங்கியும் என, மூன்று பேர், வெள்ளை கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து தங்களது உயிரை மாய்ந்துக் கொண்டனர்.
• இந்த விசயத்தை கந்தாடை ராமாநுச முனி
தனது சகோதரன் சாளுவநரசிம்மனின் தளபதி நரசநாயக்கனுக்கு (அப்போது அவன்தான் அரசாண்டு வந்தான் சாளுவநரசிம்மன்(கி.பி. 1491) இறந்து போய் இருந்தான் அவன் மகன்கள் சிறுவர்கள் )   கடிதம் எழுதினார்.
• கந்தாடை ராமாநுச முனியின் (ராமராஜராயர்) கடிதத்தின் மூலமாக
தகவலறிந்த, விஜயநகர சாளுவ அரசனின் தளபதியான நரசநாயக்கன், (கி.பி. 1495 நளவருஷம், ஐப்பசி மாதம் 14ம் நாள்) கோனேரிராயனை போரிட்டு வென்று, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் சொத்துகளை மீட்டுக் கொடுத்தார் என, கோயிலொழுகு கூறுகிறது. கோனேரிராயனை போரில் வென்று  கொன்று தனது ஆளுமையை கந்தாடை ராமாநுச முனி திருவரங்கம் கோயிலில் நிலை நாட்டினார்.
( உயிரிழந்த மூவருக்கும், வெள்ளை கோபுரத்தில் சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளன.)

• திருவரங்கம் பெரியகோயிலின் கிழக்கு வெள்ளை கோபுர உட்புறம் வடபுற நிலைக்காலில்,
நெற்றியில் திருமண்காப்பு தரித்து, கையில் தூக்கிய அரிவாள் ஒன்றினைத் தோளில்சுமந்த வண்ணம், இடுப்பில் ஆடை தரித்துக் கழுத்தில் மாலையும் சூடி அரங்கனை வணங்கும் கோலத்தில் ஓர் அடியவரின் சிலை உள்ளது. அந்த சிலைக்கு மேல் உள்ள கல்வெட்டும்
(A.R.E.No. 87 of 1936-37)
உள்ளது.




ஸ்வஸ்திஸ்ரீ சௌமிய வருஷம் தைமாதம் இருபதாம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு படித்தனம் ஒன்றும் நடத்தாமல் மிகவும் அன்னியாயம் பண்ணுகையில் பொறுக்க மாட்டாதேயிந்த திருகோபுரத்திலேறி விழுந்து இறந்த காலமெடுத்த அழகியமணவாளதாசன் ஸ்ரீகாரியம் பெரியாழ்வார் ....
என்று கூறப்பட்டுள்ளது.
அந்தச்சிலைக்கு நேர்  எதிரே இரண்டு ஜீயர்களின் திருவுருவம் உள்ளது.



• தெற்கு ராஜகோபுரத்தின்  கீழ்புறநிலையில் நெற்றியில் திருமண்காப்பு தரித்து, மார்பில் மாலை புரள கூப்பிய கரங்களுடன்
அப்பாவையங்கார் சிலை உள்ளது.

சுபமஸ்த்து சௌமிய வருஷம் தை மாதம் நாலாம் தேதி வெள்ளிக்கிழமை நாள் ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு படித்தனம் ஒன்றும் நடத்தாமல் மிகவும் அன்னியாயம் பண்ணுகையில் குடுக்க மாட்டாதே இந்த திருக்கொபுரத்தில் ஏறி விழுந்து இறந்தகாலம் எடுத்த அழகியமணவாளதாசன் ஸ்ரீகாரியம் அப்பாவய்யங்கார். இவருக்கு சுவாமி யெக்காளகள் திருத்தேர் புறப்பாட்டு முதலான அதிகவரிசை பிரசாதித்தருளி பிரம்மமேத சம்ஸ்காரம் பண்ணிவித் தருளி முழுபடித்தனம் கொண்ட ருளினார். யிப்படி நடந்த இந்த முழு படித்தனத்துக்கு விரோதம் பண்ணியவன் ரெங்கத் துரோகியாய் போகக் கடவன் அனுகூலம் பண்ணியவன் ஸ்ரீலட்சுமி பரிபூர்ண கடாக்ஷ பாக்யஸ்தனா  இருக்கக் கடவன் “ என்று கல்லெழுத்துக்ள் கூறுகின்றன.
இதில் சைவ,வைணவ சமப்பூசல் என்று கொள்ள முடியாது. அதற்குக் காரணம். ஸ்ரீரங்கம் கோயிலில் கோனேரிராயன் பல கல்வெட்டுக்கள் உள்ளன. அவன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொக்கப்பனை 'கார்த்திக்கை கோபுர வாசல் கதவுகள்' செய்து கொடுத்த கல்வெட்டு உள்ளது , (அந்த கதவுகள் 2005 வரை இருந்தது)
• கோனேரிராயன் சக ஆண்டு 1414 (கி.பி.1492ம் ஆண்டு) பரீதாபி ஆண்டு ஆவணி 26 ஆம் நாள் வெள்ளிக்கிழமை,உத்திர நாளில் கதவுகள் இட்டு இரண்டு கிராமங்களை தானமாக குடுத்தது பற்றிய கல்வெட்டு( A.R.E. No.115 of 1937-38) கார்த்திகை கோபுர வாசல் உள் கீழ் புறம் உள்ளது. (அவன் தந்த கதவுகள் கி.பி.2002 ம் ஆண்டு நடந்த திருப்பணியின் போது அகற்றப்பட்டு மடைப்பள்ளியில் வைக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்போடு  மறைந்து போனது.)


இது கோனேரிராஜாவுக்கும், கந்தாடை ராமாநுஜ முனியான ராமராஜருக்கும் இடையேயான திருவரங்க உள்துறை நிர்வாக ஆளுமை செய்வதில் ஏற்பட்ட பூசலே காரணம் என்பர் பேரா. குடவாயில்- திரு.பாலசுப்பிரமணியன்.
• கி.பி.15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயநகர ஆட்சியின் கீழ் சிற்றரசனாக இருந்தவன் கோனேரிராயன் (கி.பி.1486-1495) இவனது ஆட்சிப் பகுதி வடக்கே காஞ்சிபுரத்திலிருந்து தெற்கே திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் உட்பட்ட பகுதிகள் அடங்கியிருந்தன. 1471இல் கோனேரிராயன் திருச்சிராப்பள்ளி பிராந்திய தலைவரானார். இவரது தலைநகர் காஞ்சிபுரமாகும். திருவரங்கத்தில் இவனது கல்வெட்டே தமிழ் மன்னர்களின் கடைசி கல்வெட்டாகும்.

  • சாளுவ வம்சம்  (கி.பி1485- 1491)  முடிவு:-
                • கி.பி.1485ல் சங்கம மரபைச் சேர்ந்த இறுதி விஜயநகரப் பேரரசர் பிரௌத ராயன் இறப்பிற்குப் பின், சாளுவ மரபின் படைத்தலைவர் சாளுவ நரசிம்ம தேவ ராயன் (கி.பி. 1485 – 1491) இராணுவப் புரட்சி மூலம் விஜயநகரப் பேரரசின் அரியணை ஏறினார். இவருக்குப் பின் வந்த திம்ம பூபாலன் மற்றும் நரசிம்ம ராயன் II ஆகியோர் கி.பி.1491 முதல் 1505 முடிய பேரரசை ஆண்டனர்.

• துளுவ வம்சம்(கி.பி.1491-1542):-
                கி.பி.1505 பேரரசின் துளுவ மரபின் பெரும் படைத்தலைவர் துளுவ நரச நாயக்கன் இராணுவப் புரட்சி செய்து சங்கம மரபினரிடமிருந்து விஜயநகரப் பேரரசை கைப்பற்றி அரியணை ஏறினார். கி.பி.1509ல் துளுவ நரச நாயக்கரின் மகன் கிருஷ்ணதேவராயரின் ஆட்சி துவங்கியது.

•கிருஷ்ணதேவராயர் (கி.பி.1509 - 1529) ஆட்சி:-                        ஸ்ரீகிருஷ்ணதேவராயனின்,  தந்தை நரச நாயகன், உண்மையில் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாய் கொண்டவர் இல்லை, கர்நாடகத்தில்(தற்போதைய கூர்க்) துளு என்ற மொழியை தாய்மொழியாய் கொண்டவர், அவர் தலைமை தளபதியாக வேலை பார்த்த கடைசி சாலுவ வம்ச மன்னனான நரசிம்ம ராயனுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் மன்னன் ஆனார்.
கிருஷ்ணதேவராயர் இந்து வீரர்களுடன், முஸ்லீம் படைவீரர்களையும் தனது படைதுறைகளில் சேர்த்து வளுவான படையணிகளை உருவாக்கினார்.  பத்தாண்டுகளில் தன் போர்த் திறமையால் வடக்கில் இருந்த தக்காணச் சுல்தான்களின் ஆக்கிரமிப்புகளை வென்றார்.
கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில் விஜயநகரப் பேரரசு நாற்புறங்களிலும் விரிவாக்கப்பட்டு, புகழின் உச்சத்தில் இருந்தது. தக்காண சுல்தான்களின் வடக்கு, கிழக்குப் பகுதிகளையும் மற்றும் கலிங்க நாட்டையும் கைப்பற்றி விஜயநகரப் பேரரசில் இணைத்தார். கி.பி.1520ல் நடைபெற்ற ராய்ச்சூர் போரில் கிருஷ்ணதேவராயர், பீஜாப்பூர் சுல்தானகத்தை வெற்றி கொண்டார். போரின் முடிவில் பிஜப்பூர் சுல்தான் கிருஷ்ண நதியின் அப்பாலுக்கு விரட்டியடிக்கப்பட்டார். ராயர் மிகுந்த இறை நம்பிக்கை உடையவராகவும்  இருந்தார் .
இன்றைய ஆந்திராவில் உள்ள திருவேங்கடமலைக்கு (திருப்பதி ) சென்று, தங்கம் வைடுரியங்களால் ஆன பொருட்களை தானமாக வழங்கினான். மேலும் திருப்பதி கோயிலுக்கு பல தானங்கள் செய்து, கடைசியாக, தன் இரு பட்டத்து ராணிகளுடன் தன் சிலையையும்  (சென்னாதேவி, திருமலாதேவி) சேர்த்து மூன்று பேரும் அங்கு வேங்கடவனை நோக்கி வணங்குவது போல சிலைகளைச் செய்து வைத்தான்.
இன்றும் திருவேங்கடமலையில் சென்றால் இவர்கள் மூவரின் வெண்கல சிலைகனை பார்க்கலாம்.
கிருஷ்ணதேவராயர் தாம் வைணவராக இருந்தபோதிலும் அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார். கலை இலக்கியப் புரவலராகவும் அவர் திகழ்ந்தார். எனவே 'ஆந்திரபோஜர்' என்று அவர் அழைக்கப்பட்டார்.
•அஷ்டதிக்கஜங்கள் என்ற எட்டு சிறந்த அறிஞர்கள் அவரது அவையை அலங்கரித்தனர். அவர்களின் முதன்மையானவர் அல்லசானி பெத்தண்ணா. ஆந்திரகவிதாபிதாமகர் என்று அவர் புகழப்பட்டார். அவரது முக்கிய படைப்புகள் மனுசரிதம் மற்றும் ஹரிகதாசாரம் என்பதாகும். பிங்கலி சூரண்ணா, தெனாலி ராமகிருஷ்ணா இருவரும் சிறந்த அறிஞர்களாகத்திகழ்ந்தனர். ஆமுக்தமால்யதம் என்ற தெலுங்கு மொழி நூலையும், ஜாம்பவதி கல்யாணம், உஷாபரிணயம் என்ற வடமொழி நூல்களையும் கிருஷ்ண தேவராயர் இயற்றியுள்ளார்.
• ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் மீது மிகுந்த ஈடுபாடு உடைய ராயர் ஆண்டாளை மையக்கருவாகக் கொண்டு “ஆமுக்த மால்யதா’ என்ற நுலை எழுதினார். இந்த நூல் தெலுங்கு இலக்கிய உலகில் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாக கருதப் படுகிறது.
•ஸ்ரீகிருஷ்ணதேவராயர் திருவரங்கம் பெரியகோயிலுக்கு சக ஆண்டு 1438 (கி.பி.16-02-1517) தாது வருஷம் மாசி மாதம் 11ம் நாள் திங்கட்கிழமை வருகை தந்து, அன்றே பல விலையுயயர்ந்த ஆபரணங்களையும், நவரத்னங்களையும் திருக்கோயிலுக்கு நன்கொடையாகவும், சில கிராமங்களைத் தானமாகவும் தந்தது பற்றிய தெலுங்கு மொழிக் கல்வெட்டு (A.R.E.No.341 of 1950-51 - இரண்டாம் திருச்சுற்று மேற்குப் பக்கச் சுவர் அடித்தளப்பகுதியில்) கூறுகிறது. மேலும் இவரது பெயரால் மாசி மாதம் தேரோட்டத்துடன் கூடிய 'மாசி பிரம்மோத்ஸவம்' நடைபெற்றதாக இரு தமிழ் கல்வெட்டுக்களின்
(A.R.E.No.42 of 1938-39)
(A.R.E.No.265 of 1930)
 மூலம் அறியமுடிகிறது. தற்போது மாசி தெப்போத்ஸவம் மட்டுமே நடைபெறுகிறது.

தொடர்ச்சி அடுத்த பதிவு-Postல பார்ப்போம்.


                    அன்புடன்

        ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்



Saturday, October 13, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 5)




• அரசியல் வரலாற்று மரபு
திருவரங்கம் பெரியகோயில் 
                         (பகுதி - 4)ன் தொடர்ச்சி … … … …




• முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை அரசாண்ட பாண்டிய மன்னனாவான். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனை அடுத்து முடி சூடியவனான இவன் தன் இறப்பு வரை ஆட்சி புரிந்தான்.

மாறவர்மன் குலசேகரன் 'எம் மண்டலமும் கொண்டருளிய', 'கோனேரின்மை கொண்டான்', 'கொல்லங்கொண்டான்' என்ற விருதுகளை ஏற்றான். கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம்,சிங்களம் ஆகிய நாடுகளை வெற்றிகொண்டான் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய வருகிறது. மூன்றாம் இராசேந்திரன் மற்றும் போசள இராமநாதனை கி.பி 1279 இல் வென்றான். சிங்களத்தில் உண்டான அரசியல் கலவரத்தை வாய்ப்பாக கொண்டு கி.பி 1284 இல் தனது படைத்தலைவன் ஆரியச் சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தான். புத்தரின் பல் சின்னமொன்றை கைப்பற்றி வந்தான் கி.பி 1302-1310 காலத்தில் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து குலசேகரபாண்டியனுக்கு அடிபணிந்து அப்புனித சின்னத்தை மீட்டு சென்றான். குலசேகரன் அரசவையில் 'தகியுத்தீன் அப்துல் ரகுமான்' என்பவர் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக 'அப்துல்லா வசாப்' எனும் அரபிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார்.
• மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 10வது ஆட்சியாண்டுக் (06-12-1277) கல்வெட்டு ஒன்று (A.R.E.No. 7 of 1936-37)
திருவரங்கம் பெரியகோயில்
 மூன்றாம் திருச்சுற்று  கிழக்குப்பக்கச்சுவரில்
உள்ளது. செவ்விருக்கை நாடு சக்கரவர்த்திநல்லூர் மதிதுங்கன் தனிநின்று வென்ற பெருமாளான ஆர்ய சக்ரவர்த்தி என்பான் திருவரங்கம் அழகியமணவாளப்பெருமாளுக்கு திருமாலைகள் சமர்ப்பிக்க கொடுத்த நிலதானங்கள் பற்றி அக்கல்வெட்டு கூறுகிறது.

• மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மறைவிற்கு பிறகு அவனது இரு மகன்கள் சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரிடையே எழுந்த பங்காளிச் சண்டையைப் பயன்படுத்தி தில்லி சுல்தான்(அலாவுதீன் கில்சி) பாண்டி மண்டல ஆட்சியை கைப்பற்றினான்.
யாரந்த 'அலாவுதீன் கில்சி' என்று
வரலாற்றுச்சுவடுகளைத் தேடியதில் எனக்குக் கிடைத்த செய்திகளோடு தொடருகிறேன்.

 • கில்ஜி வம்சம்:-
கில்ஜி வம்சத்தினர் மத்திய ஆசியாவைச் சார்ந்த துருக்கியர்கள் ஆவார்கள்.
இவர்கள் தில்லியைக் கைப்பற்றுவதற்கு முன்னர் தற்போதைய ஆப்கானிஸ்தான் பகுதியில் வசித்து வந்தனர். 'கில்ஜி' என்பது ஆப்கானியக் கிராமம் ஒன்றின் பெயர் ஆகும். இவர்கள் ஆப்கானியர்களின் கலாச்சாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றியதால் ஆப்கானிய இனக் குழுக்களுள் ஒன்றாகக் கருதப்பட்டனர். அதன் காரணமாய் இவர்களை துருக்கிய-ஆப்கான் வம்சம் என்று அழைத்தனர். கில்ஜி அரசர்கள் 'சுல்தான்கள்' என அழைக்கப்பட்டனர். இவர்களுள் ஜலானுதீன் பிரோஸ் கில்ஜி, அலாவுதீன் கில்ஜி மற்றும் குத்புதீன் முபாரக் ஆகிய மூவர் மிகவும் முக்கியமான சுல்தான்களாக வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றனர்.
• அலாவுதீன் கில்ஜி (கி.பி. 1296–1316)
அலாவுதீன் கில்சி போர்க்களங்களில் தனது படையணிகளை நடத்திச் செல்வதில் கைதேர்ந்தவர். முரட்டு மங்கோலியர்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தி இந்திய துணை கண்டத்திலிருந்து மங்கோலியர்களை விரட்டி அடித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுல்தான் அலாவுதீன் கில்சி.
சித்தூர் (மேவார்) நாட்டு பட்டத்து அரசி பத்மினியின் அழகை கேள்விப்பட்டு, பத்மினியை அடையும் நோக்கில் மேவார் கோட்டை மீது அலாவுதீன் கில்சி 1303ல் படை எடுத்த விவரங்கள்
சூஃபி கவிஞரான 'மாலிக் முகமது ஜாயசி' என்பவர், கிபி 1540ல் 'அவதி' மொழியில், சித்தூர் ராணி பத்மினி குறித்து 'பத்மாவதி காவியம்' இயற்றியுள்ளார். இக்காவியம் புனையபட்டது அன்றி, வரலாற்றுக் காவியம் அல்ல என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
[ராணி பத்மினி மற்றும் அலாவுதீன் கில்சி குறித்த 'பத்மாவத்'  என்ற திரைப்படமும் சனவரி, 2018ல் வெளியானது.]
அலாவுதீன் கில்ஜியின் தக்காணப் படையெடுப்பும் தென்னிந்திய வெற்றிகளும் குறிப்பிடத்தக்கவை. தெற்கில் நான்கு முக்கிய அரசுகளான 1.தேவகிரி யாதவ அரசு 2.வாரங்கல் காகதீய அரசு, 3.துவார சமுத்திரத்தில் ஹோய்சள அரசு மற்றும் 4.மதுரைப் பாண்டிய பேரரசு ஆகியனவற்றை கில்சி படையெடுத்து வென்றான்.

 • அலாவுதீன் கில்சி குசராத்து  படையெப்பு:-
அலாவுதீன் கில்சி, குசராத்து மீது படையெடுத்து செல்ல தனது இரண்டு படைத்தலைவர்களான, 'உலுக்கான் மற்றும் நுசுரத் கான்' என்பவர்கள் தலைமையில் இரண்டு படையணிகள் இரண்டு பக்கமாக அனுப்பினார். நுசுரத் கான் (24. 02. 1299ல்) தனது படைகளை தில்லியிலிருந்து குசராத்திற்கு நேர்வழியில் நடத்திச் சென்றார். உலுக்கான் தனது படைகளை, தில்லியிலிருந்து சிந்து நாட்டின் வழியாக குசராத்து நோக்கிச் சென்றான். பின்னர் குசராத்து மன்னர் வகேலா வம்சத்தின் இரண்டாம் கர்ணதேவ வகேலாவுடன் நடந்த போரில், கர்ணதேவன் தோற்று தனது மகள் தேவலா தேவியுடன் தேவகிரியை நோக்கி தப்பி ஓடிவிட்டார். அலாவுதீன் கில்சியின் படைகள் குசராத்தைக் கைப்பற்றி, அங்கிருந்த சோமநாதபுரம் (குசராத்து) சிவன் கோயிலை உடைத்தெறிந்தனர். மேலும் துவாரகையில் இருந்த கிருட்டிணன் கோயிலையும் இடித்து தரைமட்டம் ஆக்கினர். அரண்மனை மற்றும் கோயில்களின் கருவூலங்களில் இருந்த பெருஞ்செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர். அத்துடன் நில்லாது, குசராத்து மன்னன் இரண்டாம் கர்ணதேவ வகேலாவின் பட்டத்தரசி கமலாதேவி
மற்றும் அவளது பணிப்பெண்ணையும் (திருநங்கை), கில்ஜியின் படைத்தலைவர்கள் கைப்பற்றி தில்லி சுல்தானாகிய அலாவுதீன் கில்ஜியிடம் ஒப்படைத்தனர்.
குசராத் மன்னரின் மனைவியை கில்ஜி, இசுலாமிய மதத்திற்கு மத மாற்றம் செய்து மணந்து கொண்டார். அரசியின் பணிப்பெண்னான திருநங்கையையும் மதமாற்றம் செய்து ’மாலிக் கபூர்’ என்று இசுலாமிய பெயர் சூட்டினார்.
மத குருக்களின் எதிர்ப்பை மீறி, மாலிக்கபூருடன் கில்ஜி நெருங்கிய நட்பும், பாலியல் உறவும் கொண்டிருந்தார். மாலிக் கபூருக்கு முதலில் சிறு படைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. மாலிக் கபூர் விரைவாக கில்ஜியின் படையில் வேகமாக உயர்ந்து 10,000 படைவீரர்கள் கொண்ட படைஅணிக்கு படைத்தலைவரானார்.  

• மாலிக் கபூர்
தென்னிந்தியா மீது படையெடுப்பு:-
மாலிக் கபூர் இரண்டு முறை தென்னிந்தியா மீது படையெடுத்தான். முதலில் 1309ல் தேவகிரி மீது படையெடுத்து வென்றார். தேவகிரி மன்னர் இராமச்சந்திரனின் குசராத் பகுதியையும் அவரின் மகள் இளவரசியுமான சோதி என்பவளையும் பரிசாக பெற்று கில்ஜியிடம் ஒப்படைத்தார். 1311ல் மாலிக் கபூர் வாரங்கல் நாட்டை ஆண்டு கொண்டிருந்த காகாதீய குல மன்னர் பிரதாப் ருத்ர தேவனை வென்று, தில்லி சுல்தானுக்கு அடங்கி, ஆண்டு தோறும் கப்பம் கட்டும்படி பணித்தார். அத்துடன் நில்லாது, ஹொய்சாலப் பேரரசை கைப்பற்றி ஹம்பி பகுதிகளில் இருந்த ஹோய்சாலேஸ்வரர் கோவில், கேதாரேஸ்வரர் கோயில் போன்ற போசளர் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்துக் கோயில்களை பாழடித்தார்.
உலகப்புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை வாரங்கல் அரசிடமிருந்த்து கொள்ளையடித்து கைப்பற்றினார். பின்பு மாலிக் கபூர், தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி காஞ்சிபுரம் கோயில்கள், சிதம்பரம் நடராசர் கோயில், திருவண்ணாமலை, திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில்களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்ததுடன், கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார்.
(மதுரை ஆலவாய் கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கம், தானாய்த் தோன்றியவர். மாலிக் கபூர் படையெடுப்பின் போது கருவறையை மூடி, முன்னே வேறு ஒரு லிங்கத்தை வைத்து ஏமாற்றி, உண்மையான லிங்கத்தை பாதுகாத்துள்ளனர். இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்கு எதிரே மாலிக் கபூரால் உடைக்கப்பட்ட லிங்கம் காட்சிக்கு உள்ளது.)
• இசுலாமிய வரலாற்று அறிஞரான சியாவுதின் பருணியின் கூற்றுப்படி, மாலிக் கபூர், தென்னிந்தியாவில் கொள்ளையடித்த செல்வங்களையும் மற்றும் 240 டன் தங்கத்தையும், 612 யானகள், 20,000 குதிரைகள் மேலேற்றி தில்லிக்கு வெற்றி வாகையுடன் திரும்பிச் சென்றான் எனக் கூறுகிறார். தில்லி சுல்தான் அலாவூதின் கில்ஜி, மாலிக் கபூரின் வெற்றிகளையும், கைப்பற்றிய தென்னிந்த்திய செல்வங்களைக் கண்டு பாராட்டி, மாலிக் கபூருக்கு தில்லி சுல்தானகத்தின் “தலைமைப் படைத்தலைவர்” ('மாலிக் நைப்’) என்ற புதிய பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டு, மன்னரின் பிரிக்க முடியாத துணையாக மாறினான் மாலிக் கபூர். 
• சயாவுடீன் பார்னி , அமீர்குசுரு, வாசப் போன்றவர்களின் கூற்றுகள் படி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கோயில்களை இடித்து அங்கிருந்த பொன், பொருள்களைக் கொள்ளையிட்டு சிற்பங்கள் பலவற்றையும் சிதைப்பதற்குக் காரணமானான் மேலும் கொள்ளையிட்ட பொருள்களை டில்லிக்குக் கொண்டு சென்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாலிக்காபூர் 612 யானைகள், 20,000 குதிரைகள், 96,000 மணங்கு பொன், முத்து மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளினை எடுத்துச் சென்றான் என பார்னி என்பவன் குறித்துள்ளான்.
• 'பொன் வேய்ந்த பெருமாள்' ஆகிய ஜடாவர்மன் சுந்தரபாண்டியனாலே பொன்மயமாக இருந்த ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தென்னகத்து திருக்கோயில்களின் பொக்கிஷங்களைக் கொள்ளையிட்டு தில்லிக்கு கொண்டு சென்று கில்சி மன்னனிடம் ஒப்படைத்தான். அந்த பாபத்தின் விளைவாக அடுத்த வருடங்களில்
அலாவுதீன் கில்சிக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அவன் படுக்கையில் வீழ்ந்தான். பின்னர் அவனுக்கு நினைவாற்றல் குறையத் தொடங்கி மரணமடைந்தான். இதனைப் பயன்படத்தி மாலிக் காபூர் கில்சியின் வாரிசுகளைக் குருடாக்கி விட்டு அவர்களில் மீதம் இருந்த ஒரு சிறுவனை மன்னனாக்கி நாட்டை ஆளத்தொடங்கினான்.
 கில்ஜியின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து, மாலிக் கபூர் உயிரோடு இருக்கும் வரை தங்களால் நிம்மதியாக வாழ முடியாது என்று, அவனது பாதுகாவலர்களைக் கொண்டே அவனை மடக்கினர். டெல்லியில் தனி அரண்மனையில் படுக்கையில் இருந்த மாலிக் கபூரை, நள்ளிரவில் சுற்றி வளைத்த கில்ஜியின் விசுவாசிகள், அவனை கை வேறு கால் வேறாக வெட்டித் தலையை தனியே எடுத்தனர். டெல்லி கோட்டையின் ஒவ்வொரு வாசலிலும் ஒவ்வொரு உறுப்புகளைத் தொங்கவிட்டு பழிதீர்த்துக்கொண்டனர்.எதிர்ப்பே இல்லாமல் பெரும் படை நடத்திச் சென்று, இந்தியாவை நடுங்கச் செய்த மாலிக் கபூர், அடையாளமே இல்லாமல் அழித்து ஒழிக்கப்பட்டான். ஓர் அடிமையாகத் தொடங்கி ஆட்சி அதிகாரம் வரை உயர்ந்த இரண்டு பேரின் 'பெரும் எழுச்சியும் வீழ்ச்சியும்' வரலாறு நமக்குப் புகட்டும் பாடம்.
 காலவெளியில் காலச்சுவடுகளாய்  கண்ட இவை, காலத்தின் வெறும் நிகழ்வுதான் என்பதுபோல அந்த காலவெளியெனும் ஆறு அமைதியாய் ஏதுமறியாதது போலே ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
• தென் இந்தியாவின் மீது முதல் முதலில்  (1311-13) படையெடுத்து வந்தவன் மாலிக் கபூர்.
இரண்டாம் முறை படையெடுத்து வந்தவன் 'உலுக்கன்' ( இவனே பின்னாளில் முகமதுபின் துக்ளக் என்று பெயர் சூட்டிக்கொண்டான்) ஆவான். அப்போதைய ஹொய்சாள மன்னனான மூன்றாம் வீரவல்லாளன்,  மாலிக் கபூர்(கி.பி.1311) மற்றும் குரூஸ்கான் (கி.பி.1318)  ஆகியோரிடம் அடிபணிந்தது போல , உலூக்கனிடமும் (கி.பி.1323) அடிபணிந்து, துருக்கர்கள் தென்னிந்தியாவில் மிக எளிதாக நுழைய வழிவகுத்தான்.
• டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான்.
கிபி 1321ல் தென் இந்தியாவின் மீது படையெடுக்க விரும்பினான். அவனுடைய முக்கிய குறிக்கோள் தங்க வைரங்களின் கருவூலமாக திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே. கிபி1323 ஆம் ஆண்டு ஆனி மாதம் 22ஆம் தேதி டில்லியிலிருந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான். புறப்பட்டு திருவரங்கமருகே வந்தபோது,
அன்று நம்பெருமாள் 'பங்குனி உத்சவம்' எட்டாம் திருநாள் அன்று வடதிருக்காவேரி (கொள்ளிடக்கரை) கரையில் அன்று இருந்த பன்றியாழ்வான் கோவிலில் பெருமாள் எழுந்தருளி இருந்த போது, உலுக்கன் வருகை அறிந்த மக்கள் அவன்  தொடர்ந்து வருவானே என்று அஞ்சினர்.
[உலூக்கான் நடத்திய படுகொலைகளும் அடித்த கொள்ளைளும் ரத்ததை உறையச் செய்பவை. கோயிலுக்குள் நுழைந்ததும் அவன் உற்சவர் விக்கிரகத்தைத்தான் தேடினான். உற்சவர் இல்லாத்தால் கோபத்தில் அங்கே கூடியிருந்த அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களையும் கொன்றுகுவித்தான். அன்று மட்டும் ஸ்ரீரங்கத்த்தில் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்டனர். இதைப் “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.]
ஸ்ரீரங்கத்தில் வைணவ குரு பிள்ளைலோகாசார்யர் தம் சிஷ்யர்களுக்கு ரகசிய உபதேசங்கள் செய்து வந்த காலத்தில், இந்த வரலாற்றுச் சம்பவம் நடந்தேறியது.
எல்லாம் நல்லனவாகவே நடந்துகொண்டிருந்த அந்த கால, நேரத்தில் முகலாயர்கள் படையெடுத்து (கி.பி.1323) திருவரங்கத்தைத் தாக்க வரும் செய்தி ஊரெங்கும் காட்டுத்தீயாய் பரவியது. படையெடுப்பின் நோக்கமே கோயில்களைத் தகர்த்து அதிலுள்ள விலைமதிப்பற்ற பெருஞ்செல்வங்களைக் கொள்ளயடிப்பதுதான்.
அதை எண்ணி திருவரங்கத்திலுள்ள ஒவ்வொருவரும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துபோனார்கள்.
அந்தச் அவசரகால சமயத்தில் 'ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியார்' வைஷ்ணவ சமயத்தின் மூத்த ஆச்சாரியராக (குருவாக) இருந்து வந்தமையால் அந்த நிலைமையச் சமாளிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அவர் மிகவும் வயது முதிர்ந்து தன்னைத் தானே பராமரித்துக்
கொள்ள இயலாத நிலையில் இருந்தும் திருவரங்கம் பெரிய பெருமாளை அவர்களிடமிருந்து காக்கும் பொருட்டு மூலவர் சந்நிதியை கல்திரையிட்டு மூடி, முன்பொரு விக்ரஹத்தை வைத்துவிட்டு 'அழகிய மணவாளனை' உபயநாச்சிமார்களுடன் மூடுபல்லக்கில் எழுந்தருளப் பண்ணி தோளில் சுமந்துகொண்டு தெற்கு நோக்கி பயணப்படலானார். தெற்கே திருமோகூருக்கு அருகில் யானைமலை அடிவாரத்தில் 'ஜ்யோதிஷ்குடி' (யா. கொடிக்குளம்) என்ற கிராமத்தில் பெருமாளையும் நாச்சிமார்களையும் ஒரு குகையில் மறைவாக எழுந்தருளச் செய்து திருவாராதனம் செய்து வந்தனர். அக்ஷய வருடம் (கி.பி.1323) ஆனிமாதம் ஜ்யேஷ்ட சுத்த துவாதசியில் 118வது (118 வயதில்) திருநக்ஷத்திரத்தில் பிள்ளைலோகாச்சாரியார் பரமபத்திற்கு எழுந்தருளினார். அவரது சரமத் திருமேனியை (பூத உடலை) அலங்கரித்து ஜ்யோதிஷ்குடியில்(யா. கொடிக்குளம்) மலையடிவாரத்தில் திருப்பள்ளிப்படுத்தி திருவரசும் கட்டிவைத்தார்கள் என்கிற தகவலை கோயிலொழுகின் மூலம் அறிகிறோம்.

பிள்ளை லோகாச்சார்யரின் மறைவுக்குப்பிறகு,
பாதுகாப்பு கருதி'அழகிய மணவாளப்பெருமாள்' மதுரை அழகர் திருமலையில் (திருமாலிருஞ்சோலை - அஞ்சினான் கோட்டை)
ஒரு வருடம் மலைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தார். அப்போது அழகர்மலை அழகாபுரிக்கோட்டையை ஆட்சி செய்தவன் 'கங்கைகொண்ட சூரியத்தேவன் வாணாதிராயன் காளிங்கராயன்' எனும் பாணர்குலச் சிற்றரசன் ஆவான். அவனது பெரும் உதவியுடன் பிள்ளைலோகாச்சாரியார் சிஷ்யர்கள் அழகியமணவாளரின் திருமஞ்சனம் மமற்றும் திருவாராதனங்களுக்காக 'அழகியமணவாளன் திருக்கிணறு' ஒன்றையும் உருவாக்கினார்கள். (அழகர்மலையில் நூபுரகங்கைக்குச் செல்லும் வண்டிப்பாதையில் கோயிலின் மேற்கு மதில்சுவருக்கு அருகே இன்றும் அக்கிணறு உள்ளது.)

பிறகு  கோழிக்கோடு(கேரளம்), தமிழ்நாடு-கர்நாடகம்-கேரளா மாநிலம் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் திருக்கணாம்பியில் சில காலம், பிறகு மேல்கோட்டை திருநாராயணபுரம் பிறகு திருவேங்கடமலைக் காடுகளில்
மறைத்து வைக்கப்பட்டிருந்தார். பின்பு யாதவராயனால் கி.பி.1360ல் திருமலைக் கோயிலில் கட்டப்பட்ட ரங்க மண்டபத்தில் அழகியமணவாளப்பெருமாள் எழுந்தருளியிருந்தார்.
கிபி. 1336 ஆம் ஆண்டில் ஹரிஹரர் மற்றும் புக்கர் எனும் யாதவ சகோதரர்கள் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தார்கள். குமார கம்பணன் புக்கரின் மகன் ஆவார். இவர் கிபி 1362 இல் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட இராஜநாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினார். பின்னர் மதுரை சுல்தானகம் மீது படையெடுத்து அங்கு சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார். கி.பி. 1364 ஆம் ஆண்டளவில் மகமதியர்களின் ஆட்சி நிலை குலையத்தொடங்கி கி.பி. 1378 வரை போராட்டம் நடைபெற்றது. குமார கம்பண்ணன் கோயில் அறநிலையங்களினைப் பாதுகாப்பதனையும் கடமையாகக் கொண்டு போர் புரிந்து பல தலைவர்களை பாண்டிய நாட்டின் பொறுப்புகளில் அமர்த்தினான்.
[மதுரை படையெடுப்பின் போது உடனிருந்த இவரது மனைவி கங்கதேவி மதுரை முற்றுகையையும், வெற்றிகளையும் 'மதுரா விஜயம்' என்ற தனது சமஸ்கிருத நூலில் பதிவு செய்துள்ளார்]

• 1336 ஆம் ஆண்டு விஜயநகர் சாம்ராஜ்யம் இறைஅருளால் தென்னிந்தியாவில் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 'அழகியமணவாளப் பெருமாள்' திருமலையில் இருந்தபோது செஞ்சியை ஆண்டுகொண்டு இருந்த கோபண்ண உடையார் திருமலையில் வருகை தந்து அரங்கநாதனை திரிசித்து விட்டு  ஸ்ரீரங்கத்தில் திரும்பவும் அவரை எழுந்தருளப்பண்ண சித்தம் கொண்டார்.
அழகியமணவாளப்பெருமாளை செஞ்சிக்கு அருகேயுள்ள 'சிங்கபுரம்' என்கிற ஊரில் எழுந்தளுப்பண்ணி  பல காலம் ஆராதித்து வரும் காலத்து ஸ்ரீரங்கத்தில் இருந்து சிங்கபிரானுடைய குமாரர் திருமணத்தூண் நம்பி (திருமணல்தூண் நம்பி என்றும சில குறிப்புகள் சொல்லுகின்றன) அன்றைய கோவில் அதிகாரியான உத்தம நம்பியை செஞ்சிக்கு அனுப்பி கோபண்ண உடையாருக்கு கண்ணனூரில் உள்ள துலுக்கன் படை பற்றிய செய்திகளை சொல்லி அதனை வென்று,
கி.பி.1371 பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாள் அழகியமனவாளனையும் உபய நாச்சிமார்களையும் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பித்தான். இதற்கான கல்வெட்டு ஒன்று (A.R.E.No.55 of 1892) ஸ்ரீரங்கம் கோவிலில் ராஜமகேந்திரன் திருச்சுற்று கிழக்குப்பகுதியில் காணப்படுகிறது.
 (கி.பி.1324 முதல் 1370 வரை
சுமார் 48வருடம் அழகியமணவாளர் வனவாசம் அல்லது உலா சென்றார்) 





அழகியமணவாளப்பெருமாள் திருவரங்கத்திற்கு எழுந்தருளுவதற்கு முன்பு கொள்ளிடக்கரையின் வடகரையில் 'அழகியமணவாளம்' எனும் கிராமத்தில் தங்கியிருந்து, பிறகு கி.பி.1371 பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாளில் திருவரங்கம் வந்தார். மூன்றாம் திருச்சுற்றில்  சேரனை வென்றான் மண்டபத்தில் எழுந்தருள பண்ணப்பட்டனர். 48 வருடமாகியதால் இவர் தான் அழகியமணவாளனா? என்று திருவரங்க மக்கள் சந்தேகமுற்றனர். ஈரங்கொல்லி எனப்படும் ஒரு வண்ணானால் உண்மை அறியப்பட்டது.
அந்த வண்ணானால் திருவரங்கம் அழகிய மணவாளப்பெருமாளுக்கு சூட்டப்பட்ட திருநாமமே "நம்பெருமாள்" என்பதாகும். கி.பி.1371 ம் ஆண்டு தொடங்கி அழகிய மணவாளனுக்கு நம்பெருமாள் என்ற திருநாமமே வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ச்சி.....
அடுத்த பதிவு - Postல பாப்போம்.

அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் 



Friday, October 12, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 4)




• திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 3)
தொடர்ச்சி …… … … … … …



கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர்கள் 'முற்காலச் சோழர்கள்' என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் மிகவும் புகழ் பெற்று விளங்கினார். காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 'கல்லணை' இவரது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை" விளங்குகிறது. இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்றும் கூறப்படுகிறது.
இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி, போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு நட்பு பூண்ட கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்,இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி, குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். மேலும் நல்லுருத்திரன், கணைக்கால் இரும்பொறையை வென்று சிறைப்படுத்திய கோச்செங்கணான் ஆகிய மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
களப்பிரர்களின் வருகையால் சங்க காலச் சோழர்கள் சிற்றரசர்களாயினர்

சிற்றரசர்களான சோழர்கள் தம் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். பல குறுநில மன்னர்களோடு திருமணத் தொடர்பு கொண்டு இழந்த செல்வாக்கை சோழர்கள் மீட்க முயன்றனர். பல்லவருக்கு கீழடங்கி ஆண்ட சிற்றரசனான 'விசயாலய சோழன்' என்பவன் பாண்டிய மேலாதிக்கத்திலிருந்து ஆட்சி செய்த முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தான்.
கி.பி.9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழரும், அவரது மகனான முதலாம் இராசேந்திர சோழரும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க அரசர்களாவர்.
கி.பி. 10-12 ஆம் நூற்றாண்டுகளில், மேற்கண்ட சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. முதலாம் இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தார். முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.  இவ்வாறாக சோழப்பேரரசர்களாக முதலாம் குலோத்துங்கன், பின்னர் அவனது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர்.
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சோழர்கள்  தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்திருந்தனர். தெற்கே "பாண்டியர்கள்" வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன.
கி.பி.1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் 'மாறவர்மன் சுந்தரபாண்டியன்' தலைமையில் பாண்டியர்கள் 'கங்கைகொண்ட சோழபுரம்' மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான 'இரண்டாம் நரசிம்மன்' சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர்.  மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று. 
"பாண்டியப் பேரரசு" தொடங்கிய அக்காலகட்டடத்தில் திருவரங்கம் பெரிய கோயிலின் அரசியல் வரலாற்று நிகழ்வுகளை இனி அறிவோம்.



பாண்டிய பேரரசர்கள் காலத்தில் திருவரங்கம் பெரியகோயில்:-

திருவரங்கம் பெரியகோயிலின் வரலாற்றை ஆராயப் புகுந்தோமானால் இந்திய வரலாற்றினை முழுவதுமாக அறியவேண்டியிருக்கும். வைணவர்களால் "கோயில்" என்று கொண்டாடப்படும் திருவரங்கம் பெரியகோயில் எப்போது கட்டப்பட்டது என்ற சரியான தகவல்கள் கிடைக்காவிட்டாலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து இதன் வரலாற்று சுவடுகள் கண்டறியப்பட்டு வரலாற்று அறிஞர்களால் பெரிதும் பேசப்படுகிறது. இந்தக் கோயிலின் ஆரம்பகட்ட வரலாறு குறித்த ஆதாரபூர்வத் தகவல்கள் கிட்டாதது வருத்தத்திற்குறிய ஒன்றாகும்.
 எனினும் நமக்கு இந்தக் கோயிலின் ஒவ்வொரு பிரகாரங்கள் குறித்தும், மதில்கள் குறித்தும் கிடைக்கும் விபரங்களில் இருந்து அவ்வப்போது சோழ, பாண்டிய மன்னர்களால் இந்தக் கோயில் பல திருப்பணிகளைக் கண்டிருப்பது தெரிய வருகிறது.

நான்காம் திருமதிலைக் கட்டியவர் 'திருமங்கை ஆழ்வார்' என்கிறது கோயிலொழுகு.
ஏழாம் திருமதில் பிரகாரத்திலும், நான்காம் திருமதில் பிரகாரத்திலும் ஆண்டாளுக்கு எனத் தனிப்பட்ட சந்நிதிகள் தென்மேற்கு மூலையில் ஏற்படுத்தியுள்ளனர் . இதில் ஏழாம் திருமதில் பிரகாரத்தில் உள்ள வெளி ஆண்டாளின் திருச்சந்நிதி 'பிற்காலப் பாண்டியர்கள்' காலத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது.
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டிற்குள் அது கட்டப்பட்டிருக்கும் என அந்தச் சந்நிதி பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் கட்டப்பட்டிருப்பதில் இருந்து தெரிய வருகிறது.
இதைத் தவிர நான்காம் திருமதில் பிரகாரத்தில் இருக்கும் உள் ஆண்டாள் சந்நிதி கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம்.

திருவரங்கம் பெரிய கோயிலின்  கல்வெட்டுகள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்து கிடைத்துள்ளது.

சோழமன்னர்கள் கல்வெட்டுக்களில் பழமையானதாகச் சொல்லப்படுவது முதலாம் பராந்தகனின் கல்வெட்டு ஆகும். இவனுக்கு அடுத்து மன்னன் இரண்டாம் ராஜேந்திரனின் மகன்களில் ஒருவனான ராஜமஹேந்திர சோழனின் கி.பி. பதினோராம் நூற்றாண்டில் அதாவது கி.பி. 1060---1063 ஆம் ஆண்டில் இங்குள்ள முதல் பிரகாரத்தின் திருமதிலைக் கட்டியதால் இது 'ராஜமஹேந்திரன் திருவீதி' என வழங்கப் படுகிறது. 
சோழகுல மரபில் முதலாம் குலோத்துங்கனுக்குப் 
பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியக் கல்வெட்டும், 'ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம்' சோழர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்து வந்ததைச் சொல்கிறது. தமிழ்நாட்டின் அப்போதைய காலநிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
 
மூன்றாம் குலோத்துங்கனின் இருபதாண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டு ஒன்றின் மூலம் திருவரங்கம் கோயில் நிர்வாக அலுவலர்கள், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில் நிர்வாகத்தினரோடு
 சமரமாகப் பூசல்களைத் தீர்த்துக்கொள்ளும்படிக் கட்டளை இட்டிருக்கிறான்.

 ஒரிசா வரை சோழ ஆட்சி பரவி இருந்தாலும் தெற்கே இருந்து இலங்கையின் துணையோடு பாண்டியர்களும், கீழ்த்திசையில் ஆட்சி புரிந்த கங்கர்களும், அடிக்கடி சோழர்களைத் தாக்கி வந்தனர். இதில் கி.பி. 1223 முதல் 1225 வரையிலும் ஸ்ரீரங்கம் கோயில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டுக் கோயிலின் நிர்வாகம் முற்றிலும் சிதைந்து பாழ்பட்டுப் போனது என்பதை சோழர் கால வரலாற்றின் மூலம் அறிகிறோம். ஹொய்சளர்களின் துணை கொண்டு கோயிலை மீண்டும் அவர்கள் வசம் கொண்டு வர நினைத்தாலும் அவர்களால் இயலவில்லை. அப்போது பாண்டியர்கள் தலை எடுத்துச் சோழர்களை நிமிர முடியாமல் செய்து வந்தனர்.

பாண்டிய பேரரசு:

பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். (மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர்.) இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத "நீண்ட நெடிய வரலாறு" பாண்டியர்களுக்கு மட்டுமே உண்டு. பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.

• திருவரங்கம் பெரியகோயிலில்
சுந்தரபாண்டியனான மானாபரணன்(கி.பி. 1104-31) கல்வெட்டே
A.R.E.No. 117 of 1937-38)
 பாண்டியர்களின் திருவரங்கக் கல்வெட்டில் பழமையானது. அதற்கடுத்து
• பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அரசனான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216---1238) கல்வெட்டானது (இரண்டாம் திருச்சுற்று கிழக்குப்பக்க சுவர்
-A.R.E.No. 53 of 1982) குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவனது 9வது ஆட்சியாண்டில் 28-03-1225 ஆம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் அவன் திருவரங்கத்தில் மேற்க்கொண்ட நிர்வாஹ சீர்திருத்தத்தைப் பற்றிஅறிய முடிகிறது. இந்தக் கல்வெட்டில் தான்,  எம்பெருமானார் திருவடிகளை ஆச்ரயித்திருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் என்ற சொற்றொடர் முதனே முதலாக வருகிறது. கோயில் உள்துறை நிர்வாகத்தினர் ராஜமகேந்திரன் திருச்சுற்று மேலைப்பகுதியில் கூடி இருந்து எடுத்த முடிவினை அக்கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டில் 2000 எழுத்துக்கள் உள்ளதாக கல்வெட்டுக்குறிப்பே கூறுகிறது.
• முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் ஒன்பதாம் ஆட்சியாண்டுக் காலத்தில் அவனுடைய படைகள் திருவரங்கம் கோயிலை கங்கர்களிடமிருந்து விடுவித்தது. ஆனாலும் கோயிலின் திருப்பணிகளில் ஹொய்சளர்களின் ஈடுபாடு குறையவில்லை. அவர்கள் பல திருப்பணிகளைச் செய்ததாகக் கலவெட்டுக்கள் பல குறிப்பிடுகின்றன.

பாண்டிமண்டலத்தில்  போஜளர்கள் ஆளுமை:-

     திருச்சிக்கு அருகேயுள்ள கண்ணனூர்(சமயபுரம்) எனும் ஊரினைத்
தலைமையிடமாகக் கொண்டு கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த
'போசளர்கள்' தமிழகத்தில் காலூன்றினர். பாண்டியர்களுக்கு
எதிராகச் சோழர்களுக்கு உதவ முற்பட்டதனால் இவர்களது
பலம் மிகுந்தது. கண்ணனூரில் போசளர் ஆட்சியைத்
தோற்றுவித்தவன் வீரநரசிம்மனாவான். இவ்வரசன் கி.பி. 1231- இல்
காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கனைத் தோற்கடித்து அவன்
சிறைபிடித்திருந்த மூன்றாம் இராஜராஜ சோழனைச் சிறையிலிருந்து
மீட்டு, அவனைச் சோழர் அரியணையில் அமரச் செய்தான்.
போசள வீரநரசிம்மன் மகனான 'வீரசோமேஸ்வரன்' பாண்டிய
நாட்டை வென்று அவர்களிடமிருந்து திறைபெற்றான். இக்கால
கட்டத்தில் வெட்டப் பெற்ற போசளர் கல்வெட்டுக்கள் பல
பாண்டியநாட்டின் பல்வேறு இடங்களில் காணப்பெறுகின்றன.
பாண்டியர் போசளர்களுடன் நட்புறவுடன் திகழும் நிலை
ஏற்பட்டது. திருவரங்கத்திலிருந்து கிடைக்கும் வீரசோமேஸ்வரனின் கல்வெட்டு (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் - A.R.E.No. 362 of 1953-54 ) முதலாம் சடையவர்மன் விக்கிரமபாண்டியனின்  (கி.பி. 1241-1254) நாலாவது ஆட்சியாண்டு 270ம் நாளில் 'விக்கிரம சதுர்வேதிமங்கலம்' என்ற ஊரை திருவரங்கம் பெரியகோயிலுக்கு தானமாக அளித்தது பற்றி கூறுகிறது. முதலில்
ஸ்வஸ்திஸ்ரீ போஜள வீர சோமேஸ்வர தேவர் என்று தொடங்கும்.
பின்பு 2வது வரியிலிருந்து ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடை பன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீவிக்கிரம பாண்டியத்தேவர் என்று தொடரும். இதன் மூலம் பாண்டிய அரசு போஜள வீரசோமேஸ்வரனின் மேலாதிக்கத்தை ஏற்றிருந்ததை அறிய முடிகிறது. வீரசோமேஸ்வரனது மற்றொரு கல்வெட்டு  (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் - A.R.E.No. 361 of 1953-54 ) இவனது
22வது ஆட்சியாண்டு(02-11-1252)நந்தவன தானம் பற்றிக் குறிக்கிறது.
வீரசோமேஸ்வரன் 6வது ஆட்சியாண்டில் பட்டத்து ராணி சோமலா தேவியார் தந்த தானம் பற்றிய மற்றொரு கல்வெட்டும் (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் - A.R.E.No. 68 of 1892) உள்ளது.

• கி.பி.1262 வரை ஆட்சி புரிந்த சோமேசுவரனுக்குப் பின்னர் வந்த ஹொய்சள மன்னன் இராமநாதர் என்பார்(கி.பி.1263—1297) வரை ஆட்சி புரிந்தார். இவர் படைத்தலைவர்களாகிய இரு சகோதரர்கள் கோயிலுக்குப் பல வகையான தானங்கள் வழங்கியுள்ளனர் என்பதைக் கோயில் வரலாற்று நூல் கூறுவதாக அறிகிறோம்.
வீரராமநாதனது இரண்டாம் ஆட்சியாண்டு (04-02-1256)கல்வெட்டு (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் - A.R.E.No. 67 of 1892) அழகிய மணவாளருக்கு திருமாலைகள் சமர்பித்திட நந்தவன கைங்கர்யத்திற்காக நிலதானம் தரப்பட்ட குறிப்பு உள்ளன.
வீரராமநாதனுடைய மூன்றாம் ஆட்சியாண்டில் (கி.பி.1257) இவன் தந்தருளின திருமுகப்படி  சிங்கண்ண தண்டநாயகரால் எடுத்த கை அழகியநாயனார் (மேட்டு அழகிய சிங்கர்) திருக்கோபுரத்திற்கு மேற்குப் பகுதியில் "ஆரோக்ய சாலை" ஒன்றினை ஏற்படுத்திப் பராமரிப்பதற்காக ஸ்ரீபண்டாரத்தில் 1100 பொற்காசுகள் சேர்ப்பிக்கப்பட்டு வைத்ததை ஒரு கல்வெட்டு (A.R.E.No. 80 of 1936-37)
 கூறுகிறது. சந்திர புஷ்கரணியிலிருந்து ஐந்து குழி மூன்று வாசல் செல்லும் நடை பாதையில் இக்கல்வெட்டை இன்றும்
காணலாம். தந்வந்தரிசந்நிதியை நெடுநாள் பராமரித்து வந்த 'கருடவாகன பண்டிதர்' இந்த ஆரோக்ய சாலையையும் நிர்வகித்து வருவார் என்றும் கல்வெட்டு குறிக்கிறது. மேலும் இவனது காலத்திய கல்வெட்டுகளாக
 (A.R.E.No.64,65,70,74, of 1936-37)  (A.R.E.No.372,377 of 1953-54)
(A.R.E.No. 52 of 1892) ஆகியனவற்றை திருவரங்கம் கோயிலில் காணலாம். ஸ்ரீரங்கவிலாஸத்தின் மேற்குப் பகுதியில்
இவனது ஆட்சி காலத்தில் தான் மிகவும் அழகு வாய்ந்த 'வேணுகோபால கிருஷ்ணர் சந்நிதி' கட்டப் பட்டது. இவனது 15வது  ஆட்சிகாலக் கல்வெட்டு
(A.R.E.No.74 of 1892)
'திருக்குழல் ஊதும் பிள்ளை சந்நிதி' என்று குறிக்கிறது
• முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின்
இந்த கல்வெட்டிற்குப் பிறகு இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1238-1255) காலத்து கல்வெட்டு (A.R.E.No. 77 of 1936-37) ஒன்று  இவனது அமைச்சர்களான அய்யன் மழவராயன், சக்கரபாணி நல்லூர் பல்லவராயன் என்பவர்கள் வேண்டுகோளுக்கிணங்க  குதிரை வியாபாரியான குளமூக்கு நாவாயன் கொண்ட நம்பி என்பான் திருவரங்கம் கோயிலுக்கு தானமாக கொடுத்த 'குமாரநம்பி நல்லூர்' என்ற கிராமத்தை (கடமை ற்றும் அந்தராயம் ஆகிய) வரிகள் நீக்கிய கிராமமாக கொள்வதற்கு மன்னன் பிறப்பித்த ஆணை பற்றி கூறுகிறது. 
• போசள வீரசோமேஸ்வரனுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே
இருந்த நட்பு அல்லது பகை வெகு நாட்கள் நீடிக்கவில்லை. கி.பி. 1250-இல்
முடிசூடிய 'இரண்டாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன்' போசள
மன்னனுடன் பகைமை கொண்டான்.
'கர்நாடக யானைக்கு சிங்கம் போன்றவன்' (கர்நாடக கரிகல்ப கந்திரவ) என்று தன்னைக் கல்வெட்டுகளில் கூறிக்கொண்டான்.
 அவனது தம்பியான
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1264- இல் வீரசோமேஸ்வரனைப் போரில் கொன்று, பாண்டிய நாட்டில்
இருந்த போசளர் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வந்தான்.


    திருவரங்கம் பெரியகோயிலின் பொற்காலம்:-

-|முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1251 - 1271)  ஆட்சி|-

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த 'பாண்டிய பேரரசன்' ஆவான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான்.

•  'மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன்,எல்லாம் தலையானான் பெருமாள்,கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன்' போன்ற பல பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இறுதிச்சோழ மன்னனாக அறியப்படும் மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் வம்சம் முற்றிலும் அழிந்ததற்கான காரணங்களில் இம்முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சோழ நாட்டுப் படையெடுப்பும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

• இவன் பல கட்டிடங்களை திருவரங்கம் பெரியகோயிலில் எழுப்பியுள்ளான் என்பதோடு பல்வகையான அலங்காரங்களையும் செய்ததோடு தாராளமாக நன்கொடைகளையும் வழங்கினான். இதனால் அவன் புகழ் மிகவும் பெரிய அளவில் பேசப்படுகின்றது என்பதோடு அவன் காலத்துக் கல்வெட்டுக்களும்
(இரண்டாம் திருச்சுற்று வடக்குப் பக்கச்சுவர் - A.R.E.No. 45 of 1891),
(சந்தனமண்டபம் -A.R.E.No. 60 of 1892)
அவன் ஸ்ரீரங்கம் கோயிலைப் பொன்மயமாகச் செய்தான் என்று பாராட்டுகிறது.

•  திருவரங்கநாதர் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, விஷ்ணு நரசிம்மன் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவை இவனால் கட்டப்பட்டதாக அறிகிறோம். இந்தக் கட்டிடங்களும், இரண்டாம் பிரகாரமும் பொன்னால் வேயப்பட்டதாகவும் அறிகிறோம். இத்தோடு நில்லாமல் ஆதிசேடன் திருவுருவம், பொன்னாலாகிய பிரபை, பொன்னாலான பீடம், பொன் மகர தோரணம், பொன் கருட வாகனம் ஆகியனவும் பொன்னாலேயே அவனால் வழங்கப் பட்டிருக்கிறது. ஒரிசா எனப்படும் கலிங்க நாட்டரசனைப் போரில் எதிர்கொண்டு வெற்றி பெற்று அவனுடைய கருவூலத்தில் இருந்து கைப்பற்றிய பல பொருள்களைக் கொண்டு ஸ்ரீரங்கநாதருக்கு மரகத மாலை, பொன் கிரீடம், முத்தாரம், முத்து விதானம், பொன் பட்டாடை, பொன் தேர், பொன்னால் நிவேதனப் பாத்திரங்கள், குவளைகள் போன்றவற்றை வழங்கியுள்ளான். விலையுயர்ந்த பட்டாடைகளாலும், ஆபரணங்களாலும் திருவரங்கத் திருமேனியை அலங்கரித்து மகிழ்ந்திருக்கிறான்.

• காவிரியில் இரு படகுகளை விட்டு தனது பட்டத்து யானையை ஒரு படகில் ஏற்றி அதன் முதுகில் மன்னன் அமர்ந்தான். மற்றொரு படகில் ஏராளமான ஆபரணங்களும், அணிமணிகளும், பொற்காசுகளும் அவனால் நிரப்பப்பட்டுக் குவிந்து கிடந்தன. தன்னுடைய படகினது நீர்மட்டத்திற்கு மற்றொரு படகும் வரும் வரையில் அந்தப் படகில் பொன்னைச் சொரிந்து கொண்டே இருந்தான். பின்னர் அப்பொன்னையும், அணிமணிகளையும் இக்கோயில் கருவூலத்திற்குத் தானமாக வழங்கினான். தன்னுடைய எடை அளவிற்குத் தங்கத்தினாலே திருவரங்கநாதரின் விக்ரஹம் செய்து அதையும் தன் பெயரால் (ஹேமச்சந்தன ஹரி) வழங்க வைத்துக் கோயிலுக்கு அளித்தான். இவ்வாறு அவன் செய்த பல திருப்பணிகளை 'கோயில் ஒழுகு' நூல் கூறுகின்றது.
'பொன்வேய்ந்த பாண்டியன்' என்று புகழப்பட்ட 'ஹேமச்சந்தன ராஜா'வால் எடுப்பிக்கப்பெற்ற அரங்கனது தங்க விமானம், கருடன் சந்நிதி,தங்கமணி மயமான மண்டபம் ஆகிய விமானங்களும் திருவரங்கனுக்கே அணிவித்த கிரீடம் போல விளங்கின.

• இவனது ஆட்சிகாலத்தில் நடுவிற்கூற்றத்து துஞ்சலுடையான் வரந்தருவான் எடுத்தகை அழகியான் என்கிற பல்லவராயன் என்பான் திருவிக்கிரமன் திருவீதியில் தன்னுடைய மன்னன் நலம் வேண்டி, முக்கோல் பகவர்களான ஸ்ரீவைஷ்ணவ ஸந்நியாஸிகள் தங்கியிருப்பதற்காக  'சுந்தரபாண்டியன் மடம்' என்று தன் மன்னனின் பெயரிலேயே மடம் ஒன்றைக்கட்டியுள்ளான். 




இரண்டு மீன்சின்னங்கள்  பொறிக்கப்பட்டு சுதர்சன சக்கரத்தோடு காணப்படுகிற திருவாழிக்கல் கல்வெட்டு (A.R.E.No.99 of 1936-37) விக்கிரமசோழன் திருவீதியாகிய தெற்கு உத்திர வீதியில் தென்கிழக்கு மூலையிலுள்ள சுந்தரபாண்டியன் மடமாகிய ஸ்ரீமணவாளமாமுனிகள் சந்நிதி  முன்பு இன்றும் காணலாம்.
மேலும் இவனதுஆட்சிகால கல்வெட்டு (A.R.E.No.81,82,83,84,89 of 1938-39)
கல்வெட்டு (A.R.E.No.43 of 1948-49)
கல்வெட்டு (A.R.E.No.338 of 1952-53) ஆகியன திருவரங்கம் சந்தன மண்டபத்தில் உள்ளன.

• சடையவர்மன் சுந்தர பாண்டியனின் கைங்கர்யங்கள் 
(கோயிலொழுகு தரும் தகவல்)

      திருவரங்கத்தில் பல ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் மற்றும் பல அரசர்களும் கைங்கர்யங்கள் செய்து உள்ளனர். இதில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் (எ) சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்கு மட்டும் தனி சிறப்பு உண்டு. 'சுந்தரபாண்டியம் பிடித்தேன்' என்ற அருளப்பாடு உண்டு.

||சுந்தரபாண்டியம் பிடித்தேன் என்ற அருளப்பாடு காரணம்||

இந்த அரசன் திருவரங்கம் கோயிலுக்கு சமர்ப்பித்த கைங்கரியங்கள் அளவு கடந்தவை. இந்த அரசன் அரங்கனுக்கு சமர்ப்பித்த ஆபரணங்களின் புகழ் வட இந்தியா வரை பரவி 14ஆம் நூற்றாண்டு முகலாய படையெடுப்புக்கள் நடக்க இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுவதும் உண்டு.
பெருமாள் தன் திருவாராதனம் கண்டருளும் போது ராமானுஜர் பெயரோ அல்லது எந்த ஒரு ஆழ்வார்களின் பெயரும் கேட்பதில்லை. ஆனால் இரண்டு முறை “சுந்தரபாண்டியம் பிடித்தேன்” என்று அருளப்பாடு சாதிப்பதுண்டு.
பெருமாளுக்கு கண்ணாடி காட்டும் போது (வெள்ளி கண்ணாடி)
அர்க்யம்,பாத்யம் ஆசமணீயம் சேர்க்கும் படிக்கம் பிடிப்பதற்க்கும்  உண்டு.
சுந்தரபாண்டியம் பிடித்தேன் அருளப்பாடு
இதனை அனைவரும் அனுபவிக்க வேண்டுமென்றால் நம்பெருமாள் வெளி மண்டபங்களில் (பூச்சாற்று மண்டபம், வசந்த மண்டபம், பவித்ர மண்டபம், ஊஞ்சல் மண்டபம்) திருவாராதனம் நடைபெறும் போது காணலாம். 'சுந்தரபாண்டியம் பிடித்தேன்' என்ற அருளப்பாடு 800 ஆண்டுகளுக்கு மேல் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
இந்த அருளப்பாடுக்கு ஒரு காரணம் உள்ளது. “ஒரு முறை அரசன் சுந்தரபாண்டியன் பெருமாள் திருவாராதனம் நடைபெறும் போது சேவித்து கொண்டு இருந்தான். அப்போது பெருமாள் கைங்கர்யபாரர் பெருமாளின் படிக்கம் (தீர்த்தம் சேர்க்கும் பாத்திரம்) கொண்டு வர மறந்து விட்டார். அரசன் சுந்தரபாண்டியன் தனது கிரீடத்தை எடுத்து பெருமாளின் தீர்த்தத்தை பிடித்தான். இந்த காரணத்தினால் இன்றளவும் தீர்த்தம் சேர்க்கும் படிக்கத்தின் வடிவம் அரசனின் மகுடம் தலைகீழாக வைத்தது போல் இருக்கும்.
சுந்தரபாண்டியன் திருவரங்கத்தில் எண்ணற்ற கைங்கர்யங்களைச் செயதார்.
அவற்றுள் தலைசிறந்தது பிரணவாகார விமானத்திற்கு பொன்வேய்ந்த கைங்கர்யம்.
சுந்தர பாண்டியன் தங்கத்தினால் பல கைங்கர்யங்கள் செய்ததனால் “பொன்மேய்ந்த பெருமாள் சுந்தரபாண்டிய தேவர்” என்று சிறப்பு பெயர் பெற்றார்.
சுந்தர பாண்டிய அரசனின் மற்றொரு கைங்கரியம் நம்பெருமாள் பொதுவாக அணிந்து கொள்ளும் “பாண்டியன் கொண்டை” வைகுண்ட ஏகாதசி அன்றும் உபயநாச்சியார்களோடு திருச்சி வகையில் எழுந்தருளும் போதும் இந்த பாண்டியன் கொண்டை சாற்றப்படும்.
இந்த பாண்டியன் கொண்டையை பெருமாள் இரண்டு விதமாக சாற்றி கொள்வார் .
(இந்த பாண்டியன் கொண்டையில் மூன்று பகுதிகள் இருக்கும் (தத்வ த்ரயம் நிலை)
1) அடி பகுதி
2) வட்ட வடிவம் கொண்ட நடு பகுதி
3) குமிழ் பகுதி)

இந்த பாண்டியன் கொண்டை 19ஆம் நூற்றாண்டு பழுதாகி “வேங்கடாத்ரி ஸ்வாமிகள்” என்ற அடியவர் புனர்நிர்மானம் செய்த செய்தியும் உண்டு.

• சுந்தர பாண்டிய அரசனின் மற்றொரு கைங்கரியம்
      சுந்தர பாண்டியன் வடக்கே ஆந்திர மாநிலம் நெல்லூர் முதல் தமிழகத்தில் இருந்த சோழ ஹொய்சள மற்றும் கேரளத்தை ஆண்ட சேர அரசர்களையும் வெற்றி கொண்டதனால் “எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள்” என்ற சிறப்பு பெயருடன் விளங்கி வந்தார். தற்போது நம்பெருமாள் பவித்ர உற்சவம் கண்டருளும் மண்டபத்தின் பெயர் “சேரனை வென்றான்(சேனை வென்றான்) மண்டபம் ஆகும். இந்த மண்டபம் சுந்தரபாண்டியன் சேர அரசனை வென்றதன் நினைவாக கட்டியது.
(சேரனை வென்றான்) பவித்ர உற்சவம் மண்டபத்தில் நம்பெருமாள்
துலா புருஷ மண்டபம் பெயர் காரணம்:
“திருமுகத்துறையிலே ஒரு நிறையாக இரண்டு ஓடம் கட்டி அதில் ஒரு ஓடத்தில் தச்சுமுழத்திலே ஏழு முழம் இருக்கிற பட்டத்தானையின் மேலே தானும் தன்னுடைய ஆயுதங்கலோதேனிருந்து ஒரு ஓடத்திலே அந்த மட்டத்துக்சரியான ச்வேர்ணம் முத்து முதலான நவரத்னங்கள் ஏற்றி யானை யானை துலாபுருஷந தூக்கி …..”
            ஒரு தச்சு முழம் = 33 inch
தச்சுமுழத்திலே ஏழு முழம் இருக்கிற பட்டத்து யானை (33 × 7 = 231 inch)
19 அடி உயர யானையை ஒரு படகின் மேல் ஏற்றி அதற்கு மேல் அம்பாரியில் தானும் தனது ஆயுதங்களுடன் ஏறி அமர்ந்து கொள்வார். அதன் அருகில் மற்றொரு படகை நிறுத்தி தான் அமர்ந்த படகு எத்தனை ஆழம் இறங்குறதோ அதே அளவுக்கு இறங்க அந்த படகில் தங்கம், முத்து, நவரத்தினம் ஆகிய தனங்களை ஏற்றி துலாபாரம் போல் சமநிலையாக இருக்க வைத்து அந்த தனங்களை கொண்டு நான்கு கால் மண்டபம் கட்டியதால் இதற்கு துலா புருஷ மண்டபம் என்று பெயர்.
சுந்தரபாண்டியன் 24 நான்கு கால் மண்டபங்கள் கட்டினார்.இந்த நான்கு கால் மண்டபங்களுக்கு துலா புருஷ மண்டபம் என்று பெயர். இந்த மண்டபங்கள் இரண்டாம் திருசுற்று (ராஜ மகேந்திரன் திருவீதி) முதல் ஐந்தாம் திருசுற்று (அகனங்கன் திருவீதி) வரை பல்வேறு இடங்களில் அமைய பெற்றுள்ளன.

• பெருமாள் செல்வங்களை ஏற்க மறுத்தது:
“அந்த த்ரவ்யத்தை கைங்கர்யம் பண்ண உத்யோகிக்குமளவில் அந்தத்ரவ்யம் ஸபரிகரரான ஸ்வாமிக்குத் திருவுள்ளமாகாதபடியினாலே இரண்டு வருஷம் மறிபட்டுக் கிடந்தது....”
அரசன் தான் சமர்ப்பிக்கும் தனம் என்று பெருமையுடன் கொடுத்தபோது பெருமாள் இந்த தனங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து ஆரியப்படால் வாசலின் வெளியே இரண்டு ஆண்டுகள் கிடந்தன. தங்கம், வெள்ளி, வைரம், முத்து, பவளம் என செல்வங்கள் பெருமாள் மறுத்த படியினாலே திருவரங்க வாசிகள் எவரும் தொடாமல் சீந்துவாரற்று கிடந்தது.

• பெருமாள் செல்வங்களை ஏற்றுக்கொண்டது:
"அநந்தரம் அவனுடைய ஆர்த்தியாலேயும் அனுஸரணத்தினாலேயும் ஸபரிகரரான பெருமாள் திருவுள்ளமானவந்தரம் அந்த த்ரவயயத்தை கருவு கவத்திலே முதலிட்டு பண்ணின கைங்கர்யத்துக்கு…"
[விவரம் – கோயிலொழுகு]
இரண்டு ஆண்டுகள் பின்னர் சுந்தரபாண்டியன் இது பெருமாளின் சொத்துக்கள் என்றும் அவருடையதை அவரே எடுத்துக்கொள்ள வேண்டியது. தான் இதில் ஏதும் செய்யவில்லை என்று சரண் அடைந்த பிறகு பெருமாள் மனமுவந்து ஏற்றார்.

• சரஸ்வதி பண்டார நூலகம்:
சுந்தர பாண்டியன் திருவரங்கம் கோவில் திருப்பணிகள் செய்ததோடு இல்லாமல் பழங்கால சுவடிகளையும் பாதுகாத்து வந்தார். கோவிலில் சரஸ்வதி பண்டார நூலகத்தில் பூர்வாசார்யர்கள் அருளிச்செய்த நூல்களின் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பாக வைத்து அதற்கு பணியாளர்களை நியமித்து அனைவருக்கும் ஓலைச்சுவடிகள் கிடைக்க ஆவன செய்தார்.
இந்த சரஸ்வதி பண்டாரம் நூலகம் மூன்றாம் திருச்சுற்றில் இருந்தது.  சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவர் சன்னதிகள் அமைந்துள்ள பவித்ர மண்டபத்திற்கும் பூச்சாற்று உள்கோடை மண்டபத்திற்கும் இடையில் அமைந்துள்ள நடைமாளிகையில் இடது புறத்தில் அமைத்திருந்தது.
இந்த ஓலை சுவடிகள் அனைத்தும் முகலாய படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது.
(இன்றும் திருவரங்கம்
பெரிய கோயிலில் ஒரு நூலகம் உள்ளது ஆனால் அது  எவருக்கும் உபயோகமின்றி உள்ளது.)
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனை (கி.பி. 1251 - 1271)  
 அடுத்து 25 ஆண்டுகள் வரை எந்தவிதக் குழப்பமும், தொந்திரவும் இன்றி அரங்கநாதர் நிம்மதியாக இருந்து வந்தார்.
ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் அதாவது கி.பி. 1268-1308 ஆம் ஆண்டு காலத்தில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மட்டும் அல்லாமல், முக்கியமாய்த் தென்னகத்துக் கோயில்களுக்கும் மாபெரும் பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.
• போர்ச்சுக்கீசிய யாத்திரீகனான 'மார்க்கோபோலோ' பாண்டிய மண்டலத்திற்கு வந்து இப்பகுதியின் சிறப்பையும் செல்வச் செழிப்பையும் வியந்து எழுதியுள்ளார்.
 பாண்டிய நாட்டு மக்களையும், மன்னனையும் பற்றி அவர் எழுதியுள்ளவை அக்காலத்தில் நாட்டின் பெரும் செல்வத்தை மட்டும் குறிப்பிடாமல் மக்களின் உயர்ந்த பண்பையும் குறிப்பிடுகின்றது. தமிழ்நாட்டின் பெரும் செல்வ வளத்தையும் முத்துக்குளித்துறையின் வளத்தையும் பற்றிப் பெருமையாகப் பேசிய மார்க்கோபோலோ தமிழகத்து மக்கள் அனைவரும் இருமுறை குளித்துச் சுத்தமாக இருந்ததாகவும், குளிக்காதவர்களைத் தூய்மைக்குறைவுள்ளவர்களாகக் கருதியதையும், நீர் அருந்துகையில் உதட்டுக்கு மேல் வைத்துத் தூக்கிக் குடித்ததையும், மன்னனாகவே இருந்தாலும் தரையில் அமர்வதைக் கெளரவக் குறைவாய்க் கருதாததையும் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்.
• இத்தகைய யெருமைக்குரிய குலசேகர பாண்டியன் காலத்திலேயே பாண்டிய நாட்டில் பிரச்னைகள் ஆரம்பித்தன. இவனுக்குப் பட்டமஹிஷி மூலம் ஒரு மகனும், ஆசை நாயகி மூலம் இன்னொரு மகனும் இருந்தனர். பட்டத்து இளவரசன் சுந்தரபாண்டியன் என்னும் பெயருள்ளவன். நியாயமாய் இவனே பட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் “எம்மண்டலமும் கொண்டருளிய” என்னும் பட்டம் பெற்ற குலசேகரனோ, தன் ஆசை நாயகியின் மகனான வீரபாண்டியனுக்கே அரசு உரிமையை அளித்தான். இது இரு சகோதரர்களுக்குள் பகைமையை உண்டாக்கியது என்பதோடு அந்நியரைத் தென்னகத்தில் வரவும் வழி வகுத்தது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஸ்ரீரங்கம் கோயிலும், சிதம்பரம் கோயிலும், மதுரை மீனாக்ஷியம்மன் கோயிலும் ஆகும்.

• ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் அதன் அரசியல் பின்னணியையும் அடுத்த பதிவு - Postல பார்ப்போம்.

                 அன்புடன்

         ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
 E.P.I.இராமசுப்பிரமணியன் 



Wednesday, October 10, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 3)





• 6வது திருச்சுற்று



                       ||திருவிக்கிரமன் திருவீதி||

• 6வது திருச்சுற்று
 சக்கரம்,சங்கம் என்னும் துவாரபாலகர்களை வணங்கி விட்டு 'புவர்லோகம்' என்று அழைக்கப்படும்  6 வது திருச்சுற்றாகிய 'திருவிக்கிரமன்
திருவீதி' என்று அழைக்கப்படும் ப்ராகாரத்தினுள் நுழைவோம்.
ஒருபுறம் மதிலும் எதிர்பக்கத்தில் கட்டிடங்களும் காணப்படுகின்றன. 
இது ஜவுளிக்கடைகளும்,
பாத்திரக்கடைகளும் நிறைந்து ஒரு கடைவீதி மாதிரி அமைந்துள்ளது. இந்த
வீதியில் பெருமாள் திருவாகனங்கள் உலாப்போகும் காரணத்தால் இதற்கு
உள் திருவீதியென்றும் உத்திரவீதி என்றும் பெயர். திருக்கோயிலின் உள்துறை நிர்வாகிகள் தங்கும் வீதியாக  'உள்துறை வீதி'  என்றும்
கூறப்படுகிறது.
 யானைகட்டும்
மண்டபம்,உத்தராதிகள் (பாங்கூர்) சத்திரம், தைத்தேர் நிற்குமிடம், அர்ச்சகர்களின் திருமாளிகை, ஸ்ரீஉத்தம நம்பி திருமாளிகை, மேலக்கட்டைகோபுரம்(இதன் வழியாக வெளியே வந்தால், 7வது மேற்கு திருச்சுற்று மற்றும் தெப்பக்குளத்தை அடையலாம்), ஸ்ரீபுத்தங்கோட்டம் ஸ்வாமி திருமாளிகை, ஸ்ரீஎம்பார் திருமாளிகை, வடக்கு கட்டை கோபுர வாசல் ( இவ்வழியே
 7வது வடக்குச் சுற்று,
வடதிருக்காவேரி, திருமங்கை மன்னன் படித்துறை, தசாவதாரன் சந்நதி ஆகியவற்றை காணச் செல்லலாம்)
தாயார் சந்நதிக்கு செல்லும் வடபுறக்கோபுர வாசல், அதன் எதிரே
புரட்சித்துறவி ஸ்ரீராமானுஜர் தங்கியிருந்து ஸ்ரீரங்கத்து நிர்வாகத்தைக்
கவனித்த மடமாகிய
 'ஸ்ரீரங்கநாராயண
ஜீயர் ஸ்வாமி மடம்' என்ற பெயரில் தொன்று தொட்டு ஜீயர்கள்
பரிபாலனத்திலேயே இருந்து வருகிற மடம்
அஹோபில மடம்,
ஆஞ்சநேயர் சந்நதி,(பெரிய பெருமாள் திருவடி இங்குள்ளது)
கீழக்கட்டை கோபுர வாசல் ( இதன் வழியே 7வது கிழக்கு திருச்சுற்று, காட்டழகிய சிங்கர் கோயில் ஆகியவற்றிற்கு செல்லலாம். அஞ்சாவது கிழக்கு திருச்சுற்றிலுள்ள ஆயிரம் கால் மண்டபம், சேஷராயர் மண்டபம் கண்டுகளிக்க வழியான வெள்ளைக்கோபுரம் இந்த 6வது வீதியில் உள்ளது. அரையர்கள் திருமாளிகை, கோயில் கந்தாடைஅண்ணன் ஸ்வாமிதிருமாளிகை,
 மணவாள
மாமுனிகள் மடம் போன்றனவும் இதில்தான் உள்ளது. மணவாள மாமுனிகள்
தமது அவதார ரகசியத்தை உத்தம நம்பி என்னும் தமது சீடருக்கு இங்குதான்
காட்டியருளினார்.
இம்மடத்தின் தூண்களில் இந்நிகழ்ச்சி செதுக்கப்பட்டுள்ளது. பெரியபெருமாளின் திருப்பார்வை படும் இடம் 'மணவாளமாமுனிகள் மடம்' ஆகும் என்பது ஐதீகம்.
 மார்வாரி சத்திரம் ஆகியன உள்ளன. 5வதுதிருச்சுற்று நுழைவதற்கான நான்முகன் கோபுரம் (அ) ஸ்ரீரங்கா ரங்கா ரங்கா கோபுரமும் இந்த (தெற்கு) உத்தர வீதியில் உள்ளது.


    ||:அரசியல் வரலாற்று மரபு:||

வரலாறு (History) (கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: "ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு") என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

வாய்மொழி வரலாறுகளே வரலாற்றின் முதல் வடிவங்கள் எனலாம்.
எழுத்து வடிவ வரலாறும் எழுத்துவடிவ இலக்கியமும் வலுவாக உருவாகிய  பிறகு  'வாய்மொழி வரலாறு' அழியத் தொடங்கின.
  வரலாறென்பது இறந்தகாலத்தை நிகழ்காலம் வழியாக எதிர்காலத்துடன் இணைக்கும் ஒரு பெரிய சித்தரிப்புதான். தொடர்ச்சியை உருவாக்குவதே அதன் இலக்கு.

• வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்திருந்த மக்கள்
பெரிய பெரிய பெருங்கற்குழிகளில் (பாழிகளில்) பிணங்களைப் புதைக்கும்
வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இக் குழிகளில் பலவகையான இரும்புக்
கருவிகளும் சக்கரத்தைக் கொண்டு வனையப்பட்ட மட்பாண்டங்களும்
புதைக்கப்பட்டுள்ளன. இத்தகைய புதைகுழிகள் மேற்காசிய நாடுகளிலும்,
வடஆப்பிரிக்காவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
அவற்றுக்கும், தமிழகத்துக் குழிகட்கும் பல ஒற்றுமைகள் தோன்றுகின்றன.
ஆதிச்சநல்லூரிலும், கீழடி மற்றும் புதுச்சேரிப் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்ட
புதைபொருள்களுள் பல சைப்ரஸ் தீவிலுள்ள ‘என்கோமி’ என்னும்
இடத்திலும், பாலஸ்தீனத்திலுள்ள காஸா, ஜெரார் என்னும் இடங்களிலும்
கண்டெடுக்கப்பட்ட புதைபொருள்களைப் போலவே காணப்படுகின்றன.
இவற்றையெல்லாங் கொண்டு பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைகளையும்
குடிப் பெயர்ச்சிகளையும் ஒருவாறு யூகித்து அறியலாம்.

• இவ்வாறு ‘கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்தக்குடி'யான தமிழ்க்குடிச்சமூகம் சங்ககாலத்தின் தொடக்க காலத்திலேயே தன்னுடைய நிலவியல் எல்லைகளை தெளிவாக வகுத்துக்கொண்டிருந்ததை நாம் பல சங்கப் பாடல்களின் மூலம் அறியலாம். இவ்வாறு தன்னுடைய நிலவியல் எல்லைகளை தமிழ்ச்சமூகம் எப்போது பதிவுசெய்ததோ அதையே தமிழக வரலாற்றின் தொடக்கமாக கருதலாம்.
சிலப்பதிகாரம் தமிழ்நிலத்தை வரையறை செய்கிறது.
"நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு..." [வேனில்காதை]
(வடக்கே நெடியோனாகிய திருமால் நிற்கும் வேங்கட மலை, கீழே தொடிவளை அணிந்த தென்குமரியின் கடல். நடுவே உள்ளது தமிழ்நன்னாடு என்கிறார் இளங்கோவடிகள்)
இந்த நில அடையாளம் காலம் செல்லச்செல்ல மேலும் பரவலான அங்கீகாரம் பெற்றது என்பதை தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பனம்பாரனார்
"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து.."
என்று சொல்வதிலிருந்து காணலாம்.

• தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக தமிழ்மொழியே இருந்துள்ளது என்பதை சிலப்பதிகார வரியும் பனம்பாரனாரின் வரியும் காட்டுகின்றன. ‘தமிழ்கூறு நல்லுலகம்’ என்ற சொல்லாட்சி தமிழ்பேசப்படுவதனாலேயே இந்த நிலப்பகுதி தங்களுடையதாக ஆயிற்று என்று அன்றைய தமிழர் எண்ணியிருந்ததைக் காட்டுகிறது.
நிலம், மொழி என்னும் இவ்விரு சுயஅடையாளங்களும் உருவாகிவந்த காலகட்டத்தில் தமிழ் வரலாறு தொடங்குகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். பழந்தமிழ்நூல்கள் குறிப்பிடுவதுபோல திருப்பதிக்கு தெற்கே குமரிவரைக்கும் அரபிக்கடல் முதல் வங்காளவிரிகுடா வரைக்கும் விரிந்திருக்கும் நிலத்தை அந்த வரலாற்றின் களம் என்று வரையறை செய்யலாம்.
பழந்தமிழகத்தின் வரலாறானது பண்டைய எகிப்து,
பாபிலோனியா, சுமேரியா, ரோம், கிரீசு ஆகிய நாடுகளின் வரலாறுகளுடன்
தொடர்பு கொண்டுள்ளன.
தமிழக வரலாற்றைக் கீழ்க்காணுமாறு பகுத்துக் கொள்ளலாம்:
வரலாற்றுக்கு முற்பட்ட காலம், சங்க காலம், பல்லவர் காலம், பாண்டியர்
சோழரின் பேரரசுக் காலம், மத்திய காலம், பிற்காலம் என ஆறு காலங்களாக
வரையறுத்துக் கொள்ளலாம். இப் பல்வேறு காலங்களில் வாழ்ந்துவந்த
தமிழரின் வாழ்க்கை வரலாறுகளை ஆராய்ந்தறிவதற்கு நமக்கு உதவியுள்ளவை
புதை பொருள்கள், சங்க இலக்கியங்கள், தமிழ்நாட்டைப் பற்றி அயல்நாட்டு
வரலாற்று நூல்களில் காணப்படும் குறிப்புகள், புராணங்கள், சமய
இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், முஸ்லிம் வரலாற்று
ஆசிரியர்களின் குறிப்புகள், பிரிட்டிஷ் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனிகள்,
அரசாங்கங்கள் ஆகியவற்றின் ஆவணங்கள், டச்சு போர்ச்சுகீசியப்
பாதிரிகளின் நாட்குறிப்புகள், கடிதங்கள், அறிக்கைகள், புதுச்சேரி
ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புப் போன்ற ஆவணங்கள்
ஆகியவையாம். பிற்கால வரலாற்றிற்கு இந்திய விவரங்களின் ஆவணங்கள்
மிகப் பயன்படுகின்றன. தமிழகத்தில் கோயில்களிலும் குகைகளிலும்
அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களும் அவ்வக்
காலத்து மக்களின் கலை வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன. ஆகையால், தமிழக
வரலாறு எழுதும் முயற்சிக்கு அவை பெரிதும் துணைபுரிகின்றன.
ஆனால், விரிவான வரலாறு ஒன்று
எழுதுவதற்கு இவையும் போதுமானவை என்று கூறமுடியாது. தமிழகத்தில்
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் முப்பதினாயிரத்துக்கு மேற்பட்டவை
இன்னும் பதிப்பிக்கப்படாமலே உள்ளன. அவை வெளியாகக் கூடிய செய்திகள்
இப்போது தொகுக்கப்பட்டுள்ள செய்திகளுக்கு முரண்பாடாகவும், விளக்கங்
கொடுக்கக்கூடியனவாகவும், கூடுதலான தகவல்கள் அளிக்கக்கூடியனவாகவும்
இருக்கக்கூடும்.

  தமிழக வரலாற்றைத் தொகுக்க உதவும் கல்வெட்டுகள் பல்லவர்
காலத்தில்தான் தொடங்குகின்றன. பல்லவர்கள் காலத்திய கல்வெட்டுகள் ஏழு, எட்டாம்
நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை.
     பாண்டியர் சோழர் காலத்திய வரலாற்றைத் தொகுப்பதற்கும் அவர் காலத்திய
மக்கள் சமுதாயத்தின் நிலையை அறிந்து கொள்ளுவதற்கும்
கல்வெட்டுகளேயன்றி அக் காலத்துப் பொறித்து அளிக்கப்பெற்ற செப்பேட்டுப்
பட்டயங்களும் பெரிதும் துணை புரிகின்றன. வேள்விக்குடிச் செப்பேடுகளும்,
பெரிய சின்னமனூர்ச் செப்பேடுகளும் கிடைத்திராமற் போனால் ஏழு முதல்
பத்தாம் நூற்றாண்டு வரையிலான பண்டைய பாண்டியர் வரலாறும்,
களப்பிரரைப்பற்றிய சில தகவல்களும் நம் கைக்கு எட்டியிராது.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆளத்துவங்கிய, 18-ஆம் நூற்றாண்டில் தான்
இந்திய வரலாற்றை எழுத வேண்டிய கவனஈர்ப்பு
 அறியப்பட்டது எனலாம். ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் பெரும்பாலும் பேரரசர்கள், பரம்பரையாக ஆட்சி செய்வது போன்றவற்றையே எழுதிவந்தனர். அரசர் தவிர வேறு எந்தவிதமான பயனுள்ள அரசியல், சமூக அமைப்புகளைப்பற்றியும் இவர்கள் எவ்விதக் குறிப்பும் கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும் இந்திய மக்கள் சோம்பேறித்தனமான பிற்போக்கு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று ஆழமான எண்ணங்களைத் தம் மனதில் கொண்டே வரலாறை எழுதினர். பாகுபாடற்ற அணுகுமுறையுடன் இந்திய வரலாறு இவர்களால் பார்க்கப்படவில்லை என்னும் கருத்து இன்றளவிலும் உள்ளது.
 சர் வில்லியம் ஜோன்ஸ், சார்லஸ் வில்கின்ஸ், H.T. கோல்புரூக், H.H. வில்சன்,மேக்ஸ் முல்லர் உட்பட பல ஐரோப்பிய அறிஞர் பெருமக்கள் இந்திய நாகரிகத்தையும், பண்பாட்டையும் புரிந்துகொள்வதற்கும், இந்திய வரலாறு பின்பு சரித்திர ஆசிரியர்களால் எழுதப்படுவதற்கும் இவர்களது எழுத்து உதவியாக இருந்துவந்துள்ளது. இவர்களின் எண்ணமும் எழுத்தும் கூட ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாறு எழுதப்பட்டதற்கு காரணமாக அமைந்தது என்று கருதுவோரும் உண்டு.
ஜான் ஸ்டூவர்ட் எழுதிய பிரித்தானிய இந்தியாவின் வரலாறு (History of British India) என்னும் நூல் 1817-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 'இந்தியர்களின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் காட்டுமிராண்டித்தனமானது, காரண காரியங்களுக்கு எதிர்மறையானது' என்று இந்நூல் வலியுறுத்தியது. ஆங்கில அதிகாரிகள் இந்தியா வருவதற்கு முன் பயிற்சியின் போது இந்நூலை ஒரு பாடமாகவே கற்று வந்தனர். இந்நூல் இந்தியர்கள் குறித்த ஒரு மோசமான மனப்பான்மையை அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தியது.

வி. ஏ. சிமித் என்னும் ஆங்கில அதிகாரி, இது போன்று வந்தவர்தான். இவர் ஆக்ஸ்போர்டு இந்திய வரலாறு (The Oxford history of India) என்னும் நூலை எழுதினார். ஆனால் ஸ்டூவர்ட் மில் போன்று அல்லாமல் இந்தியர்களைக் குறித்து வின்சென்ட் சிமித் அவ்வளவு மோசமான எண்ணம் கொண்டிருக்கவில்லை. இருந்தாலும் இந்தியர்கள் 'ஆளத்தெரியாதவர்கள்' என விவரிக்கிறார். இதுபோன்று ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாற்றை எழுதுவதற்கு இந்தியச் சரித்திர ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்திய அரசுமுறை குறித்தும் அதன் மேன்மை குறித்தும் பலவாறு விளக்கிவந்தனர்.

பிற்காலத்தில் இந்திய வரலாறு அதன் உண்மையான பரிமாணத்துடன் எழுதப்படவேண்டும் என பல அறிஞர்கள் விரும்பி, அவ்வாறு எழுதப்பட்டும் வந்துள்ளது.
கல்வெட்டுகள்,செப்பேடுகள், ஓவியங்கள், சுவடிகள்,இலக்கியங்கள் ஆகியவற்றைக் கொண்டு 19ம் நூற்றாண்டு வரையிலான தென்னிந்திய வரலாறு கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
அவர்களால் உருவாக்கப்பட்டது.
கே.ஏ.நீலகண்டசாஸ்திரி தென்னிந்திய வரலாற்றை எழுதியதில் தனிப்பட்ட ஆளுமை செலுத்தியவர். அவருடைய வரலாற்று ஆய்வுகள் இன்றைக்கும் தமிழ்ச்சமூகம் குறித்த ஆழ்ந்தபுரிதலுக்கு உறுதுணையாக உள்ளது.

 முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு பற்றி அறிய முற்படும் போது,
சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பேரரசுகளே நான்கு பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்கள் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர், இதனால் உலகில் அழியாமல் வழக்கத்திலிருந்த சில பழமையான இலக்கியங்களின் வளர்ச்சி சாத்தியமானது. இவர்கள் ரோமப் பேரரசுடன் அதிகப்படியான கடல்வழி வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இப்பகுதியின் தலைமைக்காக இந்த மூன்று வம்சத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாக போரிட்டுக் கொண்டனர். மூன்று பேரரசுகளும் பாரம்பரியமாக ஆட்சி செய்துவந்த இந்தப் பகுதியை மூன்றாம் நூற்றாண்டில் நுழைந்த களப்பிரர்கள் விரட்டியதால் இப்பகுதியின் பாரம்பரிய ஆட்சி வடிவம் மாறியது.

பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் மீட்டெழுந்து களப்பிரர் ஆதிக்கத்தை முறியடித்து தங்களின் பாரம்பரிய பேரரசுகளை மீண்டும் நிலைநாட்டினர். வீழ்ந்திருந்த 'சோழர்கள்' ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும் பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் சோழப் பேரரசை விரிவுபடுத்தினர். வங்காள விரிகுடா பகுதியில் சோழப் பேரரசு சுமார் 3,600,000 கி.மீ அளவிற்குப் பரவி இருந்தது.
14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இசுலாமிய படைகளின் ஊடுருவல் காரணமாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டின் மையப்பகுதியில் சேர,சோழ,பாண்டியர்களாகிய பண்டைய மூன்று தமிழ் பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக, தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது. விஜயநகரப் பேரரசின் கீழ் 'தெலுங்கு பேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள்' தமிழ்ப் பகுதியை ஆட்சி செய்தனர். மராத்தியர்களின் குறுகிய கால வருகை தமிழ்ப் பகுதியில் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகைக்கு வழிவகுத்தது. பதினேழாம் நூற்றாண்டின் போது இவ்வாறு வணிகம் செய்ய வந்தவர்கள் இறுதியில் இந்தப் பகுதியின் பூர்வீக ஆட்சியாளர்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய 'சென்னை மாகாணம்' பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.
இப்பகுதி 'பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால்' நேரடியாக ஆட்சி செய்யப்பட்டது.

 இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு மொழியியல் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு 'தமிழ்நாடு' மாநிலம் உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவான பிறகு
அரசியல் நிலைமை மூன்று விதமான நிலைகளை அடைந்துள்ளது. 1947 ஆம் ஆண்டுக்கு பிறகு இருந்த காங்கிரசு கட்சியின் செல்வாக்கு 1960 ஆம் ஆண்டில் திராவிட கட்சியின் கொள்கைகளால் மாறியது. 1990 ஆம் ஆண்டின் இறுதி வரை இந்த நிலை நீடித்திருந்தது. திராவிட அரசியல் கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கூட்டணி அரசாங்கம் அமைக்கும் நிலையை தற்போது கொண்டிருக்கிறது.

• அரசியல் வரலாற்று மரபில் திருவரங்கம் பெரியகோயில்

திருவரங்கம் பெரியபெருமாள் திரேதாயுகத்துப் பெருமாள் என 'புராண மரபு' மூலம் நம்பப்படுகிறது. புராணத்தில் கூறப்படும் 'தர்மவர்மா' மற்றும் 'கிளிச்சோழன் என்னும் கிள்ளிவளவன்' ஆகியோரின் காலம் சரிவர
அறியமுடியவில்லை.

• சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் பெரிய கோயில் புகழ் பெற்றது. அதனால் இரண்டாயிரம் ஆண்டுகளாக திருவரங்கம் பெரியகோயில் ஆகம முறையிலான வழிபாடு நடப்பது அறியமுடிகிறது.  சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் "விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், 'ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன்' என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது" என வர்ணிக்கப்படுகிறது.
அகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தன்னார்) திருவரங்கம் பெரியகோயிலில் நடக்கும் 'பங்குனி உத்திரம்' திருவிழா பற்றி குறிப்புள்ளது.

• திருவரங்கம் பெரியகோயிலில்  வரலாற்று  கால கல்வெட்டுகள்
 சுமார் 800க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. Archaeological survey of India; Annual epigraphic Volume XXIV -ல் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் South Indian Temple Inscription என்ற தொகுப்பு நூலிலும் காணலாம். செப்பேடுகளைப் பற்றிய செய்திகள் Epigraphia indica களில் வெளிவந்தன.

    • கி.பி. 10ம் நூற்றாண்டு - இது சோழர்கள் தமிழ்நாட்டின்
ஆட்சியுரிமையில் சிறந்திருந்த காலம்.
ஏறத்தாழ 181 சோழர் கல்வெட்டுகள் திருவரங்கம் பெரியகோயிலில் உள்ளது.

• முதலாம் ஆதித்த கரிகாலன் (கி.பி.871-907) காலத்திய கல்வெட்டுகள் இரண்டு (A.R.E.No.69 & 70 of 1892) நான்காம் திருச்சுற்றான ஆலிநாடன் திருச்சுற்றில் அமைந்துள்ள கொட்டாரத்தின் தரைப்பகுதியில் உள்ளன.

• முதலாம் பராந்தகச்சோழன் (கி.பி. 907- 955) காலத்து எட்டு கல்வெட்டுகள்  (A.R.E.No. 71,72,73,95,345,415,417,418 of 1961-62)  திருவரங்கம் பெரிய கோயிலில் உள்ளன.
கி.பி. 953 ல் முதலாம் பராந்தக சோழனின் 17ம் ஆட்சியாண்டுக்
கல்வெட்டு ஒன்று (A.R.E.No. 72 of 1892) இம்மன்னன் இக்கோவிலுக்கு ஒரு வெள்ளி மற்றும் தங்கத்திலான  குத்துவிளக்கு
அளித்ததையும் அதற்கு , பட்டுத்திரி, நூல், நெய்யோடு சேர்த்து எரிப்பதற்காக 'பீமஸேனி கற்பூரம்' வாங்குவது உட்பட அதன்
நிலையான செலவினங்கட்கு 71 கழஞ்சு பொற்காசுகள் வழங்கியதையும் தெரிவிக்கிறது.

• இரண்டாம் பராந்தகன் எனும் சுந்தரச்சோழன் காலத்தைய (கி.பி. 957 -970) கல்வெட்டு(A.R.E.No.416 of 1961-62) ஒன்று மட்டும் சந்தன மண்டபத்தின் இடது பக்கம் அமைந்துள்ளது.

• உத்தமசோழன் (கி.பி.973-985) காலத்திய கல்வெட்டு (A.R.E.No.65 of 1938-39) ஒன்று இரண்டாம் திருச்சுற்றிலுள்ள சந்தன மண்டபத்தில் உள்ளது. அதில் 'பீமஸேனி கற்பூரம்' கலந்த நெய்யைக் கொண்டு திருவிளக்கு ஏற்றும் நடைமுறை கூறப்படுகிறது. கோயில் விளக்குகளிலே சேர்க்கப்படும் நெய்யை கோயில் ஊழியர்கள் தங்களது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தாதிருக்க பீமஸேனி கற்பூரம் நெய்யுடன் சேர்த்து எரிப்பது அக்கால  வழக்கம் ஆகும்.

• முதலாம் ராஜராஜன்(கி.பி.985-1014) மற்றும் முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012-1043) காலத்திய பத்து கல்வெட்டுகள் (A.R.E.No.19 of 1948-49 327,328,331,341,342,343,344,344a,370)  உள்ளன.

• முதலாம் ராஜாதிராஜன்
(கி.பி. 1018-1054) காலத்திய கல்வெட்டுகள் இரண்டு (A.R.E.No.333,334 of 1952-53) சக்கரத்தாழ்வார் சந்நிதி முன் அமைந்துள்ள மண்டப தாழ்வாரத்தில் உள்ளது.

  • இராசமகேந்திர சோழன் (கி.பி. 1058-1063) திருவரங்கம் பெரியகோயிலில் பல திருப்பணிகளைச் செய்துள்ளதை 'கோயிலொழுகு'  (இராசமகேந்திர சோழன் கைங்கர்யம்) மூலம் அறியலாம். இங்குள்ள இரண்டாம்
பிரகாரத்தில் முதலாம் பிராகாத்திற்கான திருமதிலை கட்டினான். இரண்டாம் திருச்சுற்றினை திருப்பணி செய்தவன் இவனே. அதனால் 'இராசமகேந்திரன் திருவீதி'
என்றே இன்றும் வழங்கப்படுகிறது.

• இராஜேந்திரச் சோழனின் மகன் வீர ராஜேந்திரன் அவன்மகன்  அதிராஜேந்திரன் (கி.பி. 1068-71) காலத்திய கல்வெட்டு ஒன்று மட்டும் நாழிகை கேட்டான் வாசலின் நுழைவு வாசல் பக்கச்சுவரில் உள்ளது.

• திருவரங்கம் பெரியகோயிலில் காணப்படும் சோழர்காலக் கல்வெட்டுகளில்  முதலாம் குலோத்துங்கச்சோழனின்  (கி.பி.1070-1122) கல்வெட்டுகளே மிகுதியானவை ஆகும். ஸ்ரீரங்கம் கல்வெட்டு எண். 26 தொடங்கி 108 முடிய உள்ள இவனது கல்வெட்டுகள் மூன்றாம் திருச்சுற்றான குலசேகரன் திருச்சுற்றில் அமைந்துள்ளன.

  • வைணவ சமய புரட்சித்துறவி ஸ்ரீஇராமானுஜர் (கி.பி.1020-1137) காலத்திலே நடந்த நிகழ்வுகள்  ஸ்ரீரங்க வரலாற்றின் 'பொற்காலம்' என்றே கூறலாம். இவரின் அரிய
சேவைகளை 'கோயிலொழுகு' என்னும் நூல் சிறப்பித்துப் பேசுகிறது. அவற்றை சமய மரபில் விரிவாக காணலாம். முதலாம் குலோத்துங்க சோழன் இராமானுஜருக்குப் பல கொடுமைகள் விளைவித்ததாகவும் இதனால் ராமானுஜர் சிலகாலம்
(சுமார் 13 ஆண்டுகள்) ஒய்சாளப் பேரரசின் மைசூர்பகுதியில் உள்ள மேல்கோட்டை- திருநாராயணபுரத்தில்  தங்கியிருந்தார் எனவும் கோயிலொழுகின் மூலம் அறிய முடிகிறது.

• விக்ரமச்சோழன் (கி.பி.1118-1135) ஆட்சிகாலத்திய. கல்வெட்டுகளை (A.R.E.No27,28,31,33,37,38,39,112,115,127,438,340,339)
மூன்றாம் திருச்சுற்றுகளில் காணலாம்.

  • இரண்டாம் குலோத்துங்கச்சோழன்  ( கி.பி. 1133-1150) காலத்திய  இரு கல்வெட்டுகள் (A.R.E.No.55,56 of 1936-37) நான்காம் திருச்சுற்றுகளில் உள்ளன. 

  • இரண்டாம் இராஜராஜச்சோழன்  ( கி.பி. 1133-1150) காலத்திய  கல்வெட்டுகள் (A.R.E.No.68 of 1936-37
122 of 1947-48) நான்காம்
திருச்சுற்றுகளில் உள்ளன. 

  • இரண்டாம் இராஜாதிராஜச்சோழன்  ( கி.பி. 1163-1178) காலத்திய  கல்வெட்டுகள் (A.R.E.No.63,73 of 1936-37
267,268,269 of 1930) நான்காம்
திருச்சுற்றில்  உடையவர்சந்நதி எதிரில் உள்ளன. 

 • மூன்றாம் குலோத்துங்க சோழன்(கி.பி.1178-1218)
 காலத்தில்
இத்தலத்தின் நிர்வாகம் இவனது நேரடிக் கவனத்தின் கீழ் கொண்டுவரப்
பட்டது. காலத்திய  கல்வெட்டுகள் (A.R.E.No.50,51 of 1948-49
61,75,76,89, of 1936-37 ; 17,18,119,120,113,148, of 1938-39
63,66,67,of 1892;
364 of 1953-54;
157,158, 335 of 1951-52;) நான்காம்,ஐந்தாம்
திருச்சுற்றில் உள்ளன.
இவன் சைவ- வைணவ சமயப் பூசல்களைத் தீர்த்து வைத்ததாகவும் அறிய முடிகிறது.

• மூன்றாம் இராஜராஜன் (கி.பி.1216-1256) காலத்திய கல்வெட்டுகள்
(A.R.E.No.71,72 of 1936-37;
102,133,134,147 of 1938-39
156 of 1956-57;
30,52 of 1948-49; 156,157,158 of 1951-52;
363 of 1953-54; 30,35 of 1936 -37;) ஆகியன 3,4,5 திருச்சுற்றுகளில் உள்ளன.

   •  கி.பி.1223-1225 திருவரங்கம் கோவில் கங்கர்களால் கவர்ந்து
கொள்ளப்பட்டது. கோவில் நிர்வாகம் சீர் குன்றியது.

• மூன்றாம் ராஜேந்திரன் (கி.பி. 1246-1279) காலத்தைய (A.R.E.No.148 of 1938-39;
64,65 of 1892; 317 of 1952-53; 368 of 1953-1954; கல்வெட்டுகள்
 5,4,3 திருச்சுற்றுகளில் காணலாம்.
 இவனது ஆட்சிக்குப்பிறகு காலத்தில் சோழநாடு பாண்டியர்களுடைய நாடாக மாற்றம் அடைந்தது.

...தொடர்ச்சி அடுத்த பதிவு - Post ல பார்ப்போம்.

                  அன்புடன்

         ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்